முடங்கியது அமெரிக்கா.. டிரம்ப் பிடிவாதத்தால் பல கோடி அமெரிக்கர்களுக்கு சம்பளம் கிடைக்காது! ஷாக்
வாஷிங்டன்: செலவினங்கள் தொடர்பான மசோதாவை அமெரிக்க செனட் சபையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதன் காரணமாக அமெரிக்கா முடங்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய ஊழியர்களைத் தவிர மற்ற அனைத்து பெடரல் ஊழியர்களும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். கடந்த 6 ஆண்டுகளில் அமெரிக்கா ஷட் டவுன் ஆவது இதுவே முதல்முறையாகும்.
அமெரிக்காவில் செலவினங்கள் குறித்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றப்பட வேண்டும். அடுத்த நிதியாண்டிற்கான அமெரிக்க அரசின் செலவினங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்த மசோதா நிறைவேற்றப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அமெரிக்க அரசால் செலவினங்களைத் தொடர்ந்து செய்ய முடியும்.

நிறைவேறவில்லை
செலவினங்கள் தொடர்பான இந்த இடைக்கால நிதி மசோதாவுக்கு அமெரிக்காவின் மேல்சபையான செனட்டில் இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க, அதிபர் டொனால்ட் டிரம்ப், பெடரல் அரசு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக எச்சரித்து பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளார். செனட்டில் சமீபத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இடைக்கால மசோதாவுக்கு ஆதரவாக 55 வாக்குகளும், எதிராக 45 வாக்குகளும் பதிவாகின.
எதிர்ப்பு வாக்குகளை விட ஆதரவு வாக்குகள் அதிகமாக இருக்கே.. அப்போ மசோதா நிறைவேறியதாகத் தானே அர்த்தம் என்று உங்களுக்கு டவுட் வரலாம். அமெரிக்க செனட்டில் மொத்தம் 100 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 53 எம்பிக்களும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 45 எம்பிக்களும் உள்ளனர். இது போக சுயேட்சை எம்பிக்கள் இருவர் உள்ளனர்.
அமெரிக்கா முடங்கியது
நிதி மசோதாவை நிறைவேற்ற அதற்குக் குறைந்தபட்சம் 60 வாக்குகள் தேவை. சுயேட்சை எம்பிக்கள் குடியரசுக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் நிதி மசோதாவுக்கான ஆதரவு 55ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், ஜனநாயகக் கட்சியினர் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் தேவையான 60 எம்பிக்கள் ஆதரவு கிடைக்காததால் அமெரிக்கா முடங்கியுள்ளது.
நிதி மசோதா நிறைவேறாமல் போனதால் இப்போது அமெரிக்கா முடங்கியுள்ளது. அமெரிக்காவில் சரியாக நள்ளிரவு 12:01 மணிக்கு (புதன்கிழமை), அரசு முடங்கியிருக்கிறது. இதனால் அத்தியாவசியமற்ற சேவைகளை அனைத்தும் நிறுத்தப்படும். இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படலாம்.. பொருளாதார அறிக்கைகள் வெளியிடுவது தாமதமாகலாம்... மேலும் ஆராய்ச்சி மையங்கள் முதல் சிறு வணிகக் கடன் அலுவலகங்கள் வரை அனைத்தும் மூடப்படும்.
ஊதியம் கிடைக்காது
ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு ஏஜெண்டுகள் மற்றும் ஏடிசி எனப்படும் விமானப் போக்குவரத்துக் கண்ட்ரோலர்கள் ஆகியவை அத்தியாவசியப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள். எனவே, அவர்கள் தங்கள் வேலையைத் தொடர்வார்கள். ஆனால் முடக்கம் முடியும் வரை அவர்களுக்கு ஊதியம் கிடைக்காது. ஏழை மக்களுக்கு உதவும் சோஷியல் சர்வீஸ் மற்றும் மருத்துவக் காப்பீட்டுச் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும்.
ஆனால், இதைத் தாண்டிய அத்தியாவசியமற்றதாக கருதப்படும் பல ஆயிரம் ஊழியர்கள் தற்காலிக விடுப்பில் அனுப்பப்படுவார்கள். இதில் அதிகம் பாதிக்கப்படும் துறை என்றால் கல்வித் துறை தான். கல்வித் துறையில் சுமார் 90% ஊழியர்களுக்குக் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள்.
சிக்கல் என்ன
இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த மசோதாவில் செலவினங்கள் குறித்து முடிவெடுக்க டிரம்ப்பிற்கு கூடுதல் அதிகாரம் இருக்கிறது. இதை மேலும் குறுகிய காலத்திற்கு நீடிக்கக் குடியரசு கட்சியினர் விரும்புகிறார்கள். ஆனால், இந்த நடைமுறை இனி தேவையில்லை. இதை நிறுத்த வேண்டும் என்பது ஜனநாயகக் கட்சியினரின் வலியுறுத்தலாக இருக்கிறது.
மறுபுறம் அமெரிக்காவில் ஹெல்த் இன்சூரன்ஸ்கள் ரேட் ரொம்பவே அதிகமாக இருக்கும். இதனால் ஏழை மக்களால் அதை எடுக்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசே ஏழை மக்களுக்குக் காப்பீடு எடுக்க மானியம் கொடுக்கும். இருப்பினும், இதுபோல மானியம் கொடுப்பதற்கான சட்ட மசோதா இந்தாண்டுடன் முடிகிறது. அதை நீடிக்க ஜனநாயகக் கட்சி விரும்பும் சூழலில், அதை ஏற்க டிரம்ப் தயாராக இல்லை. இந்த இரண்டும் தான் மோதலுக்குப் பிரதானக் காரணமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications