"ஈரான் உடன் வர்த்தகம்.." 3 இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்கா! பரபர தகவல்
வாஷிங்டன்: ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகச் சொல்லி இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே அமைதியற்ற போக்கு நிலவி வருவது அனைவருக்கும் தெரியும், ஒரு பக்கம் காசா பகுதியில் ஹமாஸ் மீது இஸ்ரேல் போரை நடத்தி வருகிறது.

இது ஒரு பக்கம் என்றால் மற்றொரு புறம் திடீரென இஸ்ரேல் ஈரான் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. இதனால் அப்பகுதியில் அமைதியற்ற ஒரு குழப்பமான சூழல் காணப்பட்டது.
தடை: ஈரானின் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வந்தது. இதற்கிடையே ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகச் சொல்லி 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதில் மூன்று இந்திய நிறுவனங்களும் அடக்கம். மேலும், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகச் சொல்லி சில தனிநபர்கள் மற்றும் கப்பல்கள் மீதும் கூட அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் Department of Treasury இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்யாவின் போர் ஆண்டுக்கணக்கில் தொடர்வது அனைவருக்கும் தெரியும். அந்த போருக்கு ஈரானின் நாட்டின் யுஏவிக்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை ரகசியமாக விற்பனை செய்வதற்கும் நிதியுதவி செய்வதற்கும் இந்த நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எதற்காகத் தடை: சஹாரா தண்டர் என்ற ஈரான் நாட்டை சேர்ந்த நிறுவனம் தான் ஈரான் ராணுவம் சார்பாக இந்த யுஏவிக்களை உலக நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்த சஹாரா தண்டர் நிறுவனத்திற்கு உதவியாக இருந்ததாகச் சொல்லியே ஜென் ஷிப்பிங், போர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் சீ ஆர்ட் ஷிப் மேனேஜ்மென்ட் ஆகிய இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இந்த மூன்று இந்திய நிறுவனங்களை சஹாரா தண்டர் நிறுவனம் எப்போது, எதற்காகப் பயன்படுத்தியது என்பது குறித்தும் அமெரிக்கா விரிவாக விளக்கி இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுப்போம்: இது தொடர்பாக அமெரிக்கா கருவூலத்துறை துணை செயலாளர் பிரையன் நெல்சன் கூறுகையில், "ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் தொடர்ச்சியாக அந்த பிராந்தியத்திலும் ஒட்டுமொத்த உலகையும் ஆபத்தில் தள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.. உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு ஆதரவு அளிப்பது, இஸ்ரேல் மீதான தாக்குதல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களைத் தருவது என்று மோசமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
பிரிட்டிஷ் மற்றும் கனடா நாடுகளுடன் இணைந்து நாங்கள் ஈரானின் பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்று அவர் தெரிவித்தார்.
உக்ரைன் போர்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை கடந்த 2022 முதல் தொடர்ந்து வருகிறது. இதில் தொடக்கத்தில் ரஷ்யா வெல்வது போலவே தெரிந்தது. இருப்பினும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் உக்ரைனுக்குத் தொடர்ந்து உதவவே அது ரஷ்யாவுக்குத் தலைவலியாக மாறியது. இதன் காரணமாகவே 2 ஆண்டுகளைக் கடந்தும் ரஷ்யாவால் உக்ரைனை வெல்ல முடியவில்லை.
இந்த ராணுவ நடவடிக்கைக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், சீனா, ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் ரஷ்யாவுக்கு ஆதரவு அளித்தன. மேலும் ஆயுதங்களையும் அளித்து உதவின. அப்படி ஈரான் ஆயுதங்களை அனுப்ப உதவியதாகச் சொல்லியே இந்த நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications