அமெரிக்க கப்பலை சுற்றி வளைத்த ஹவுதி படகுகள்.. அடுத்து நடந்த பரபர சம்பவம்.. செங்கடலில் பரபரப்பு
வாஷிங்டன்: செங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த வணிக கப்பல்கள் மீது ஹவுதி படை தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு அமெரிக்கா இப்போது பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே செங்கடல் பகுதியில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஹவுதி படைகள் டிரோன் அல்லது மினி லான்சர்கள் மூலம் இந்தத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான ஒரு சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே செங்கடல் பகுதியில் மற்றொரு பகீர் சம்பவம் இப்போது நடந்துள்ளது.
தாக்குதல்: செங்கடல் பகுதியில் அங்கே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் கப்பலை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி குழு தாக்கியுள்ளது. இதற்கு அமெரிக்க கடற்படை பதிலடி கொடுத்த நிலையில், அந்நாட்டின் ஹெலிகாப்டர்கள் ஹவுதியின் மூன்று படகுகளை மூழ்கடித்துள்ளது.
முதலில் ஹவுதிகள் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், பதிலுக்குத் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது..
செங்கடலில் கப்பல்களை குறிவைக்கும் ஹவுதி.. "பின்னால் இருப்பதே ஈரான் தான்!" அமெரிக்க உளவு துறை பகீர்
கப்பலுக்கு மிக அருகே அதாவது 20 மீட்டருக்குள் நான்கு சிறிய படகுகளில் வந்ததால் பதிலடி கொடுத்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதில் 4இல் மூன்று படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கப்பல் மீது தாக்குதல்: நான்காவது படகு அங்கிருந்து தப்பிச் சென்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்திற்குள் செங்கடல் பகுதியில் கப்பல் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.. முன்னதாக சிங்கப்பூர் கொடியுடன் வந்த டென்மார்க்கிற்குச் சொந்தமான கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீப ஆண்டுகளாகவே இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரித்தே வருகிறது. ஏமன் நாட்டை ஹவுதிக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில், அங்கிருந்து செங்கடல் பகுதியில் வரும் கப்பல்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்: காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் படை மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியே ஹவுதி படை செங்கடலில் வரும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச வர்த்தகத்தில் சுமார் 12 சதவிகிதம் இந்த செங்கடல் பகுதியில் தான் நடக்கிறது. எனவே, இங்குக் கடக்கும் சிறிய தாக்குதல் கூட அது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அஞ்சப்படுகிறது.
முன்னதாக இது குறித்து அமெரிக்க மூத்த ராணுவ அதிகாரி கூறுகையில், "செங்கடலில் ஈரானியர்கள் தான் ஆக்டிவாக உள்ளனர். அங்கே உள்ள ஹவுதிக்கள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதனால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டு கப்பல்கள் அந்த பாதையில் செல்லவே அஞ்சுகிறோம்" என்றார்.
அச்சம் ஏன்: ஹவுதிக்கள் தொடர்ந்து நடத்தி வரும் இதுபோன்ற தாக்குதல்களால் குறைந்தது 44 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது சர்வதேச வர்த்தகத்தையும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. தெற்கு செங்கடலில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதும் அந்த வழியாகப் பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன் என்ற முன்னெடுப்பை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. ஒரே வாரத்தில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவு கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications