டிரம்ப் மீது மீண்டும் கொலை முயற்சி.. பாதுகாப்பு தருவதில் என்ன சிக்கல்! சீக்ரெட் சர்வீஸ் திணறுவது ஏன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்துள்ளது. டிரம்ப் மீது 3 மாதங்களில் நடக்கும் 2வது கொலை முயற்சி தாக்குதல் இதுவாகும். டிரம்ப் மீது அடுத்தடுத்து கொலை முயற்சி நடத்த என்ன காரணம்.. டிரம்பிற்கு பாதுகாப்பு தருவதில் என்ன பிரச்சினை என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவில் வரும் நவ. மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடும் நிலையில், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார்.

இருவருக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும் நிலையில், பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.இந்தச் சூழலில் டிரம்ப் மீது நேற்றைய தினம் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அவரை கொலை செய்யக் கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு: புளோரிடாவின் வெஸ்ட் பால்ம் பீச்சில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த போதிலும் தான் பாதுகாப்பாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் 58 வயதான வட கரோலினாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் அவர் எதற்காக இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டார் என்ற விவரம் தெரியவில்லை. அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து சுமார் 450 மீட்டர் தொலைவில் ஏகே 47 மற்றும் டெலஸ்கோப் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் தான் பென்சில்வேனியாவில் டிரம்ப்பை கொலை செய்த முயற்சி நடந்த நிலையில், மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இப்படி அடுத்தடுத்து நடக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்க அரசியல் தலைவர்களைப் பாதுகாக்கும் சீக்ரெட் சர்வீஸ் குறித்து கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.
கோல்ப் மைதானம்: அதேநேரம் டிரம்பின் இந்த கோல்ஃப் மைதானத்தில் பாதுகாப்பு தருவது என்பது நீண்ட காலமாகவே சிக்கலாகவே இருந்துள்ளதாக சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கையும் விடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். அமெரிக்க அரசியல் தலைவர் விசிட் செய்யும் மிகப் பெரிய திறந்த வெளிப்புறப் பகுதியாக இந்த கோல்ப் மைதானம் இருக்கிறது.
இந்த கோல்ப் மைதானம் சாதாரண சாலைகளுடன் எந்தவொரு வேலி அல்லது தடுப்பு இல்லாமல் இணைகிறது. கோல்ப் மைதானத்திற்கு இடையே மரங்கள் சிறுகுன்றுகளும் உள்ளன. இவை கொலையாளிகள் பதுங்கும் இடமாக இருப்பதும் ஒரு சிக்கல். இந்த நபரும் கூட கோல்ப் மைதானத்தில் உள்ள சிறு புதர்களை வைத்தே இவ்வளவு அருகே வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சிக்கல் ஏன்: இதற்கு முன்பு வரை அதிபர்கள் அல்லது முன்னாள் அதிபர்கள் கோல்ப் மைதானத்திற்கு வந்தால் அந்த மைதானம் முழுமையாக மூடப்படும்.. அருகே இருக்கும் சாலைகளும் மூடப்படும். ஆனால், டிரம்ப் அடிக்கடி கோல்ப் விளையாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதால் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் டிரம்பின் வாகனத்திற்கு முன்பும் பின்பும் மட்டும் செல்வார்கள். அவர் எங்கு விளையாடப் போகிறாரோ.. அந்த இடத்தில் சில நிமிடங்களுக்கு முன்பு மட்டுமே சோதனை செய்வதே வழக்கமாக இருந்துள்ளது.
3 முக்கிய சாலைகள்: டிரம்ப் எப்போதும் கோல்ப் விளையாடும் இந்த கோல்ஃப் கிளப், மூன்று முக்கிய சாலைகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. பாம் பீச் சர்வதேச விமான நிலையமும் அருகில் உள்ளது. இதனால் யார் கோல்ப் மைதானத்திற்குள் வருகிறார்கள்.. யார் வெளியே செல்கிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது என்கிறார்கள். இதுவே டிரம்பின் கோல்ப் மைதானத்தில் பாதுகாப்பு தருவதை சீக்ரெட் சர்வீஸுக்கு சிக்கலானதாக மாற்றுகிறது.












Click it and Unblock the Notifications