"நாளை சூரியன் அஸ்தமிக்கும் முன்பு.." இறங்கி அடித்த டிரம்ப்.. ஆரம்பமே அதிரடி! பரபரக்கும் அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்கும் முன்பு தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய டிரம்ப் பல அதிரடி கருத்துகளைத் தெரிவித்துள்ளார். 2021ல் நடந்த நாடாளுமன்ற தாக்குதல் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு பொது மன்னிப்பு வழங்க உள்ளதாகச் சொன்ன டிரம்ப், சட்ட விரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டிரம்ப் இன்னும் சற்று நேரத்தில் பதவியேற்கிறார். அங்கு நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் பதவியேற்பு விழா நடக்க இருந்தது.

டிரம்ப் பதவியேற்பு விழா:
இருப்பினும், அங்கு மிகக் கடுமையான குளிர் நிலவுவதால் பதவியேற்பு விழா உள்ளரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் பதவியேற்பு விழாவில் பல உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கிடையே அதிபராகப் பதவியேற்க சில மணி நேரத்திற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டிரம்ப் சில அதிரடி கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
வெற்றி பேரணி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார். வாக்குறுதிகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற அவர், முதல் நாளில் இருந்தே சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியில் அனுப்ப கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சூரியன் அஸ்தமிக்கும் முன்பு:
கேபிடல் ஒன் அரங்கில் மேக் அமெரிக்கா கிரேட் அகைன் விக்டரி ரேலியில் இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நாளை சூரியன் அஸ்தமிக்கும் முன்பு, நம் நாட்டின் மீதான படையெடுப்பு நிறுத்தப்பட்டிருக்கும். நாம் இன்று அதிபர் தேர்தலில் வென்றுள்ளோம்.. இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் இயக்கம்.. 75 நாட்களுக்கு முன்பு, இதுவரை நமது நாடு இதுவரை கண்டிராத மாபெரும் வெற்றியை அடைந்தோம். நாளை முதல், வலிமையாக இன்னும் வேகமாக நமது நாடு எதிர்கொள்ளும் ஒவ்வொரு நெருக்கடியையும் சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.
எல்லா பிரச்சினைகளையும் சரி செய்வோம்:
உக்ரைன் நாட்டில் போர் தொடரும் நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வருவேன். மத்திய கிழக்கில் இப்போது மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. அதையும் நான் முடிவுக்குக் கொண்டு வரப் போகிறேன். மூன்றாம் உலகப் போரைத் தடுக்கப் போகிறேன். உலகம் மூன்றாம் உலகப் போருக்கு எந்தளவுக்கு அருகில் இருக்கிறது என்பது உங்களுக்குப் புரியாது. அதை நாம் தடுக்கப் போகிறோம்.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்கப் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வந்த நிலையில், அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கப் போகிறோம். மீண்டும் அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கப் போகிறது" என்றார்.
அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல்:
தொடர்ந்து தீவிர வலதுசாரிகளுக்காகப் பேசிய டிரம்ப், "கடந்தாண்டு நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த தாக்குதல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட 1,500 பேரில் பலருக்கு நிச்சயம் மன்னிப்பு வழங்க உள்ளேன். பைடன் ஆட்சியில் போடப்பட்ட அனைத்து முட்டாள்தனமான உத்தரவுகளையும் நான் ரத்து செய்யப் போகிறேன்" என்றார்
கடந்த 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் பைடனிடம் டிரம்ப் தோல்வி அடைந்தார். இருப்பினும், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், ரோட்டில் இறங்கிப் போராட வேண்டும் எனத் தனது ஆதரவாளர்களிடையே பேசினார். இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில், திடீரென ஒரு கட்டத்தில் நாடாளுமன்ற கட்டிடத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் உட்பட சிலர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications