இளவரசர் ஹாரி உள்ளிட்ட பிரபலங்கள்.. உடனே வெளியேர உத்தரவு! கலிபோர்னியாவை மிரட்டும் சூறாவளிகள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கலிபோர்னியாவில் அடுத்தடுத்து புயல்கள் தாக்கி வருகிறது. இதனால் அங்குப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர்.
அமெரிக்காவில் இப்போது அடுத்தடுத்து மோசமான வானிலை நிகழ்வுகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் அங்குக் கிழக்கு மாகாணங்களில் சூறாவளி பாம் வீசியது. இதனால் பல இடங்களில் வெப்ப நிலை ஜீரோவுக்கு கீழ் போனது.
இதனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டது. பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படுமோ மோசமான வானிலை பாதிப்புகளுக்கு இது ஒரு உதாரணமாக அமைந்தது.
ருத்திர தாண்டவம்
அதன் பிறகு வானிலை மிக மெதுவாகச் சீரானது. இந்தச் சூழலில் இப்போது அங்குள்ள மேற்கு மாகாணமான கலிபோர்னியாவில் அடுத்தடுத்து சூறாவளிகள் தாக்கி வருகின்றன. நேற்றைய தினம் அங்குச் சூறாவளி ருத்திர தாண்டவம் ஆடிவிட்டது. இதனால் கடற்கரையில் நின்று கொண்டிருந்த 5 வயது சிறுவன் வெள்ளத்தில் அப்படியே அடித்துச் செல்லப்பட்டான்.. சூறாவளி பாதிப்பால் மின் இணைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல ஆயிரம் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். மேலும், அங்குப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வெளியேர உத்தரவு
இளவரசர் ஹாரி, ஓப்ரா வின்ஃப்ரே உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலிபோர்னியா கடற்கரைகளில் வசிக்கும் நிலையில், அங்கு மோசமான சூழல் நிலவுவதால், உடனடியாக அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. கலிபோர்னியா தெருக்களும் நெடுஞ்சாலைகளும் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளாக மாறியுள்ளன. எங்குப் பார்த்தாலும் மழை நீர் தான் வெள்ளம் போல ஓடி வருகிறது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.. மேலும், புயல் காரணமாகச் சாலைகளில் பல இடங்களில் குப்பைகள் அதிகமாகத் தேங்கியுள்ளன. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் மாயம்
நேற்று மட்டும் சூறாவளியில் மரம் விழுந்து இரண்டு பேர் பலியாகினர். இதன் மூலம் அடுத்து ஏற்பட்ட புயல்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. அதேபோல கலிபோர்னியாவின் மத்திய கடற்கரையில் மற்றொரு சம்பவம் நடந்தது. அப்பகுதியில் பெண் ஒருவர் தனது மகனுடன் காரில் சென்றுள்ளார். அப்போது சாலையில் திடீரென தண்ணீர் ஓட்டம் அதிகரிக்கவே, வாகனம் ஆப் ஆகி போனது. நீர் தொடர்ந்து அதிகரிக்கவே அவர்கள் அவசர உதவி மையத்தை நாடியுள்ளனர். போலீசார் தாயை மீட்பதற்குள், சிறுவன் வண்டியுடன் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். சுமார் 7 மணி நேரம் தேடிய பின்னரும், சிறுவனின் ஷூவை மட்டுமே மீட்புப் படையினரால் கண்டுபிடிக்க முடிந்தது. நீர் ஆபத்தான அளவுக்கு அதிகரித்தால், தேடுதல் பணி கைவிடப்பட்டது.
பிரபலங்கள் வசிக்கும் பகுதி
இந்த ஒரு இடத்தில் மட்டும் இந்த நிலை இல்லை. கலிபோர்னியாவில் பல்வேறு இடங்களிலும் இதே சூழலே நிலவுகிறது. அதேபோல சூறாவளி அபாயம் காரணமாக மொன்டெசிட்டோ என்ற பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மொன்டெசிட்டோ பகுகி மலைகளுக்கும் கடற்கரைக்கும் இடையே அமைந்துள்ளதால், பிரிட்டன் இளவரசர் ஹாரி- மேகன் தம்பதி தொடங்கிப் பல பிரபலங்கள் அங்கு தான் வசித்து வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால்.. அங்கிருந்து அனைவரும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிரிழப்பு
இருப்பினும், பிரபலங்களாகவே இருந்தாலும் கூட சிலர் அங்கிருந்து வெளியேறத் தயக்கம் காட்டி வருகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸில், இரவு நேரத்தில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் இரண்டு பேர் பாய்ந்தன. உள்ளே இருந்தவர்களுக்குச் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்களைத் தீயணைப்பு படையினர் மீட்டனர். அங்கு ஒரு மணி நேரத்தில் 250 மிமீ மழை பெய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரவு நேரங்களில் மழை மிகக் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மலைச் சரிவு மற்றும் வெள்ளம் காரணமாகப் பல நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளூர் சாலைகள் மூடப்பட்டன. அங்குள்ள சாண்டா குரூஸ் என்ற பகுதியிலும் கனமழை வைத்துச் செய்துவிட்டது. அங்கிருந்து வெளியாகும் ட்ரோன் காட்சிகளில் பல வீடுகள் சேற்று நிறைந்த நீரில் மூழ்கியுள்ளதைப் பார்க்க முடிகிறது. இந்த கனமழை காரணமாக கலிபோர்னியா மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள.. சுமார் 35 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.
எச்சரிக்கை
பசிபிக் பகுதியில் அதிகப்படியான ஈரப்பதம் அடுத்தடுத்து புயல்களை ஏற்படுத்துகிறது. இது அதிகப்படியான மழை மற்றும் பனிக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. மேலும், சூறாவளிக் காற்றும் அங்குக் கடுமையாக வீசி வருகிறது இதனால் வரும் அடுத்த சில நாட்களிலும் 300 மிமீ மழை வரை பெய்யும் என்றும் நிலைமை இதேபோல இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நேற்று 9ஆம் தேதி அங்குப் பல பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அவசர நிலையை பைடன் அறிவித்தார். கலிபோர்னியாவின் பல பகுதிகளில் கடுமையான வறட்சியில் நிலவி வந்த நிலையில், அதைச் சமாளிக்க இந்த மழை கொஞ்சம் உதவும்