பால்டிமோர் விபத்து நினைவிருக்கா.. 2 மாசம் ஆகியும் இந்தியர்கள் கப்பலிலேயே இருப்பது ஏன்! பரபர தகவல்
வாஷிங்டன்: பால்டிமோர் நகரில் சரக்கு கப்பல் பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டு சுமார் 2 மாதம் ஆகிவிட்ட நிலையில், இன்னும் அந்த கப்பலிலேயே இந்திய குழு இருக்கிறது. அதற்கு என்ன காரணம்.. ஏன் அவர்கள் வெளியே வர அனுமதி இல்லை என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த மார்ச் மாதம் மார்ச் 26ஆம் தேதி அதிகாலை அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் மிக பெரிய விபத்து அரங்கேறியது. அன்றைய தினம் அதிகாலை பால்டிமோர் நகரில் அமைந்திருந்த பாலத்தில் கண்டெய்னர் கப்பல் ஒன்று மோதியது.

சில நொடிகளில் அந்த பாலம் முழுமையாக இடிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது.
கப்பல் விபத்து: அந்தக் கப்பல் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது. கப்பல் தங்கள் கட்டுப்பாட்டை இழந்ததை உணர்ந்த கப்பல் பணியாளர்கள் உடனடியாக பாலத்தை நிர்வகிக்கும் ஊழியர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக உயிரிழப்புகள் குறைந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக அங்கு பாலத்தின் இடுபாடுகள் ஆற்றிலேயே விழுந்தது. இதனால் துறைமுக செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. விபத்து நடந்த சரக்கு கப்பலில் இந்தியர்கள் இருந்துள்ளனர். அவர்கள் கப்பலை விட்டு வெளியே அப்போது அனுமதி அளிக்கப்படவில்லை. காயமடைந்த சில பணியாளர்களும் கூட சிகிச்சை முடிந்தவுடன் மீண்டும் கப்பலுக்கே திரும்பிட்டனர். இதற்கிடையே விபத்து நடந்து சுமார் 2 மாதத்திற்கு பிறகும் இந்திய பணியாளர்கள் கப்பலுக்கு உள்ளேயே இருந்து வருகிறார்கள். அதற்கான காரணத்தை நாம் பார்க்காலம்.
விபத்து: படாப்ஸ்கோ ஆற்றின் மீது 2.6 கிமீ நீளமுள்ள, நான்கு வழிச்சாலை கொண்ட பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் கடந்த மார்ச் மாதம் கப்பல் மோதியதில் இடிந்து விழுந்து விபத்தில் சிக்கியது. அது தொடர்பான வீடியோக்களை பார்க்கும் போது, அதில் விபத்திற்கு சில நொடிகள் முன்னால் கப்பலில் இருந்த விளக்குகள் எல்லாம் அணைந்து இருந்தது தெரிந்தது.
இதற்கிடையே விபத்து நடந்து சுமார் 2 மாதம் ஆகிவிட்ட நிலையில், விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை வெளியாகியுள்ளது.. அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த வழக்கை விசாரித்து இருந்தது. அதில் பால்டிமோர் புறப்படுவதற்கு சுமார் பத்து மணி நேரத்திற்கு முன்பே கப்பலில் ஓரிரு முறை மின்தடைகள் ஏற்பட்டு இருந்ததாக கூறப்பட்டு இருந்தது. மேலும், அதில் கப்பல் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.
வெளியே வர அனுமதியில்லை: பாலத்தின் ஈடுபாடுகள் அகற்றும் பணிகள் கிட்டதட்ட முடியும் தறுவாயில் இருப்பதால் கப்பல் பணியாளர்கள் மீண்டும் தங்கள் குடும்பத்தினரை சந்திக்கும் சூழல் விரைவில் உருவாகும் என்கிறார்கள் அதிகாரிகள். அந்தக் கப்பலில் 20 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 21 பணியாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்: விசா கட்டுப்பாடுகள் மற்றும் விபத்து குறித்து எப்ஃபிஐ விசாரணை காரணமாகவே கப்பலில் இருந்த குழுவால் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை. இப்போது இடுபாடுகளை அகற்றும் பணிகள் முடிந்துள்ள நிலையில், அவர்கள் விரைவில் தங்கள் குடும்பத்தினருடன் சேர போகிறார்கள்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இத்தனை நாட்கள் ஒரே இடத்தில் இருந்தாலும் கப்பல் பணியாளர்கள் உற்சாகமாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மன ரீதியான சோர்வு எதுவும் ஏற்படவில்லை.. அவர்கள் கப்பலில் வழக்கமான பணிகள மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், இடுபாடுகளை அகற்றவும் உதவுகிறார்கள்.. விசாரணைக்கும் அவர்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்" என்றார்.
விசாரணை: கடந்த ஏப்ரல் மாதம், இந்த கப்பல் விபத்து தொடர்பாக எஃப்.பி.ஐ விசாரணையை தொடங்கினர். விசாரணையின் ஒரு பகுதியாக கப்பல் ஊழியர்களின் செல்போன்களை அதிகாரிகள் கைப்பற்றிவிட்டனர். இதனால் அவர்களால் வெளியுலகத்துடன் எந்தவொரு தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் பணியாளர்களுக்கு சிம் கார்டுகள் மற்றும் டேட்டா இல்லாமல் தற்காலிக செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications