அமெரிக்கா வரி உயர்வு.. இந்தியாவுக்கு 66% ஏற்றுமதி பாதிப்பு.. சீனா, வியட்நாமுக்கு செம லக்
வாஷிங்டன்: இந்தியா பொருட்களுக்கான அமெரிக்க வரியை 50 சதவீதம் உயர்த்தி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். 50 சதவீதம் வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதியில் 66 சதவீதம் பாதிக்கப்படும். இந்தியா கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்படும் நிலையில் அமெரிக்கா சந்தைகளில் சீனா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள் கல்லா கட்டி பயனடைய உள்ளன.
இணை பிரியா நண்பர்களாக இருந்த இந்தியாவும், அமெரிக்கா இடையே சமீபகாலமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து அவர் எடுக்கும் பல திடீர் முடிவுகளால் இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது. முன்பு விசா விவகாரம் தீவிரமாக இருந்த நிலையில், தற்போது வரி விவகாரம் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது.

வரிக்கு மேல் வரி
உக்ரைன் - ரஷ்யா போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்தன. இந்த போர் உலக பொருளதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முக்கியமாக ரஷ்யா தங்களது பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக சலுவை விலையில் கச்சா எண்ணெய் விற்பனையில் இறங்கியது.
இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, இந்தியாவை பழிவாங்கும் விதமாக வரி உயர்வு நடவடிக்கையில் இறங்கியது. இந்திய பொருட்களுக்கான அமெரிக்க வரியை 25 சதவீதம் உயர்த்தியிருந்தது. இது கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி அமலுக்கு வந்துவிட்டது.
இன்று முதல் அமல்
ஆனால் அந்த வரி அமலுக்கு வருவதற்கு முன்பாகவே டிரம்ப் இந்தியா மீது மேலும் 25 சதவீதம் வரியை உயர்த்தியிருந்தார். இதன் காரணமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த கூடுதல் வரி உயர்வுடன் சேர்த்து 50 சதவீதம் வரி உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளது.
இது தொழில் நிறுவனங்களுக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. டிரம்ப் வரி உயர்வில் உறுதியாக உள்ள நிலையில், இந்தியாவும் தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை, அமெரிக்காவின் நடவடிக்கைக்கு அடிபணிய மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
60 பில்லியன் டாலர்
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் நேரத்தில், பல நாடுகள் இதில் பலனடையவும் செய்கின்றன. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி (GTRI) நிறுவனத்தின் ஆய்வுபடி, இதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி, நகை, பர்னிச்சர், தளவாடங்கள் உள்ளிட்ட 60.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை பாதிக்கும் என்று கூறியுள்ளனர்.
வரி உயர்வு காரணமாக இந்திய நிறுவனங்கள் குறைந்து விலைக்கு விற்க முடியாத நிலை உள்ளது. அமெரிக்க நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களிடம் பொருட்களை அதிக விலைக்கு வாங்க முடியாது. இந்த இடைவெளியை பயன்படுத்தி சீனா, வியட்நாம், மெக்ஸிகோ நாடுகள் அமெரிக்க சந்தையில் கல்லா கட்டி வருகிறார்கள்.
66 சதவீதம் ஏற்றுமதி பாதிப்பு
அதிகளவு தொழிலாளர்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியில் 70 சதவீதம் குறைக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக வரும் நாட்களில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 66 சதவீதம் குறைந்து, சுமார் 86.5 பில்லியன் டாலர் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி சரிவால் 2025 நிதியாண்டில் 86.5 பில்லியன் டாலர் என்ற நிலையில் இருந்து 2026 நிதியாண்டில் 49.6 பில்லியன் டாலருக்கு சரிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 66 சதவீதத்தில் இருந்து 43 சதவீதமாக குறையும். உற்பத்தி குறைவதால் பலர் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீனா, வியட்நாமுக்கு லக்
சீனா, வியட்நாம், துருக்கி, பாகிஸ்தான், மெக்ஸிகோ, நேபாளம், கௌத்தமாலா, கென்யா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவில் இந்தியா விட்ட இடத்தை பிடித்து பயன்பெறவுள்ளன. வரி நடவடிக்கை சரி செய்தாலும், இந்தியா அதில் இருந்து மீண்டு வருவதற்கு அதிக காலம் எடுக்கும். இந்த நாடுகள் நீண்டகால பயனை பெறும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications