கிணத்தை காணோம் கூட ஓகே.. ஆனா இங்கே ஒரு கடலையே காணோம்! அதுவும் சில ஆண்டுகளில்..அதிர வைக்கும் பின்னணி
வாஷிங்டன்: உலகம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை நாம் இப்போது உணர ஆரம்பித்துள்ள நிலையில், இங்கே ஒரு மிகப் பெரிய நீர்நிலை மாயமாகியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
காலநிலை மாற்றம் இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. இப்போது காலநிலை மாற்றத்தால் புவி வேகமாக வெப்பமாகி வரும் நிலையில், இதனால் ஏற்படும் பேரழிவை உலகம் அனுபவித்து வருகிறது.

உலக வெப்பநிலை கடந்த ஜனவரி மாதம் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாகச் சராசரி வெப்பத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்துள்ளது.. உலகின் சராசரி வெப்பம் முதன்முறையாக 1.5 டிகிரி வரம்பிற்கு மேல் அதிகரித்துள்ளது.
மாயம்: வரும் காலங்களில் புவி வெப்ப மயமாதல் காரணமாக மேலும் பல மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பாதிப்புகள் ஆரம்பிக்க 10 ஆண்டுகள் ஆகும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், இப்போது உலகில் நமது கண் முன்னாலேயே ஒரு பேரழிவு நடந்துள்ளது. வெறும் 50 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக மிகப் பெரிய நீர்நிலை அப்படியே மாயமாகியுள்ளது.
கஜகஸ்தானுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே அமைந்துள்ள நீர்நிலை ஆரல் கடல் (Aral Sea) என அழைக்கப்படுகிறது. என்ன தான் இதன் பெயரில் கடல் என இருந்தாலும் உண்மையில் இது ஒரு நன்னீர் ஏரி. ஆனால், நியோஜீன் காலத்தின் இறுதியில் (2.3 கோடி முதல் 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த ஏரி கடலை போலப் பிரம்மாண்டமானதாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த நன்னீர் ஏரியை ஆரல் கடல் என அழைத்துள்ளனர்.
என்ன காரணம்: ஒரு காலத்தில் இப்படி கடலை போல இருந்த இந்த பிரம்மாண்ட ஏரி 2010 சமயத்தில் மொத்தமாக வறண்டு போனது. இந்த ஆரல் கடல் என்பது 68,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட உலகின் நான்காவது பெரிய ஏரியாக இருந்தது. 1960களில் சோவியத் யூனியன் தனது நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு இங்கிருந்து நீரை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தது. அப்போதே இதன் அழிவுக்காலம் ஆரம்பித்துவிட்டது. அதன் பின்னர் ஏரி நீரின் அளவு சுருங்கத் தொடங்கியது.
அமெரிக்காவின் நாசா இந்த ஆரல் கடல் மாயமானது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. 1960களில் சோவியத் யூனியன் தனது பிராந்தியத்திற்கு உட்பட்டு இருந்த கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய வறண்ட பகுதிகளில் வேளாண் செய்யவும் நீர்ப் பாசனத் திட்டங்களுக்காகவும் இங்கு இருந்தே நீரை எடுத்தது. இதற்காக மிகத் திட்டங்களைக் கொண்டு வந்தது.
எப்படி: இங்குள்ள இரண்டு பெரிய ஆறுகள் - வடக்கில் சிர் தர்யா மற்றும் தெற்கில் அமு தர்யா மூலம் வறண்ட பகுதிகளுக்கு இந்த ஆரல் கடலில் இருந்து நீரை எடுத்துச் சென்றனர். இதன் மூலம் அந்த பகுதிகளில் விவசாயம் மிகப் பெரியளவில் அதிகரித்தாலும் கூட அது இந்த நீர்நிலையை மிகக் கடுமையாகப் பாதித்தது.
ஒரு காலத்தில் இந்த ஆரல் கடல் வடக்கிலிருந்து தெற்கே சுமார் 435 கிலோமீட்டருக்கும்... கிழக்கிலிருந்து மேற்காக 290 கிலோமீட்டருக்கும் பறந்து விரிந்து இருந்தது. இதன் காரணமாகவே இந்த ஏரிக்கு ஆரல் "கடல்" என்ற பெயர் வந்தது, ஆனால், ஆறுகள் மூலம் சோவியத் ஒன்றியம் நீரை எடுக்க ஆரம்பித்ததும். இதன் அளவு சுருங்கிக் கொண்டே வந்தது. கடல் போல இருந்த இந்த நீர்நிலை சுருங்கி குளத்தைப் போல மாறியது.
கடைசி முயற்சி: ஒரு கட்டத்தில் இந்த ஏரி முழுமையாக வறண்டு போகும் ஆபத்தும் கூட இருந்தது. இருப்பினும், இந்த ஏரியின் சில பகுதிகளைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியாக, கஜகஸ்தான் ஆரல் கடலின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையே ஒரு அணையைக் கட்டியது. இதன் மூலம் ஓரளவுக்கு நீரைச் சேமித்து வைக்க முடிந்தது. ஆனால், அப்போதும் கூட முன்பு இருந்தது போல அதிகளவில் நீரைச் சேமிக்க முடியவில்லை. மனிதனின் பேராசையால் ஏற்படும் காலநிலை மாற்றம் எந்தளவுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இது இருக்கிறது.












Click it and Unblock the Notifications