ஓடவும் முடியாது.. ஒளியுவும் முடியாது.. விசா விவகாரத்தில் அமெரிக்கா அடுத்த அதிரடி
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு அமெரிக்காவில் மற்ற நாட்டினருக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக புகார் உள்ளது. இந்நிலையில் விசா மற்றும் குடியுரிமைக்கு சமூகவலைதளங்களில் குறிப்பிட்ட பதிவுகளை போடக்கூடாது. அப்படி செய்தால் உங்களுக்கான விசா ரத்து செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிர்ச்சிகளும், சர்ச்சைகளும் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. சட்டவிரோத குடியமர்ந்தவர்களை வெளியேற்றிய டிரம்ப் நிர்வாகம், தற்போது அமெரிக்காவில் கல்வி படிக்கும் வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் பிரிவு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உங்கள் சமூகவலை பதிவுகளால் உங்களின் அமெரிக்கா விசாவை நிராகரிக்கவோ அல்லது திரும்பப் பெறவோ முடியும்." என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது உலகளவு மீண்டும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிவிப்பில், "உங்களின் சமூகவலைதள கணக்குகளை தீவிரமாக கண்காணிப்போம். யூதர்களுக்கு எதிராகவும், அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தை விமர்சிப்பவர்களுக்கும் விசா மற்றும் குடியிருப்பதற்கான அனுமதி மறுக்கப்படும்."என்று அமெரிக்கா பொது விவகாரத்துறை துணை செயலாளர் ட்ரிசியா மெக்லாஃப்லின் தெரிவித்துள்ளார்.
மேலும் ட்ரிசியா மெக்லாஃப்லின், "உலகில் உள்ள எந்த தீவிரவாத இயக்கங்களுக்கும் அமெரிக்காவில் இடமில்லை. அவர்களுக்கு விசாவோ, க்ரீன் கார்டோ அனுமதிக்க இயலாது. யூத எதிர்ப்பு என்று சமூகவலைதளங்களில் செய்யப்படும் பதிவுகள், அமெரிக்காவால் தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸ், லெபனான் ஹிஸ்புல்லா, ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆகியோருக்கு ஆதரவான பதிவை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
இவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள், தீவிரவாதத்துக்கு ஆதரவாக இருப்பவர்கள் என்ற நிலையில் உறுதியாக இருக்கிறோம். எனவே சமூக வலைதளங்களில் யூத எதிர்ப்பு, யூத எதிர்ப்பு தீவிரவாதிகளுக்கு ஆதரவு உள்ளிட்ட யூதத்துக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முறை உடனடியாக அமலுக்கு வருகிறது.
இது அமெரிக்காவுக்கு கல்விக்காக வரும் மாணவர்களுக்கான விசா மற்றும் க்ரீன் கார்டு சேவைகளுக்கும் பொருந்தும். " என்று கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த சில வாரங்களாக டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், நூற்றுக்கணக்கான மாணவர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதிகாரபூர்வமாகவே அறிவித்துவிட்டனர்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, "கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 300 பேரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடர்ந்து பாய்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க குடிமக்களாக இல்லாதவர்களுக்கு, அமெரிக்க குடிமக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் பொருந்தாது. விசா வழங்குவதையோ, மறுப்பதையோ நீதிபதிகள் அல்ல.. நாங்கள் தான் முடிவு செய்வோம்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications