வாக்குப்பதிவு ஓகே.. அதன் பிறகு என்ன நடக்கும்! அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்?
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில் வாக்குப்பதிவு முடியும் நிலையில், அதன் பிறகு என்ன நடக்கும்.. எப்போது புதிய அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.. இதற்குப் பின்னணியில் உள்ள பிராசஸ் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவில் கடந்த பல மாதங்களாக நீடித்த அதிபர் தேர்தல் பிரச்சாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. அமெரிக்கர்கள் அடுத்த நான்கு ஆண்டுகள் தங்களை வழிநடத்தும் தலைவரைத் தேர்வு செய்து வருகிறார்கள்.

கடும் போட்டி: உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை தொடங்கிய அதிபர் தேர்தல் பல மாகாணங்களில் நடந்து வருகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மறுபுறம் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இரு தரப்பிற்கும் இடையே போட்டி மிகக் கடுமையாக இருப்பதாகவே கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.
அதிபர் தேர்தல் இன்னும் சில மணி நேரத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். இருப்பினும், அமெரிக்காவில் வாக்குச் சீட்டு முறையே பின்பற்றப்படும் நிலையில், வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிய சில நாட்கள் வரை ஆகும்.
வாக்குப்பதிவு நேரம்: வாக்குப்பதிவு ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தேர்தல் நாளுக்குப் பிறகு அமெரிக்காவில் என்ன நடக்கும் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கலாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். அமெரிக்காவைப் பொறுத்தவரைத் தேர்தல் விதி மாகாணம் வாரியாக மாறுபடும். எனவே, சில மாகாணங்களில் உள்ளூர் நேரப்படி 7 மணி வரையிலும் சில மாகாணங்களில் அது உள்ளூர் நேரப்படி 8 மணி வரையிலும் நடக்கும். ஓரிரு மாகாணங்களில் இரவு 11 மணி வரை கூட வாக்குப்பதிவு நடக்கும்.
எப்போது தெரியும்: வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். இந்திய நேரப்படி புதன்கிழமை மதியம் 12 அல்லது 1 மணியளவில் என்ன டிரெண்ட் என்பது தெரிய வரும். அதேநேரம் அமெரிக்காவில் எலக்டோரல் காலேஜ் முறை பின்பற்றப்படும் நிலையில், எலக்டோரல் காலேஜ் வாக்குகள் பதிவு செய்யப்படும் வரை தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாது.
அதாவது ஒவ்வொரு மாகாணத்திலும் மக்கள்தொகை அடிப்படையில் எலக்டோரல் காலேஜ் எண்ணிக்கை இருக்கும். அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணத்திற்கு அதிக எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாகாணத்திற்குக் குறைந்த எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் இருக்கும். இந்த எலக்டோரல் காலேஜ் இணைந்தே அதிபரைத் தேர்வு செய்யும்.
முக்கியம்: இதில் மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மாகாணத்தில் ஒரு வாக்கு அதிகம் பெற்றாலும் அவருக்கே எல்லா எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் போகும். அதாவது ஜார்ஜியா மாகாணத்தில் 16 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ள நிலையில், அங்கு டிரம்பை காட்டிலும் கமலா ஹாரிஸ் ஒரு வாக்கு அதிகம் பெற்றாலும் இந்த எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் கமலா ஹாரிஸுக்கே செல்லும். டிரம்பிற்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது.
அடுத்து என்ன: இந்த எலக்டோரல் காலேஜ் வரும் டிச. 17ம் தேதி வாக்களிப்பார்கள். இது வெறும் சம்பிரதாயம் தான். அதிபர் தேர்தலில் யார் எத்தனை மாகாணங்களில் வென்றுள்ளனரோ.. அதைப் பொறுத்தே இந்த எலக்டோரல் காலேஜ் முடிவுகள் இருக்கும். டிச. 17ம் தேதி பதிவாகும் எலக்டோரல் காலேஜ் வாக்குகள் ஜன. 6ம் தேதி எண்ணப்பட்டு முடிவு இறுதி செய்யப்படும். அதாவது ஜன. 6ம் தேதி தான் அமெரிக்காவின் புதிய அதிபர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தொடர்ந்து ஜன. 20ம் தேதி புதிய அதிபர் பதவியேற்பார்.












Click it and Unblock the Notifications