ஊழல் குறியீடு.. இந்தியா நிலைமை மோசம்.. நார்வே, சிங்கப்பூர் டாப்! சீனாவும் நம்மை விட பெட்டர்
வாஷிங்டன்: ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊழல் குறியீடு ரேங்கில் இந்தியா 93ஆவது இடத்தை தான் பிடித்துள்ளது. ஆசிய பிராந்திய சராசரியை விட இந்தியா குறைவான மார்க்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஊழல் குறியீடு ரேங்கை வெளியிடும். அதன்படி இந்தாண்டிற்கான பட்டிலை ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு இப்போது வெளியிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டிற்கான இந்த லிஸ்டில் மொத்தம் 180 நாடுகள் உள்ள நிலையில், அதில் இந்தியா 93ஆவது இடத்தில் உள்ளது.
இந்தியா: மாலதீவுகள், கஜகஸ்தான் மற்றும் லெசோதோ ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது 93ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது. முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டில், இதே பட்டியலில் இந்தியா 85ஆவது இடத்தை மாலதீவுகள் உட்பட மற்ற ஐந்து நாடுகளுடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் தரவரிசையில் பல இடங்கள் பின்னால் சென்று இருந்தாலும் கூட, அதன் மதிப்பெண்களில் முந்தைய ஆண்டை காட்டிலும் ஒரு புள்ளி மட்டுமே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் இந்த ஊழல் குறியீடு ரேங்கில் 180 நாடுகளுக்கு மார்க் வழங்கப்படும். பொதுத்துறையில் ஊழல் அதிகமாக இருந்தால் ஜீரோ மதிப்பெண் வழங்கப்படும் நிலையில், ஊழல் இல்லாத நாடுகளுக்கு100 மார்க் வழங்கப்படும்.
முதலிடம் யாருக்கு: இந்த லிஸ்ட்டில் 90 மார்க் உடன் டென்மார்க் முதலிடத்தில் இருக்கிறது. தொடர்ந்து 6ஆவது முறையாக டென்மார்க் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல பின்லாந்து 87 மார்க் உடன் இரண்டாவது இடத்திலும் நியூசிலாந்து 85 மார்க் உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. நார்வே மற்றும் சிங்கப்பூர் நாடுகள் முறையே 84 மற்றும் 83 மார்க் உடன் 4 மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன. ஸ்வீடன் (82), சுவிட்சர்லாந்து (82), நெதர்லாந்து (79), ஜெர்மனி (78) லக்சம்பேர்க் (78) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மேலும், அதிக ஊழல் கொண்ட நாடாகச் சோமாலியா இருக்கிறது. அந்த நாடு வெறும் 11 மார்க் மட்டுமே பெற்றுள்ளது. வெனிசுலா 2ஆவது இடத்திலும் சிரியா மூன்றாவது இடத்திலும் உள்ளது. தெற்கு சூடான், ஏமன், வடகொரியா ஆகியந நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.
குறைவு: இந்தியாவைப் பொறுத்தவரை 39 மார்க் உடன் 93ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 6ஆண்டுகளில் 2018இல் இந்தியா அதிகபட்சமாக 41 மார்க் பெற்று இருந்தது. அதன் பிறகு 2020இல் அதன் மார்க் 40ஆகக் குறைந்த நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அதே மார்க் தான் இருந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது இந்தியா மார்க் 38ஆகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ரேங்கில் பெரியளவில் மாற்றம் இல்லை என்றே டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டுகிறது. சர்வதேச அளவில் ஊழல் குறியீட்டு மார்க் தொடர்ச்சியாக 12ஆவது ஆண்டாக 43ஆகவே இருக்கிறது. மேலும், இந்த லிஸ்டில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் 50க்குக் கீழே மதிப்பெண் பெற்றுள்ளன.
இந்தியாவை உள்ளடக்கிய ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைப் பொறுத்தவரை அது தொடர்ச்சியாக ஐந்து ஆண்டாகச் சராசரி மார்க்காக 45ஐ மட்டுமே பெற்றுள்ளது. இந்தியாவின் மார்க் என்பது பிராந்திய சராசரியை விடக் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா டாப் இடங்களில் உள்ளன. நமது அண்டை நாடான பாகிஸ்தான் 29 புள்ளிகளுடன் 133ஆவது இடத்திலும் சீனா 42ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications