இந்தியாவுக்கு பொருளாதார தடை? "எச்சரிக்கையா இருங்க.." அமெரிக்கா பரபர.. இது ரொம்ப முக்கியமாச்சே
வாஷிங்டன்: இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியா அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக நல்லுறவு இருப்பது அனைவருக்கும் தெரியும். அமெரிக்க அதிபராக புஷ் இருந்த போதில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்தியா அமெரிக்கா இடையே பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. இப்போதும் அமெரிக்காவின் மிக முக்கியமான ஒரு நட்பு நாடாக இந்தியா இருக்கிறது. இந்தச் சூழலில் இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என அமெரிக்கா கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
பொருளாதாரத் தடை: சமீபத்தில் தான் ஈரானில் சபஹர் துறைமுகத்தை 10 ஆண்டுகள் நிர்வாகிக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி சில மணி நேரங்களில் அமெரிக்கா பொருளாதாரத் தடை தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரான் உடன் வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் எந்தவொரு நாடும் பொருளாதாரத் தடைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், "சபஹர் துறைமுகம் தொடர்பாக ஈரான் மற்றும் இந்தியா இடையே கையெழுத்தாகி உள்ளது குறித்து எங்களுக்குத் தெரியும். இந்த விவகாரத்தை நாங்கள் கவனித்து வருகிறோம். சபஹர் துறைமுகம் ஒப்பந்தம் குறித்தும் ஈரான் உடனான இருதரப்பு உறவு தொடர்பாகத் தனது சொந்த வெளியுறவுக் கொள்கைகளை இந்திய அரசு தான் விளக்க வேண்டும்.
"ஈரான் உடன் வர்த்தகம்.." 3 இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்கா! பரபர தகவல்
தடைகள்: ஆனால், நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். அதாவது அமெரிக்காவைப் பொறுத்தவரை எங்கள் நிலைப்பாடு தெளிவானது. ஈரான் மீதான அமெரிக்காவின் தடைகள் நடைமுறையில் உள்ளன.. அதை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம்" என்று அவர் தெரிவித்தார். இந்தியா அமெரிக்கா இடையே கடந்த பல ஆண்டுகளாக நல்லுறவு நீடித்து வரும் நிலையில், ஈரான் ஒப்பந்தம் காரணமாக இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பது போல வேதாந்த் படேலின் கருத்துகள் உள்ளன.
இது தொடர்பான கேள்விக்கு வேதாந்த் படேல் கூறுகையில், "இதில் என்னால் குறிப்பிட்டு பதில் சொல்ல முடியாது. ஆனால், ஒரு விஷயம்.. ஈரானுடன் வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் எந்தவொரு நிறுவனமும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் ஏற்கனவே பல முறை கூறியிருக்கிறோம். ஈரானுடன் ஒப்பந்தம் போடுவதன் மூலம் அவர்கள் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார். அவரது இந்தப் பேச்சு சர்வதேச அளவில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சபஹர் துறைமுகம்: சபஹர் துறைமுகத்தை அடுத்த 10 ஆண்டுகள் நிர்வகிக்கும் ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஈரான் இடையே தெஹ்ரானில் நேற்று கையெழுத்தானது. கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சர் சர்பானந்தா சோனோவால் முன்னிலையில், இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் நிறுவனத்திற்கும் ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பிற்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. வெளிநாட்டுத் துறைமுகத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை இந்தியா கைப்பற்றுவது இதுவே முதல் முறை..
இந்திய நிறுவனம்: இந்த இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் என்பது ஒரு மத்திய அரசின் கீழ் இருக்கும் நிறுவனமாகும். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் அடிப்படையில் ஒரு இஸ்லாமிய நாடாகும். ஈரான் நாட்டிற்கும் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே எப்போதும் மோதல் போக்கே நிலவி வருகிறது. ஈரான் பயங்கரவாத செயல்களை ஆதரிப்பதாகக் கூறி அமெரிக்கா ஏற்கனவே பல பொருளாதாரத் தடைகளை விதித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications