சட்டத்தில் இருக்கும் ஓட்டை.. 18 வயதானாலே துப்பாக்கி.. டிரம்ப் மீதான தாக்குதலுக்கு காரணமே இதுதான்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் உலகெங்கும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்காவில் உள்ளத் துப்பாக்கி சட்டங்கள் குறித்து மீண்டும் ஒரு விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டொனால்ட் டிரம்ப் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் அவர் நூலிழையில் உயிர் தப்பினார். அதேநேரம் இந்தத் தாக்குதல் அங்குள்ள துப்பாக்கி சார்ந்த சட்டங்கள் குறித்தும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சட்டம்: அமெரிக்காவைப் பொறுத்தவரை அந்நாட்டின் அரசியலமைப்பே துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை அந்நாட்டு மக்களுக்கு வழங்குகிறது. ஒரு சுதந்திர அரசின் பாதுகாப்பிற்குத் தேவையான ஆயுதங்களை வைத்திருக்கும் மக்களின் உரிமை மீறப்படாது என்று அந்தச் சட்டம் சொல்கிறது. இந்த சட்டம் இருப்பதாலேயே அமெரிக்காவில் பலரும் துப்பாக்கிகளை வாங்க முடிகிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு 18 வயதை நிரம்பியவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் துப்பாக்கி வைத்துள்ளனர். அதேபோல கிட்டதட்ட 40% பேரின் வீடுகளில் துப்பாக்கி இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. குறிப்பாக அதிக ஆற்றல் கொண்ட துப்பாக்கிகள் மற்றும் செமி ஆடோமேட்டிக் துப்பாக்கிகள் அமெரிக்கா முழுவதும் எப்போதும் இல்லாத வகையில் மலிவாகவும் பரவலாகவும் கிடைப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.
கட்டுப்பாடுகள்: அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 25இல் பொது இடங்களில் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அனுமதி இருக்கிறது. அமெரிக்காவில் 12 மாகாணங்களில் மட்டுமே ஹேண்ட் கன்ஸ் எனப்படும் கைத்துப்பாக்கிகளை வாங்க பெர்மிட் தேவை. அதேநேரம் இந்த மாகாணங்களில் ரைபிள் வகை துப்பாக்கிகளுக்கு பெர்மிட் தேவையில்லை. இந்த ரைபிள் துப்பாக்கி மூலமாகவே டிரம்ப் மீதான தாக்குதல் நடந்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா, கனெக்டிகட், ஹவாய் மாகாணங்களில் மட்டுமே ரைபிள் மற்றும் ஷார்ட்கன் வைத்திருக்கவும் பெர்மிட் தேவை.
அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 20 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகள் விற்பனைக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் சாதாரணமாக எந்தவொரு துப்பாக்கி கடைகளுக்குச் சென்றும் ஒருவரால் துப்பாக்கியை வாங்க முடியும். இதன் காரணமாகவே அங்கு இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரிக்கிறது.
குறையும் கட்டுப்பாடுகள்: 1968இல் ஒரு துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் 18 வயதுக்குட்பட்ட நபர்கள், தண்டனை பெற்ற குற்றவாளிகள், மனநலம் குன்றியவர்கள், பணிநீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளை வாங்குவதைத் தடை செய்கிறது. சில வகை துப்பாக்கிகளுக்குக் கட்டுப்பாடுகள் இருந்தாலும் பெரும்பாலான வகைகளுக்குக் கட்டுப்பாடுகள் இருப்பதில்லை. 1994இல் அதிக திறன் கொண்ட துப்பாக்கிகள் அதிக குண்டுகள் வாங்க அங்கு நாடு முழுக்க தடை இருந்தது. இருப்பினும், அப்போது அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் இந்த சட்டத்தை நீட்டிக்கவில்லை.
அமெரிக்காவில் வாழும் பெரும்பாலான மக்கள் துப்பாக்கிகளை வாங்கக் கடுமையான விதிகள் வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார்கள்.. யார் துப்பாக்கியை வாங்குகிறார், அவரது பின்னணி குறித்தும் தீவிரமாக ஆய்வு செய்யக் கோரிக்கை விடுக்கிறார்கள். இருப்பினும், அங்குத் துப்பாக்கிகளைத் தயார் செய்யும் நிறுவனங்கள் லாபி செய்து இதுபோன்ற சட்டங்கள் வராமல் பார்த்துக் கொள்கின்றன.
ஓட்டை: துப்பாக்கிச் சூடு நடந்த பென்சில்வேனியாவை பொறுத்தவரைக் கைத்துப்பாக்கி வாங்கக் குறைந்தபட்ச வயது 21 ஆகும். மேலும், உள்ளூர் போலீசாரின் அனுமதி தேவை.. ஆனால், ரைபிள் (துப்பாக்கிச் சூட்டிற்கு இந்த வகை தான் பயன்படுத்தப்பட்டது) அல்லது ஷார்ட்கன் வாங்க 18 வயது அடைந்தாலே போதும். போலீஸ் அனுமதி தேவையில்லை.. பேக் கிரண்வுண்ட் செக் கூட பெரிதாக இருக்காது.
டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் வயது 20 என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அனைத்து வகை துப்பாக்கிகளை வாங்கவும் குறைந்தபட்ச வயதாக 25ஐ நிர்ணயம் செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சட்டம் மட்டும் அமலுக்கு வந்திருந்தால் அந்த நபரால் துப்பாக்கியை வாங்கியே இருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications