கிரீன் கார்டு வேணும்னா முதலில் உங்க சொந்த நாட்டுக்கு போங்க.. அமெரிக்கா புது ரூல்ஸ்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் காலவரையின்றி நிரந்தரமாக வசிக்கவும், சட்டப்பூர்வமாக வேலை செய்யவும் அனுமதிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணமாக கருதப்படும் கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகளில் புதிய மாற்றங்களை டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி, அமெரிக்காவுக்குள் இருந்தபடியே கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்குப் பதிலாக, தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் சென்று அங்கிருந்தே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு குடியேற்ற விதிகளில் கடும் கெடுபிடி காட்டி வருகிறார். இதனால், இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் விசா நீட்டிப்பு, கிரீன் கார்டு பெறுவது போன்ற நடைமுறைகளில் கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்கள் கூட பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.

இந்த நிலையில்தான், கிரீன் கார்டு விதிகளில் புதிய மாற்றத்தை டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. அதாவது, அமெரிக்காவில் நிரந்தர தங்கியிருக்க வழி வகை செய்யும் கிரீன் கார்டு பெற காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கையாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. புதிய விதிகளின் படி, கிரீன் கார்டு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்ப செயல்முறை நடைபெறும் காலத்தில் அமெரிக்காவில் தங்காமல், தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் சென்று அங்கிருந்தே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பான USCIS வெளியிட்ட புதிய வழிகாட்டுதலின்படி, கிரீன் கார்டுக்கான "அட்ஜஸ்மண்ட் ஸ்டேட்டஸ்" கோருபவர்கள் இனிமேல் அமெரிக்காவில் தங்கியபடி செயல்முறையை மேற்கொள்ள முடியாது. அதற்கு பதிலாக, தங்கள் தாய்நாடுகளிலிருந்தே விண்ணப்பிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவு இந்தியர்கள் உள்பட கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிரீன் கார்டு என்பது வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டை போன்றதாகவும். இந்த கார்டு பெற்றவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கியிருக்கலாம். கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அமெரிக்காவின் எந்த பகுதியிலும் வசிக்கலாம், பெரும்பாலான நிறுவனங்களில் வேலை செய்யலாம், அமெரிக்காவில் கல்வி பயிலலாம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்யலாம்.
கடைசியாக அமெரிக்க குடியுரிமைக்கும் விண்ணப்பிக்க முடியும். இந்த புதிய நடவடிக்கை, தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் சர்வதேச மாணவர்கள், H-1B விசா ஊழியர்கள் மற்றும் சுற்றுலா விசாவில் உள்ளவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
ஏனெனில், அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறாமல் நிரந்தர குடியுரிமைக்கு மாறும் வாய்ப்பு விதி மாற்றத்தால் பறிபோயுள்ளது.இந்த புதிய விதிகள் மூலம் விசா காலாவதியான பிறகும் அமெரிக்காவில் தங்கிவிடும் சம்பவங்களை குறைக்கவும், நிரந்தர குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பிறகு சட்டவிரோதமாக மறைந்து வாழும் நிலைகளைத் தடுக்கவும் முடியும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications