"பிரதமர் மோடி எனது நண்பர்.. அவருக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன்.." பளிச்சென சொன்ன பைடன்
வாஷிங்டன்: ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகின் டாப் 20 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பு ஜி20 என்று அழைக்கப்படும். இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாட்டை நடத்தி பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கும்.
அப்படித்தான் கடந்த மாதம் இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு நடந்தது. இதில் உக்ரைன் போர் தொடங்கி பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
நாய் போல் சாவேனாம்.. ராவணன், ஹிட்லர்! காங்கிரஸ் தலைவர்கள் போட்டிபோட்டு திட்டுறாங்க - “எமோசன்”ஆன மோடி
ஜி20 கூட்டமைப்பு
சர்வதேச அளவில் மிகவும் முக்கியமான கூட்டமைப்புகளில் ஒன்றாக இந்த ஜி20 கூட்டமைப்பு பார்க்கப்படுகிறது. உலக பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவற்றில் பெரும்பகுதி இந்த ஜி20 அமைப்பில் இருந்துதான் வருகிறது. இவ்வளவு வலிமையான அமைப்பிற்கு ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடுகள் தலைமையேற்கும். கடந்த ஆண்டு இந்தோனேசியா இந்த ஜி20 கூட்டமைப்பிற்குத் தலைமையேற்றிருந்த நிலையில், இந்தாண்டு இந்தியா இதற்குத் தலைமை ஏற்றுள்ளது. அதிகாரப்பூர்வமாக நேற்று டிச.1ஆம் தேதி முதல் ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டது.
பிரதமர் மோடி
இந்தோனிசேயாவை போலவே இந்தியா அடுத்தாண்டு ஜி20 மாநாட்டை நடத்த உள்ளது. தலைமை பொறுப்பேற்ற பிறகு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பு அனைத்தையும் உள்ளடக்கிய லட்சியத்துடன் செயல்படும். பெண் வளர்ச்சி, அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும், இயற்கை வளங்கள் நமக்குச் சொந்தம் என்ற சிந்தனையை மாற்றி "இயற்கை வளங்களுக்கு நாம்தான் பொறுப்பு" என்ற சூழலை உருவாக்க இந்தியா செயல்படும். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளைக் கொண்ட இந்தியா தலைமையில் ஜி20 கூட்டமைப்பு இருக்கும்" என்று கூறியிருந்தார்.
அதிபர் பைடன்
இந்தியா நேற்று டிச.1ஆம் தேதி தான் அதிகாரப்பூர்வமாகத் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தது. இதற்கிடையே இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் எப்போதும் உறுதுணையாக இருக்கப் போவதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இந்தியா அமெரிக்காவின் வலுவான கூட்டணி நாடாக உள்ளது.. மேலும் இந்தியாவின் ஜி20 தலைவர் பதவியில் இருக்கும் போது எனது நண்பரான பிரதமர் மோடிக்கு ஆதரவளிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
உடன் நிற்போம்
காலநிலை, ஆற்றல் மற்றும் உணவு நெருக்கடிகள் போன்ற சவால்களைச் சமாளிக்கும் அதே வேளையில் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிச் செல்ல நாங்கள் பெரியளவில் உதவுவோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு சுமுகமாகவே இருந்து வருகிறது. அதிலும் இந்தியா ரஷ்யா உடன் நல்ல உறவை வைத்திருக்கும் சூழலில் அமெரிக்கா உடனும் நெருங்கிய உறவையே கொண்டிருக்கிறது. அதேபோல ஜி20 மாநாட்டிலும் கூட பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பைடன் இடையே நடந்த உரையாடல் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் பைடன் தேடி வந்து வரவேற்று இருந்தார்.
பாராட்டு
மேலும், ஜி20 மாநாட்டில் இந்த நூற்றாண்டு போருக்கானது இல்லை என்று இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், அதை அமெரிக்கா வெகுவாக பாராட்டி இருந்தது. இந்தியா-அமெரிக்க வரலாற்றில், 2022 ஒரு முக்கிய ஆண்டாக இருந்தது என்றும் அடுத்த ஆண்டு அது இன்னும் முக்கியமானதாக இருக்கும் என்றும் வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஜான் ஃபைனர் கூறியிருந்தார். இந்தியா உடனான உறவைச் சர்வதேச அளவில் மிகவும் முக்கியமான ஒரு உறவாக பைடன் நிர்வாகம் பார்ப்பதாகவும் அந்நாட்டின் முதன்மை துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபைனர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.