US Tariff: இந்தியா மீது பொருளாதார தடை கிடையாது.. புதினை சந்தித்த பின் அடங்கிய டிரம்ப்.. வெளியான குட்நியூஸ்
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 2ம் நிலை பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியிருந்தார். இந்நிலையில் தான் தற்போது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டுள்ளார். அமெரிக்காவில் நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடனான சந்திப்புக்கு பிறகு டிரம்ப் அளித்த பேட்டியில், ‛‛ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு இரண்டாம் நிலை பொருளாதார தடைகள் இப்போதைக்கு இல்லை'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் டிரம்ப் நம் நாட்டுக்கு குட்நியூஸை தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். 25 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்துவிட்டது. அடுத்தக்கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு இந்த மாத இறுதியில் அமலுக்கு வர உள்ளது.

இதனால் நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இந்தியா தொடர்ந்தால் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டி உள்ளார்.
2ம் நிலை பொருளாதார தடை
அதுமட்டுமின்றி உக்ரைன் போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனை மீறி நம் நாடு கச்சா எண்ணெய் வாங்குவதை வைத்து 25 சதவீத வரியை டிரம்ப் போட்டார். அதுமட்டுமின்றி ரஷ்யாவுடன் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கினால் 2ம் நிலை பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்டியது.
அதாவது அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாட்டுடன் பிற நாடுகள் வர்த்தகம், உறவு வைக்கும்போது அதனை சுட்டிக்காட்டி அந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிப்பது தான் 2ம் நிலை பொருளாதார தடை என்று சொல்வார்கள். அந்த வகையில் தற்போது ரஷ்யாவிடம் இருந்து சீனாவும், நம் நாடும் தான் அதிக கச்சா எண்ணெய் வாங்குகிறது. இந்த பணத்தை வைத்து தான் ரஷ்யா, உக்ரைனில் போர் முன்னெடுக்கிறது என்று டிரம்ப் கூறி வரும் நிலையில் 2ம் நிலை பொருளாதார தடை விதிக்கப்படும் என்று மிரட்டினார்.
இதற்கிடையே தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு நேற்று அமெரிக்காவின் அலஸ்காவில் நடந்தது. 2018 ம் ஆண்டுக்கு பிறகு புதின் - டிரம்ப் ஆகியோர் சந்தித்து கொண்டார். உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தொடர்பாக இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு சுமூகமாக நடந்தது. இருப்பினும் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.
இருப்பினும் புதின் - டிரம்ப் சந்திப்பு நம் நாட்டுக்கு ஒரு குட்நியூஸை கொண்டு வந்துள்ளது. அதாவது இந்த சந்திப்புக்கு பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் Fox New-க்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடனான சந்திப்பு நன்றாக நடந்து முடிந்தது. இந்த சந்திப்புக்கு 10க்கு 10 மதிப்பெண் கொடுக்கலாம். ரஷ்யா மற்றும் அதனுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு இரண்டாம் நிலை பொருளாதார தடைகளை விதிப்பது பற்றி உடனடியாக பரிசீலனை செய்யவில்லை. இதுபற்றி பரிசீலனை செய்ய இன்னும் 2 அல்லது 3 வாரங்கள் அல்லது இன்னும் கூடுதல் காலம் வரை ஆகலாம்.
நான் இப்போது இரண்டாம் நிலை பொருளாதார தடைகளை விதித்தால் அது அவர்களுக்கு மோசமான நிலையை ஏற்படுத்தும். ஆனால் அதுபற்றி இப்போதைக்கு நாங்கள் எதுவும் நினைக்கவில்லை. என்னை பொறுத்தவரை இந்த மீட்டிங் நன்றாக சென்றது'' என்றார். புதின் உடனான சந்திப்புக்கு பிறகு டொனால்ட் டிரம்ப் மிகவும் சாப்ட்டாக காணப்பட்டார். ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடுகள், வர்த்தக நாடுகளை நோக்கி அவர் முன்பு காட்டிய ஆக்ரோஷத்தை காட்டவில்லை. இதன்மூலம் ரஷ்யா உடனான வர்த்தகத்தை தொடர்ந்து மேற்கொண்டாலும் கூட நம் நாடு இப்போதைக்கு அமெரிக்காவின் 2ம் கட்ட பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்காது. இது நமக்கான குட்நியூஸாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications