மும்பை தாக்குதல் குற்றவாளி.. ராணா நாடு கடத்தப்படுவது கன்பார்ம்.. அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி
வாஷிங்டன்: தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என்று மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணா அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கடைசி மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், தஹவ்வூர் ராணா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது உறுதியாகியுள்ளது.
நாட்டின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாருமே மறக்க முடியாத ஒரு சம்பவம் நடைபெற்றது. அந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி லஸ்கர் இ தொய்பா மூலம் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் மும்பையில் முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தாக்குதலில் சுமார் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் இந்திய வரலாற்றில் மிக மோசமான தாக்குதல் ஆகும். இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. மும்பையில் தாக்குதல் நடந்த இரண்டு நிமிடத்தில் மும்பையில் முக்கியஸ்தர்கள் வெளிநாட்டினர் வசிக்கும் நாரிமன் இல்லத்திலும், லெபர்ட் கஃபோவிலும் தாக்குதல் நடத்தினார்கள். 25 பேர் வரை இந்த தாக்குதலில் பலியானார்கள். இதில் இஸ்ரேலை சேர்ந்த 4 பேர் பலியானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை தாக்குதலில் தஹவ்வூர் ராணாவின் பங்கு முக்கியமானது. இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் நுழைய திட்டம் வகுத்து கொடுத்த இவர், பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பயங்கரவாதி ஆவார். தஹவ்வூர் ஹுசைன் ராணா அமெரிக்காவில் கடந்த 2009-ல் பிடிபட்டார். விசாரணையில், மும்பை தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.
தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டார். தற்போது லாஸ் ஏஞ்சல்சில் உள்ள மெட்ரோ பாலிட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராணா, தான் நாடு கடுத்தப்படமால் இருக்க அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடைசி வாய்ப்பாக இருந்த உச்ச நீதிமன்றம் ராணாவின் கோரிக்கையை நிராகரித்தது.
இதனால், ராணா நாடு கடத்தப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதற்கான வழிமுறைகள் சாத்தியமாகியுள்ளன. குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே உள்ளது. இந்த ஒப்பந்தம் அடிப்படையில் ராணா நாடு கடத்தப்படுவார் எனத்தெரிகிறது. ராணா விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு அவர் நீதி விசாரணையை எதிர்கொள்வார் எனத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications