கொடுமை.. எந்த பெண்ணையும் நிர்வாணமாக பார்க்க முடியும்.. பெருகிவிட்ட ஏஐ வெப்சைட்கள்
வாஷிங்டன்: பெண்களின் ஆடைகளை அகற்றி, ஆபாசப் படங்களைத் தரும் ஏஐ இணையதளங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதாக பகீர் ஆய்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தாண்டு நாம் அடைந்த மிகப் பெரிய வளர்ச்சி என்றால் அது ஏஐ துறையில் தான். கடந்த பல ஆண்டுகளாகவே ஏஐ குறித்த ஆய்வுகள் நடந்து வந்தாலும் கூட சாட் ஜிபிடியின் வெற்றி அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது.

சாட் ஜிபிடியின் வெற்றி ஏஐ குறித்த ஆய்வுகளுக்கு நிதியையும் அள்ளிக் கொடுத்தது. இதனால் ஏஐ மாடல்களை வைத்துப் பல புது புது ஆய்வுகளும் நடந்து வந்தன. இதனால் ஏகப்பட்ட நன்மைகளும் கிடைத்தது.
ஏஐ மாடல்: அதேநேரம் ஏஐ மாடல்கள் மூலம் சமூகத்திற்கு நன்மை என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இதனால் சில மோசமான விளைவுகளும் கூட ஏற்படவே செய்கிறது. இதனால் வேலையின்மை அதிகரிக்கும் என்ற புகார்களும் இருக்கிறது. அதையும் தாண்டி பெண்கள் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் போலியான படங்கள் அல்லது வீடியோவையும் இதன் மூலம் உருவாக்க முடிகிறது. ராஷ்மிகா மந்தனா தொடங்கி பலரது போலி வீடியோக்கள் இப்படி இணையத்தில் பரவின.
இதற்கிடையே இது தொடர்பாக இப்போது ஒரு பகீர் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. அதாவது ஏஐ டூல்களில் இப்போது பெண்களை ஆடைகள் இல்லாமல் காட்டும் ஏஐ செயலிகள் மற்றும் இணையதளங்கள் இப்போது வேகமாகப் பிரபலமடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 2.4 கோடி பேர் இதுபோல பெண்களை ஆபாசமாகக் காட்டும் தளங்களுக்குச் சென்றுள்ளனர். இது குறித்த தகவல்களை கிராஃபிகா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆபாசமாகக் காட்டும் தளங்கள்: பெண்களை ஆபாசமாகக் காட்டும் பல தளங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடும் போது பெண்களை ஆபாசமாகக் காட்டும் தளங்களின் லிங்குகள் எக்ஸ் மற்றும் ரெட்டிட் தளங்களில் 2,400% அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஏஐ மூலம் பெண்களின் படத்தை நிர்வாணமாக உருவாக்க முடிகிறது. இதில் பல தளங்கள் பெண்கள் படத்தை மட்டுமே நிர்வாணமாகக் காட்டுகிறது. இதில் இருந்தே இவர்கள் நோக்கம் எவ்வளவு மோசமானது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலம் கையில் எந்த பெண்ணின் படம் கிடைத்தாலும் அதை வைத்து போலியாக ஆபாசப் படம் உருவாக்க முடியும் என்ற சூழல் உருவாகிறது. இது இணையத்தையே அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தான ஒன்றாக மாற்றுகிறது.
ஏஐ ஆபத்துகள்: கடந்த சில ஆண்டுகளில் ஏஐ மாடல்கள் தொழில்நுட்ப ரீதியாகப் பல மடங்கு வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதனால் ஏஐ மாடல்கள் தரும் படங்களை உடனடியாக நம்மால் போலி படமா இல்லை ஒர்ஜினலா என்பதைக் கண்டறிய முடிவதில்லை. இது சமூகத்தில் மிகப் பெரிய அழிவைத் தரலாம் என்பதால் இந்த விவகாரத்தில் உலக நாடுகள் மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது.
இதுபோன்ற தளங்களைத் தேடிச் செல்ல வேண்டும் என்று கூட இல்லையாம். கூகுளில் குறிப்பிட்ட வார்த்தையைப் போட்டுத் தேடினாலே இதுபோன்ற தளங்கள் வருகிறது. இதுபோன்ற மோசமான தளங்களை அணுகுவது அந்தளவுக்கு ஈஸியான ஒன்றாக இருக்கிறது. இந்த தளங்கள் இதுபோன்ற போலி ஆபாசப் படங்களை ரெடி செய்ய மாதத்திற்கு 10 டாலர் அதாவது 880 ரூபாயைக் கட்டணமாக வசூலிக்கிறார்கள்.
ஏஐ மாடலை அடிப்படையாக வைத்து இயங்கும் இந்த போலி தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications