அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை.. கட்டுப்படுத்தும் மகத்தான மசோதா! சாதித்த பைடன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையைக் குறைக்கும் வகையில் மகத்தான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் கூட அமெரிக்காவில் சமீப காலத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது,
அங்குத் துப்பாக்கிகளை வாங்கவும் அதை வைத்திருக்கவும் கட்டுப்பாடுகள் பெரிதாக இல்லை. இதுவே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரிக்க முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா
இதன் காரணமாக அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் கடந்த மாதம் நியூயார்க், டெக்சாஸ் போன்ற முக்கிய மாகாணங்களிலும் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அந்நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

துப்பாக்கி கலாசாரம்
இந்தச் சூழலில் துப்பாக்கி கலாசாராத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதியதொரு சட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. இதற்கு அமெரிக்க மேல் சபையான செனேட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள் ஜோ பைடன் முன்மொழிந்த திருத்தங்களை விடக் குறைவு தான் என்றாலும், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனநாயக கட்சி
பொதுவாக இந்த துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்தும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆதரவு அளிப்பார்கள். ஆனால், குடியரசு கட்சியினர் இதற்கு எதிராகவே இருப்பார்கள். ஆனால், இந்த முறை மசோதாவுக்கு 15 குடியரசுக் கட்சியினர் ஆதரவு அளித்துள்ளனர். அமெரிக்காவில் இந்த ஆண்டு மிட் டெர்ம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசு கட்சியினர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றியதற்கு இதுவும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது.

சீர்திருத்தங்கள்
இதன் மூலம் 21 வயதிற்குப்பட்டவர்கள் துப்பாக்கிகளை வாங்கச் சென்றால் அவர்களுக்கு விரிவான சோதனை நடத்தப்படும். அதேபோல பொதுமக்களின் மனநலனை மேம்படுத்த $11 பில்லியன் நிதி ஒதுக்கப்படும் அதேபோல பள்ளி பாதுகாப்பு திட்டங்களுக்கு $2 பில்லியன் ஒதுக்கப்படுகிறது. மேலும், அச்சுறுத்தலாகக் கருதப்படும் நபர்கள் துப்பாக்கி வைத்திருப்பதைத் தடை செய்ய மகாண அரசுகள் சட்டத்தைக் கொண்டு வர ஊக்குவிக்க நிதியுதவி வழங்கும் முன்மொழிவும் இதில் உள்ளது.

லிவ்-இன்
அதேபோல திருமணமானவர்களில் ஒருவர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டால், ஏற்கனவே இருக்கும் சட்டப்படி அவர்களால் துப்பாக்கி வைத்திருக்க முடியாது. இருப்பினும், அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்-இன் உறவில் வாழ்ந்தால் இந்த விதியின் கீழ் துப்பாக்கியைத் தடை செய்ய முடியாது. இப்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டம் காதலன் மற்றும் லிவ்இன் உறவில் வாழ்பவர்களையும் உள்ளடக்கி உள்ளது.

வன்முறை
இந்த மசோதா செனேட் சபையில் நிறைவேறி உள்ள நிலையில், இதைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அமெரிக்காவில் வன்முறையை ஒழிப்பதில் இது ஒரு மகத்தான நாள் என்று ஜனநாயக கட்சியினர் குறிப்பிட்டு வருகின்றனர். அதேபோல துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் தங்கள் உறவுகளை இழந்தவர்களையும் இந்த மசோதாவை வரவேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications