"இந்தியாவுக்கு 25% வரி + அபராதம்.." டிரம்ப் அறிவிப்பிற்கு காரணம் என்ன! பின்னணியில் நடந்தது என்ன
வாஷிங்டன்: இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதற்கிடையே திடீரென இந்தியா மீது 25% இறக்குமதி வரியை டிரம்ப் அறிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா மீது அமெரிக்கா வரி விதிக்க என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து டிரம்ப் கொடுத்துள்ள விளக்கத்தை நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் முதலில் இந்த ரெசிப்ரோக்கல் வரி குறித்து அறிவித்திருந்தார். அதன் பிறகு சில காரணங்களால் 6 வாரங்கள் இந்த வரியை நிறுத்தி வைத்தார். பிறகு மீண்டும் ஜூலை 31 வரை தள்ளி வைத்தார். அதற்குள் அனைத்து உலக நாடுகளும் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவித்தார்.

வணிக ஒப்பந்தம்
இருப்பினும், பிரிட்டன், இந்தோனேசியா உள்ளிட்ட ஓரிரு நாடுகள் மட்டுமே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் போட்டது. இந்தியா உட்படப் பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட இதுவரை எதுவும் இறுதியாகவில்லை. ஜூலை 31 காலக்கெடுவும் நெருங்கியதால் டிரம்ப் என்ன செய்யப் போகிறார் என்பதில் கேள்வி எழுந்தது.
இதற்கிடையே திடீரென இந்தியா மீது 25% வரி விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 1 முதல் இந்த 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு என்ன காரணம் என்பதையும் டிரம்ப் விளக்கியுள்ளார். ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்வது மற்றும் முறையற்ற வர்த்தக நடைமுறைகள் ஆகிய இரண்டை காரணமாகச் சொல்லி டிரம்ப் இந்த வரியை அறிவித்துள்ளார்.
காரணம் 1
அதாவது டிரம்ப் இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிகக் குறைந்த அளவிலேயே வர்த்தகம் நடைபெறுகிறது. இதற்கு இந்தியாவின் அதிகப்படியான வரிகள் மற்றும் வர்த்தக தடைகளே காரணம்" என்று கூறியுள்ளார். அமெரிக்க நிறுவனங்கள் எளிதாக வர்த்தகம் செய்ய முடியாத அளவுக்கு இந்தியா அதிக வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிடுகிறார். இதை முதல் காரணமாகச் சொல்கிறார்.
காரணம் 2
அதேபோல ரஷ்யா அமெரிக்க வர்த்தகத்தையும் அவர் இன்னொரு காரணமாகச் சொல்கிறார். ஏற்கனவே உக்ரைன் போரைத் தொடர்வதால் ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறி வந்தார். குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இதுபோல ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால்.. அந்த நிதியை வைத்தே உக்ரைனில் ரஷ்யா போரைத் தொடர்கிறது என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்யும் நிலையில், இதையும் ஒரு காரணமாக டிரம்ப் சொல்கிறார். இது தொடர்பாக டிரம்ப், "இந்தியா எப்போதும் தங்கள் ராணுவ உபகரணங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது. இந்தியா சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இது நல்லதல்ல" என்று கூறியிருக்கிறார்.
தொடரும் குழப்பம்
கடந்த ஏப்ரல் மாதம் டிரம்ப் உலக நாடுகளுக்கு வரிகளை அறிவித்த போது இந்தியாவுக்கு 26% வரியை அறிவித்திருந்தார். இப்போது அதை விட ஒரு சதவிகிதம் குறைவான வரியை அவர் அறிவித்துள்ளார். இருப்பினும், இத்தோடு சேர்ந்து அபராதமும் தனியாக விதிக்கப் போவதாக அவர் கூறியிருக்கிறார். இருப்பினும், என்ன அபராதம், அது எவ்வளவு சதவிகிதம் இருக்கும் என்பது குறித்து எதுவும் அவர் விளக்காததால் குழப்பம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications