இனி ஆன்லைன் வகுப்புகள்தான்.. இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படும் அபாயம்
வாஷிங்டன்: கொரோனா சிக்கலால் அமெரிக்காவில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் நிலை உருவாகி உள்ளது.
கொரோனா தொற்று நோய் அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 30,40,833 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 1,32,979 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இத்தகைய பேரழிவை தொடர்ந்து அமெரிக்காவில் கல்வி நிறுவனங்கள் வகுப்புகளை தொடங்குவது குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், அனைத்து வகுப்புகளையும் ஆன்லைன் முறைக்கு மாற்ற உள்ளதாக அமெரிக்கா பல்கலைக் கழகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் வெளிநாடுகளில் இருந்து கல்வி கற்க மாணவர்கள் வருவதற்கான விசா இனி வழங்கப்பட மாட்டாது என US Immigration and Customs Enforcement (ICE) தெரிவித்திருக்கிறது. இதனால் இந்திய மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் பாதிப்புக்குள்ளாவார்கள்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் கல்வி பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது அல்லது அவர்கள் படித்து வரும் பல்கலைக் கழகங்களால் வெளியேற்றப்படும் சூழ்நிலை உருவாகும்.
அமெரிக்காவில் இந்தியா, சீனா, தென்கொரியா, செளதி அரேபியா மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் கல்வி கற்று வருகின்றனர். இதற்காக மட்டுமே அமெரிக்காவில் தங்கியும் உள்ளனர்.
உதாரணமாக ஹார்வார்டு பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில், பல்கலைக் கழக வளாகத்தில் தங்கி இருக்கும் மாணவர்கள் உட்பட அனைவருக்கும் அனைத்து பாடங்களும் இனி ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது. இதனால் இயல்பாகவே வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவின் பல்கலைக் கழகங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்கா வாழ் இந்திய மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications