"இந்தியா vs அமெரிக்கா.." வாழ்க்கை தரம் எங்கே பெஸ்ட்.. இவ்வளவு விஷயம் மாறுதா.. இதை பாருங்க
வாஷிங்டன்: இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று செட்டில் ஆவது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதன்படி சமீபத்தில் அமெரிக்கா சென்ற பெண் ஒருவர் அங்கிருக்கும் வாழ்க்கைத் தரம் மற்றும் இந்தியாவில் உள்ள வாழ்க்கைத் தரம் ஆகிய இரண்டில் எது சிறந்தது என்பதை ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார். அது இணையத்தில் இப்போது மிகப் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சமீப ஆண்டுகளாகவே இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் சென்று செட்டிலாவது அதிகரித்தே வருகிறது. இந்தியாவுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவின் வாழ்க்கை முறை முற்றிலும் வேறாக இருக்கும். அது இந்தியர்கள் எதிர்பார்க்கும் ஒன்றாகவே இருக்கிறது.

இதற்கிடையே சமீபத்தில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்ற பெண் ஒருவர் அங்கு இருக்கும் வாழ்க்கை முறை குறித்து சமூக வலைத்தளத்தில் சில கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார். அதுவே இணையத்தில் மிகப் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
விவாதம்: நிஹாரிகா கவுர் சோதி என்ற பெண் தான் இதைப் பதிவிட்டுள்ளார். அவர் இரு நாடுகளிலும் உள்ள வாழ்க்கைத் தரம் குறித்த போட்ட பதிவு தான் இப்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதாவது இந்தியாவில் இருந்த வரை வீடுகளுக்கே நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் மளிகைப் பொருட்கள், வீட்டு வேலைகள் ஆட்களை வைத்திருப்பது ஆகியவற்றையே அவர் ஆடம்பரமான வாழ்க்கையாகக் கருதினாராம். ஆனால், அமெரிக்கா வந்த பிறகே சுத்தமான காற்று மற்றும் நன்கு பராமரிக்கப்பட்ட சாலைகள் ஒருவரது வாழ்க்கைத் தரத்திற்கு எந்தளவுக்கு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டதாக அவர் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் மேலும் கூறுகையில், "அமெரிக்காவுக்கு நான் வந்து 11 நாட்கள் நிறைவடைந்துவிட்டது. நேற்றிரவு எனக்கு தோன்றிய ஒரு விஷயத்தை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால், நான் சொல்வது உங்களில் சிலருக்குக் கோபத்தைத் தூண்டலாம்.
எது ஆடம்பரம்: அமெரிக்கா வருவதற்கு முன்பு இந்தியாவில் தான் ஒருவரால் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ முடியும் என நினைத்தேன். விரைவான உணவு டெலிவரி, 10 நிமிட மளிகைப் பொருட்கள் டெலிவரி, குறைந்த செலவில் வீட்டு வேலைக்கு ஆள் எனச் சொல்லிக் கொண்ட போகலாம். உண்மையில் இந்தியாவில் இருந்த வரை மளிகை பொருட்கள் டெலிவரி தான் என்னைப் பல நேரங்களில் காப்பாற்றியது.
ஆனால், அமெரிக்கா வந்த பிறகே எது உண்மையான வாழ்க்கைத் தரம் என்பதை உணர முடிந்தது. அடிப்படைத் தேவைகள் தரமாக இருப்பதே சிறந்த வாழ்க்கைத் தரம் என்பதை உணர்ந்தேன். சுத்தமான காற்று, கட் ஆகாத மின்சாரம், தண்ணீர் கிடைப்பது முக்கியம்.. சுற்றிலும் ஏராளமான பசுமை, தரமான சாலைகளும் ரொம்பவே முக்கியம்
எது தேவை: சுத்தமான காற்று மற்றும் அச்சமின்றி நடந்தே கடைக்குச் சென்று பொருட்களை வாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் ஒருவருக்கு மளிகைப் பொருள் டெலிவரி தேவையே இல்லை. மிக மோசமான டிராபிக் நெரிசல், மோசமான டிரைவர்கள் இல்லாமல் சாலைகளில் வாகனம் ஓட்ட முடிந்தாலும் அதுவும் நிம்மதி தான்.

இப்போது என்னைப் பொறுத்தவரை உண்மையான ஆடம்பரம் என்னவென்றால் மின்சாரம் இல்லாமல் 45C வெப்பத்தில் படாதபாடு படுவதற்குப் பதிலாக வீடு முழுக்க சென்டிரல் மத்திய ஏர் கண்டிஷனிங் இருப்பது.. சுற்றி இருக்கும் ஆண்கள் என்ன நினைப்பார்கள் என யோசிக்காமல் உங்களுக்கு வசதியான ஆடையை அணியும் சுதந்திரம் ஆகியவை இங்குக் கிடைக்கிறது.
சந்தோஷம்: ஏனென்றால் கடந்த சில நாட்களாகக் காலை நடைப்பயிற்சி, நல்ல காற்று, பசுமையான நிலங்கள், சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை நிம்மதியாக ரசிக்கும் வாய்ப்பு, பறவைகளின் சத்தம் ஆகியவை தான் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தன. ஒருவேளை வாழ்க்கைத் தரம் மற்றும் ஆடம்பரம் பற்றிய எனது வரையறை மாறியிருக்கலாம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அவரது இந்தக் கருத்து தான் இணையத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு தரப்பினர் அவரது கருத்தை ஆமோதித்து வருகின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் ஆரம்பத்தில் அப்படி தான் இருக்கும்.. மருத்துவச் செலவுகள், வரி எனப் போகப் போக அங்குள்ள சிக்கல்கள் உங்களுக்குப் புரியும் எனக் கருத்து கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications