"மனித குலமே காலியாகும்.." AI காட்பாதர் தந்த வார்னிங்! அடுத்து அவர் சொன்னது முக்கியம் ஆச்சே! பரபரப்பு
வாஷிங்டன்: ஏஐ துறையில் இப்போது பல்வேறு ஆய்வுகள் நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக ஏஐ துறையின் காட்பாதர் என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் ஏஐ துறைகள் தான் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக சாட்ஜிபிடி வெற்றிக்குப் பிறகு ஏஐ கருவிகள் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டன என்பதே உண்மை.

பல புதிய புதிய ஏஐ கருவிகள் வந்துள்ள நிலையில், அதன் ஆய்வுகளுக்கும் நிதி குவிந்து வருகிறது. அதேநேரம் மற்றொரு பக்கம் ஏஐ துறையால் பெரிய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையும் அதிகரித்தே வருகிறது.
ஏஐ கருவிகள்: இதனிடையே ஏஐ துறையின் காட்பாதர் என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், வரும் காலத்தில் ஏஐ துறையால் மிகப் பெரிய ஆபத்துகள் ஏற்பட உள்ளதாக எச்சரித்துள்ளார். மேலும், ஏஐ என்று வரும் போது அரசும் சரி, பெரும் நிறுவனங்களும் சரி மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார். ஏஐ துறையில் பல ஆண்டு அனுபவம் கொண்ட ஹிண்டன் இந்த ஆண்டுதான் கூகுளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.,
ஏஐ கருவிகள் எந்த அடிப்படையில் செயல்பட வேண்டும். அதன் வரைமுறைகள் எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களை வடிவமைத்தவர் தான் இந்த ஜெஃப்ரி ஹிண்டன். இது தொடர்பாக அவர் அங்குள்ள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இதே வேகம் தொடர்ந்தால் இன்னும் ஐந்தே ஆண்டுகளில் அவை நம்மை விடச் சிறப்பானதாக மாறும் ஆபத்து இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை மனிதர்கள் முழுமையாக அறிந்து கொண்டார்களா என்பதிலேயே எனக்குச் சந்தேகம் இருக்கிறது.
கடினம்: மனிதக் குல வரலாற்றிலேயே முதல்முறையாக நம்மை விட அறிவார்ந்த விஷயங்களைக் கொண்ட கருவிகளை உருவாக்கும் காலத்திற்கு நாம் செல்கிறோம்.. நமக்கு எதிரே உள்ள மனிதர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வது எவ்வளவு கடினமோ அதே அளவுக்கு இந்த தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்வதும் அது என்ன நினைக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதும் கடினம்.
தற்போதைய சூழலில் ஏஐ கருவிகள் என்ன செய்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், வரும் இது மேலும் மேலும் வளர்ந்து சிக்கலான ஒன்றாக மாறிவிட்டால் அங்கே என்ன நடக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. ஏஐ மீதான கட்டுப்பாட்டை நாம் இழந்தால் அது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். நாங்கள் ஒரு நிச்சயமற்ற காலகட்டத்தில் நுழைகிறோம். இதுவரை செய்யா விஷயங்களைச் செய்கிறோம்.
மனித குலம்: புதிய விஷயங்களைச் செய்யும் போது தவறு செய்வது இயல்பான ஒன்றுதான். ஆனால், ஏஐ என்று வரும் போது இந்த விஷயங்களில் சிறு தவறை கூடச் செய்யக்கூடாது. ஏஐ கருவிகளை அலட்சியமாகப் பார்த்தால் அவை நிச்சயம் ஒரு நாள் மனிதக் குலத்தையே மிஞ்சிவிடும். அழிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இவை நிச்சயம் நடக்கும் என்று நான் கூறவில்லை. ஆனால், இதற்கான வாய்ப்பையே நாம் தரக் கூடாது என்றே நான் சொல்கிறேன். ஆனால், இதை நாம் வெற்றிகரமாகச் செய்ய முடியுமா என்பது கேள்வியாகவே உள்ளது.
அதேநேரம் ஏஐ கருவிகளால் பல நன்மைகளும் நமக்குக் கிடைக்கவே செய்கிறது. குறிப்பாக இதனால் உற்பத்தித் திறன் பல மடங்கு அதிகரிக்கிறது. ஆனால் செயற்கை நுண்ணறிவால் பலர் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும். இழந்த வேலைகளுக்குப் பதிலாகப் புதிய வேலைகள் வரவே செய்யும். ஆனால், அவை போதுமானதாக இருக்காது. ஏஐ கருவிகளை நன்கு புரிந்துகொள்வதற்கும் முறையாகப் பயன்படுத்தவும் விரிவான ஆய்வுகள் தேவை" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications