இந்தியர்களுக்கு சிக்கலா? "ஏலியன்" சட்டத்தை கையில் எடுக்கும் டிரம்ப்! நீதிமன்றம் கூட தடுக்காதாம்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப், விரைவில் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது. இதற்கிடையே 1798ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஏலியன் எனிமி சட்டம் மூலம் டிரம்ப் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் வரும் 20ம் தேதி அதிகாரப்பூர்வமாக அந்நாட்டு அதிபராகப் பதவியேற்கிறார். இந்த முறை அவர் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிகிறது.

பிரச்சாரத்தின் போதே டிரம்ப் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராகவே பேசி வந்த அவர், முதல் வேலையாக இதில் தான் கவனம் செலுத்தப் போகிறார். இதற்கிடையே டிரம்ப்பின் திட்டம் தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏலியன் எனிமி விதி:
அமெரிக்காவில் 1798ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஏலியன் எனிமி சட்டம் என்று ஒரு விதி இருக்கிறது. இந்த விதியின் கீழ் அமெரிக்கா எதாவது ஒரு நாட்டுடன் போர் புரியும் போகு குறிப்பிட்ட அந்த நாட்டை சேர்ந்தவர்களைக் கைது செய்வதற்கும், நாடு கடத்துவதற்கும் அதிபருக்கு அதிகாரம் வழங்குவதே இந்தச் சட்டமாகும். இது தேச துரோகச் சட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கும் பல நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்த நிலையில், அப்போது இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா எந்தெந்த நாடுகளுடன் போரிடுகிறதோ அந்த குறிப்பிட்ட நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபருக்கு அதிகாரம்:
இந்தச் சட்டம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் வெளிநாட்டினருக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்க அதிபருக்கு அதிகாரம் தருகிறது. இருப்பினும், இது கடந்த காலங்களில் இந்தச் சட்டம் அரிதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. போர் காலத்தின் போது தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கமாக இருந்தது.
அதேநேரம் போர் முடிந்த பிறகும் கூட இந்தச் சட்டம் அப்படியே இருந்துவிட்டது. போர்க் காலத்தில் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும் என்பது போலத் தெளிவான விளக்கம் இதற்கு இல்லாததால் இதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது. குடியேற்றத்தைத் தடுக்கக் கூட இதைப் பயன்படுத்தலாம் என்று சிலர் குறிப்பிடுகிறார்கள்.
டிரம்ப் பேச்சுக்கு இதுதான் காரணம்:
இந்தச் சட்டத்தை மனதில் வைத்தே டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் பிரச்சாரத்தின் போது புலம்பெயர்ந்தோரை "படையெடுப்பாளர்கள்" என்றும் எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் வருவதை "படையெடுப்பு" என்றும் மீண்டும் மீண்டும் சொல்லி வந்தனர். அமெரிக்காவில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள், போதைப் பொருள் வியாபாரிகள், தாதாக்கள், கார்டெல் உறுப்பினர்களை அமெரிக்காவில் இருந்து அகற்ற இந்த ஏலியன் எனிமி சட்டத்தையே பயன்படுத்தப் போவதாக டிரம்ப் கூறியிருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.
கடந்த காலங்களில் போர்க் காலத்தில் மட்டும், அதுவும் அரிதாகவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. எனவே, போர் இல்லாத நேரத்தில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவது அமெரிக்காவில் விவாதமாக மாறும். இருப்பினும், இந்தச் சட்டம் விரிவானதாக இல்லை என்பதால் குற்றவியல் மற்றும் சட்ட விரோத குடியேற்றத்தைத் தடுக்கவும் கூட அதிபரால் இச்சட்டத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும் என்று அங்குள்ள நீதிக்கான பிரென்னன் மையம் எச்சரித்துள்ளது. அதேநேரம் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களுக்கு மட்டுமே இது சிக்கலைத் தரும். மற்றவர்களுக்குப் பாதிப்பு இருக்காது.
நீதிமன்றம் தடுக்குமா:
மேலும், தேவைப்பட்டால் ராணுவம் மற்றும் போலீசாரை கூட சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை அகற்றப் பயன்படுத்துவேன் என்றும் கூட டிரம்ப் உறுதியளித்துள்ளார். இதற்கு எதிராகச் சிலர் நீதிமன்றத்திற்கும் போகலாம். ஆனால், இப்போது அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் பெரும்பாலானோர் பழமைவாத கருத்து உடையவர்களாகவே உள்ளனர். இதனால் டிரம்ப் தனது திட்டத்தை நிறைவேற்றத் தடை எதுவும் வராது.












Click it and Unblock the Notifications