"இந்தியாவை உன்னிப்பாக கவனிக்கிறோம்!" இந்திய அமைச்சர்கள் முன்னிலையில்.. அமெரிக்கா கூறிய பரபர கருத்து
வாஷிங்டன்: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்த நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
Recommended Video

உக்ரைன் மீது கடந்த பிப்.24ஆம் தேதி ரஷ்யா முழு வீச்சிலான போரைத் தொடங்கிய நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்தது. ரஷ்யா உடன் இருந்த நீண்ட கால உறவு காரணமாக இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தது.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை உலக நாடுகள் வெளிப்படையாக எதிர்க்கவில்லை என்றாலும் கூட அமெரிக்காவுக்கு இது அதிருப்தியையே உருவாக்கி இருந்தது.

சந்திப்பு
இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பைடன் இடையே சந்திப்பு நடைபெற்றது. கடந்த மார்ச் மாதத்திற்குப் பின்னர், இரு தலைவர்களும் நேற்று தான் ஆலோசனை நடத்தி இருந்தனர். இருதரப்பு நாடுகளுக்கு இடையே உறவை மேம்படுத்த இந்த சந்திப்பு உதவும் என்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, தெற்காசியாவில் நிலவும் சூழல் , சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

உக்ரைன் போர்
குறிப்பாக உக்ரைன் போர் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பை தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரை சந்தித்தனர். இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க இந்தச் சந்திப்பு உதவும் என்று கூறப்பட்டது.

மனித உரிமை மீறல்கள்
இந்தச் செய்தியாளர் சந்திப்பிற்குப் பின்னர் 4 பேரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது இந்தியாவில் அதிகரிக்கும் மனித உரிமை மீறல்கள் அமெரிக்கா கண்காணித்து வருவதாக ஆண்டனி பிளிங்கன் கூறினார். இது குறித்து ஆண்டனி பிளிங்கன் மேலும் கூறுகையில், "மனித உரிமை உள்ளிட்ட பொதுவான விவகாரங்களில் நாங்கள் இந்தியா பற்றி தவறாமல் ஆலோசிப்போம்.

கண்காணிக்கிறோம்
இந்தியாவில் சில அரசுகள், காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளால் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகிறது. அங்கு நடைபெறும் நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்தார். இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாக ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தாலும் கூட, கூடுதல் தகவல்கள் எதையும் அவர் கூறவில்லை. அவரை தொடர்ந்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இது குறித்து கருத்து கூறவில்லை.

சில நாட்களில்
இந்தியாவில் மனித உரிமைகள் அதிகரித்து வருவதாகவும் இருப்பினும் இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசை விமர்சிக்க அமெரிக்கா தயங்குவதாகவும் சமீபத்தில் தான் அமெரிக்க எம்பி இல்ஹான் ஓமர் விமர்சித்து இருந்தார். "இந்தியாவில் இருக்கும் முஸ்லிம் மக்களை மோடி என்ன செய்ய வேண்டும். எப்போது தான் நாம் இந்தியாவை நமது கூட்டாளியாகக் கருதுவதை நிறுத்துவோம்" என்று கேள்வி எழுப்பி இருந்தார். இப்போது சில நாட்களிலேயே இந்தியா அமைச்சர்கள் முன்னிலையில் ஆண்டனி பிளிங்கன் இது போன்ற கருத்துகளைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications