தைவானை சீண்டுவது சீனாவுக்கு பேராபத்து.. "நெருப்புடன் விளையாடாதீர்கள்".. அமெரிக்கா பகிரங்க வார்னிங்
வாஷிங்டன்: தைவான் மீது படையெடுத்தால் சீனாவுக்கு அது பேராபத்தாக முடிந்துவிடும் என்று அமெரிக்க ராணுவத் தலைமை தளபதி மார்க் மைலி கடுமையாக எச்சரித்துள்ளார்.
தைவானுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அமெரிக்க ராணுவத்தை நேருக்கு நேர் சீனா சந்திக்க வேண்டி வரும் என்றும் அவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
அமெரிக்கா வராவிட்டாலும் கூட, சீன ராணுவத்தை நிர்மூலமாக்கும் திறமை தைவான் ராணுவத்துக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரூ. 664 கோடி ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்
தைரியம் கொடுத்த உக்ரைன் போர்..
தனி நாடாக விளங்கும் தைவானை பல நெடுங்காலமாக சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. எப்படியாவது தைவானை சீனாவுடன் இணைக்க அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் தைவானுக்கு பக்கபலமாக இருப்பதால் அந்நாட்டை நெருங்க சீனா தயக்கம் காட்டி வந்தது. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் உக்ரைன் மீது ரஷ்யா அதிரடியாக போர் தொடுத்தது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ நாடுகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கை சீனாவுக்கு தைரியத்தை கொடுத்தது.
பகிரங்க மிரட்டல் விடுத்த சீனா..
உக்ரைன் போர் கொடுத்த துணிச்சலால், ரஷ்யா பாணியில் நாமும் தைவான் மீது படையெடுக்கலாம் என சீன அதிபர் ஜி ஜின்பிங் எண்ணினார். இதன் ஒருகட்டமாக, தைவானுக்கு பகிரங்க மிரட்டலையும் அவர் விடுத்தார். "தனி நாடு என்ற பிதற்றலை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு சீனாவுடன் இணைந்துவிடுங்கள்.. இல்லையெனில் இணைக்கப்படுவீர்கள்" என எச்சரித்தார் ஜி ஜின்பிங். ஆனால் உடனடியாக குறுக்கிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பிடன், "தைவான் மீது சீனா படையெடுத்தால், அங்கு அவர்கள் முதலில் அமெரிக்க ராணுவத்தை தான் சந்திப்பார்கள்" எனக் கூறினார். இதனால் தைவான் மீது படையெடுக்கும் முடிவை சற்று தள்ளிவைத்தது சீனா.
அமெரிக்கா கடும் எச்சரிக்கை..
இந்த சூழலில், கடந்த சில வாரங்களாகவே தைவான் மீது போர் தொடுப்பதற்கான நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில்தான், அமெரிக்க ராணுவத் தலைமை தளபதி மார்க் மைலி, சீனாவை வெளிப்படையாக எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று இரவு வாஷிங்டனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், "தைவான் மீது எளிதாக போர் தொடுத்து விடலாம் என சீனா நினைத்தால் அது மிகவும் தவறான கணிப்பு. அப்படி சீனா செய்தால், அமெரிக்காவும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அது சீனாவுக்கு நன்றாக தெரியும். ஆகவே, தைவான் மீது படையெடுக்கும் முடிவை சீனா இப்போதைக்கு எடுக்காது என நம்புகிறேன்
சீனாவுக்கு போர் அனுபவம் இல்லை..
சீனா தன்னை ஒரு மிகப்பெரிய ராணுவ வல்லரசாக எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் கள எதார்த்தத்தை அந்நாடு உணரவில்லை. சீன ராணுவத்தினருக்கு போர் அனுபவம் என்பதே சுத்தமாக இல்லை. ஏனெனில், 1979-இல் நடந்த வியட்நாம் போர் தான் சீனா கடைசியாக பங்கேற்ற போர் ஆகும். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு போரையும், ஏன் சிறு சண்டையை கூட அந்நாட்டு ராணுவம் சந்தித்தது இல்லை. அப்படி இருக்கும் போது, தைவான் மீது சீனா படையெடுத்தால் அது அந்நாட்டுக்கே பேராபத்தாக முடிந்துவிடும்.
நெருப்புடன் விளையாட வேண்டாம்..
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தைவான் நாடு நாலாபுறமும் ஆர்ப்பரிக்கும் கடல்களாலும், பெரிய மலைகளாலும் சூழப்பட்ட ஒரு தீவு. தைவான் ராணுவத்தினர் மலைகளின் மீது போர் புரியும் திறனை பெற்றவர்கள். கடலிலும் அவர்களால் சண்டையிட முடியும். சீனாவுக்கு இந்த அனுபவங்கள் கிடையாது. எனவே, போர் தொடுப்பதாக நினைத்துக் கொண்டு தைவான் நாட்டுக்குள் நுழைந்தால் பொறியில் சிக்கிய எலியை போல சீன ராணுவம் மாட்டிக்கொள்ளும். அமெரிக்க ராணுவத்தின் உதவி இல்லாமலேயே சீனாவை நிர்மூலமாக்கும் திறமை தைவானுக்கு இருக்கிறது. எனவே, நெருப்புடன் விளையாடாதீர்கள் என்றுதான் சீனாவிடம் சொல்ல வேண்டும். தைவானுடன் போர் தொடுத்தால் மிகப்பெரிய பொருளாதார இழப்பையும் சீனா சந்திக்கும். அப்படி நடந்தால், உலகிலேயே பெரிய பொருளதார நாடாக மாற வேண்டும் என்ற சீனாவின் கனவும் சிதைந்துவிடும். அதனால் தைவான் மீது சீனா படையெடுப்பது சந்தேகம்தான்" இவ்வாறு மார்க் மைலி கூறினார்.