"இரண்டே காரணங்கள்.. இவை இருக்கும் வரை.. கொரோனாவை அழிக்கவே முடியாது.." WHO தரும் எச்சரிக்கை
வாஷிங்டன்: ஓமிக்ரான் அலை இப்போது தான் ஓய்ந்துள்ள நிலையில், அடுத்து புதிய உருமாறிய கொரோனா எப்படித் தோன்ற வாய்ப்புள்ளது என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளிடையே மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக வல்லரசுகள் தொடங்கி, பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் கொரோனா வைரசால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், உலக நாடுகளில் அடுத்தடுத்த அலைகளை ஏற்பட்டு வருகிறது. இதனால் கொரோனா வைரசை முழுவதுமாக அழிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
அதாவது சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா உலகெங்கும் முதல் அலையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஆல்பா. டெல்டா போன்ற கொரோனா வகைகள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தின. இதனால் உயிரிழப்புகள் ஒரு புறம் ஏற்பட்டது என்றால், பொருளாதார பாதிப்பும் மறுபுறம் மிக மோசமாக ஏற்பட்டது. இதனால் சீனா தவிர உலகின் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

தொடர்ந்து உருமாறும் கொரோனா
இதனிடையே ஸ்டெல்த் ஓமிக்ரான் என்ற ஓமிக்ரானின் புதிய வகையும் தற்போது பரவ தொடங்கியுள்ளது. இது ஓரிஜினல் ஓமிக்ரான் கொரோனாவை விட வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வரும் காலத்தில் புதிய உருமாறிய கொரோனா வைரசும் கூட உருவாகலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே புதிய வகை கொரோனா வைரஸ் எந்த சூழலில் தோன்றும் என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிச்சயமற்ற பொருளாதாரம்
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், "கொரோனா பெருந்தொற்று காரணமாகச் சர்வதேச அளவில் நிச்சயமற்ற பொருளாதாரம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக நீண்டகால பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய நீட்டித்த வளர்ச்சி என்ற நமது இலக்கை இது பின்வாங்கச் செய்துள்ளது. நீண்ட கால பொருளாதாரத்தில் அனைவரையும் உள்ளடக்கிய நீட்டித்த வளர்ச்சி என்பது மிகவும் முக்கியம். எனவே, சுகாதாரம் மற்றும் நிதித் துறைகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம்.

இரண்டே காரணங்கள்
ஓமிக்ரான் அலை முடிந்துவிட்டது என்பதற்காக கொரோனா வைரஸ் முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. பணக்கார நாடுகளில் மட்டுமே வேக்சின் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏழை மற்றும் பின்தங்கிய பல நாடுகளில் வேக்சின் பணிகள் இன்னும் சிறப்பாக நடைபெறவில்லை. அதேபோல இந்த நாடுகளில் கொரோனா சோதனையும் வேகமாக நடத்தப்படுவதில்லை. இந்த இரண்டும் சேரும்போது புதிய வகை கொரோனா வைரஸ் தோன்றும். இந்த வேக்சின் மற்றும் சோதனைக்கான சமத்துவமின்மை எவ்வளவு காலம் தொடர்கிறதோ, அவ்வளவு காலம் பெருந்தொற்றும் நீடிக்கும்" என்று அவர் எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications