டிரம்ப் மாஸ்டர் பிளான்! 175 பில்லியன் டாலரில் கோல்டன் டோம்.. ஏவுகணையை பாய ஆரம்பிக்கும்போதே அழிக்கும்
வாஷிங்டன்: அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்காக இஸ்ரேலில் உள்ள அயர்ன் டோமை போல அமெரிக்காவில் 175 பில்லியன் டாலர் மதிப்பில் ஒரு விரிவான கோல்டன் டோம் என்ற அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளனர். இந்த கோல்டன் டோம் என்றால் என்ன.. இது எந்தளவுக்கு முக்கியமானது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உலகிலேயே மிகவும் தலைசிறந்த ராணுவத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது. போர் விமானங்கள், அதிநவீன டாங்கிகள், துப்பாக்கிகள் என அமெரிக்காவின் பாதுகாப்பு ஆயுதங்கள் நம்மை மிரள வைப்பதாகவே இருக்கும். அமெரிக்கா இதை மற்ற பல நாடுகளுக்கும் கூட விற்பனை செய்து வருகிறது.

வான் பாதுகாப்பு அமைப்பு
இதற்கிடையே இப்போது அமெரிக்க பாதுகாப்புத் துறை அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ரெடியாகிறது. அமெரிக்கா சீக்கிரமே இப்போது ஒரு வான் பாதுகாப்பு அமைப்பைப் பெறப் போகிறது. சீனா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தடுக்கும் வகையில் 175 பில்லியன் டாலர் மதிப்பில் இந்த வான் பாதுகாப்பு அமைப்பு உருவாகிறது. இதற்கான டிசைனை இறுதி செய்துள்ள டிரம்ப், இத்திட்டத்தைச் செயல்படுத்த விண்வெளிப் படை ஜெனரல் ஒருவரை நியமித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அமெரிக்க விண்வெளிப் படை ஜெனரல் மைக்கேல் குட்லின் இந்த திட்டத்தைக் கவனிப்பார் என்று டிரம்ப் கூறினார். அமெரிக்க ராணுவத்தை மேலும் வலுப்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ள நிலையில், அதில் முக்கிய மைல்கல்லாக இது இருக்கும்.
டிரம்ப் அறிவிப்பு
இது தொடர்பாக டிரம்ப் மேலும் கூறுகையில், "இந்த கோல்டன் டோம் நமது நாட்டை பாதுகாக்கும். இந்த பாதுகாப்பு அமைப்பு தங்களுக்கும் தேவை என கனடாவும் கேட்டுள்ளது. எந்த பகுதியை நோக்கி எப்படி ஏவுகணை வந்தாலும் கூட அதை இந்த ஏவுகணை தகர்த்துவிடும். இது கிட்டதட்ட 100% சக்சஸ் ரேட்டை கொண்டுள்ளது" என்றார்.
கடந்த ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்ற கையோடு டிரம்ப் இந்த கோல்டன் டோம் தொடர்பாக உத்தரவிட்டார். இந்த கோல்டன் டோமில் அமெரிக்காவை நோக்கி வரும் ஏவுகணைகளைக் கண்டறிந்து, கண்காணித்து அழிக்கப்படும். இதற்காகப் பல சாட்டிலைட்களை கொண்ட நெட்வொர்க்கை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இந்த கோல்டன் டோம் கீழ் ஏவுகணைகளைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதைத் தகர்க்கப் பல நூறு சாட்டிலைட்கள் வரை நெட்வொர்க்கில் நிலைநிறுத்த முடியும்.
ஐயர்ன் டோம் போல
இஸ்ரேல் தன்னை பாதுகாக்க ஐயர்ன் டோம் என்ற பாதுகாப்பு அமைப்பைக் கொண்டுள்ளது.. இஸ்ரேல் மீது ஹமாஸ் படை சரமாரியாகத் தாக்குதல் நடத்தியபோது, இந்த ஐயர்ன் டோம் தான் அவர்களைப் பாதுகாத்தது. அதன் அடிப்படையிலேயே அமெரிக்கா இந்த கோல்டன் டோமை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.. அதேநேரம் இஸ்ரேலின் ஐயர்ன் டோமை விட இது விரிவானதாக இருக்குமாம்.
குறிப்பாக ஏவுகணைகளைக் கண்காணிக்கப் பல சாட்டிலைட்களை கொண்டதாக இது இருக்கும். சாட்டிலைட்கள் இருப்பதால் ஒரு இடத்தில் ஏவுகணை கிளம்பிய உடனேயே அதை இந்த கோல்டன் டோமால் தகர்க்க முடியும். என்ன தான் டிரம்ப் இது தொடர்பான அறிவிப்பை இப்போது வெளியிட்டாலும் கூட இதை முழுமையாகச் செயல்படுத்தப் பல ஆண்டுகள் வரை ஆகுமாம்.
எதிர்ப்புகள்
அதேநேரம் இந்தச் சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த கோல்டன் டோமிற்கு தேவையான பொருட்களை எலான் மஸ்க்கின் ஸ்பேஎஸ்எக்ஸ் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்வதற்கு ஜனநாயக கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரசியல் ரீதியாக மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் பெரிய சிக்கலை அமெரிக்கா எதிர்கொள்ளும். ஏனென்றால் 175 பில்லின் டாலர் என்பது அமெரிக்காவுக்குமே கூட பெரிய தொகை தான். அமெரிக்கா ஏற்கனவே வருவாய் சிக்கலால் பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் சூழலில், இவ்வளவு நிதியை ஒதுக்குவது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications