உபரியாக உள்ள ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பு மருந்தை இந்தியாவுக்கு அனுப்ப பரிசீலனை.. அமெரிக்கா
வாஷிங்டன்: கூடுதலாக உள்ள ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசியை இந்தியாவுக்கு கொடுப்பது குறித்து அமெரிக்கா பரிசீலனை செய்யும் என அந்நாட்டின் கொரோனா தடுப்பு தொற்றுநோய் தடுப்பு ஆலோசகர் ஆன்டனி பவுசி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். தினந்தோறும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் ஏராளமானோர் உயிரிழக்கிறார்கள். அதிகரித்து வரும் நோயாளிகளை அனுமதிக்க படுக்கை இன்றியும், இறக்கும் நோயாளிகளை தகனம் செய்ய இடமின்றியும் இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்கள் தவித்து வருகின்றன.
இந்தியாவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் டெல்லியாகும். இங்கு 1.3 பில்லியன் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஆகியவற்றை சுட்டிக் காட்டி நோயாளிகளின் குடும்பத்தினர் சமூகவலைதளங்களில் உதவி கேட்டு வருகிறார்கள்.
கொரோனா பெருந்தொற்று.. இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம்.. தமிழில் ட்வீட் போட்ட அமெரிக்கா!
இந்த நிலையில் உலகளவில் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1 பில்லியனை தாண்டினாலும் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து மேற்கத்திய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன.
அது போல் அமெரிக்காவும் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் கொரோனா நோய்த் தடுப்பு ஆலோசகர் ஆன்டனி பவுசி கூறுகையில் மிகவும் குறைந்த விலையான ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசி அமெரிக்காவில் 30 மில்லியன் டோஸ்கள் உள்ளன.
கூடுதலாக உள்ள இந்த தடுப்பூசி டோஸ்களை இந்தியாவுக்கு அனுப்ப பரிசீலனை செய்கிறோம். மேலும் ஆக்ஸிஜன் விநியோகம், மருந்துகள், பிபிஇ கிட்கள் உள்ளிட்டவற்றில் உதவத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம் என பவுசி தெரிவித்துள்ளார்.