பாகிஸ்தான் தூக்கத்தை கெடுக்கும் டொனால்ட் ட்ரம்ப் அமைச்சரவை!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் இப்போது தனது அமைச்சரவை தேர்வு செய்து வருகிறார். இப்போது வரை அவர் பல முக்கிய பொறுப்புகளுக்குப் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்களையே தேர்வு செய்து இருக்கிறார். இது பாகிஸ்தானின் தூக்கத்தைக் கெடுப்பதாக இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் 2வது முறையாகப் பதவியேற்க இருக்கிறார். டிரம்ப் அடுத்தாண்டு தொடக்கத்தில் அதிபராகப் பதவியேற்கும் நிலையில், தனது அமைச்சரவையைத் தேர்வு செய்து வருகிறார்.

டிரம்ப் தேர்வுகள்: இதற்கிடையே முக்கிய பதவிகளுக்கு டிரம்ப் தேர்வு செய்துள்ள நியமனங்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் தூக்கத்தையே கெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உளவுத் துறையான சிஐஏ தலைவர் ஆகிய பதவிகளுக்கு டிரம்பின் தேர்வைப் பார்த்து பாகிஸ்தானை மிரண்டு போய் இருக்கிறது.
வெளியுறவுத்துறை: அமெரிக்க வெளியுறவு துறைக்குத் தலைமையேற்க மார்கோ ரூபியோவை டிரம்ப் தேர்வு செய்துள்ளார். இவர் பொதுவாகவே இந்தியா ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் ஆவார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் கருத்துக்களை முழுமையாக அங்கீகரிக்கும் மசோதாவை கூட அவர் தங்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் நேரடியாகவே ஆதரிப்பதாகவும் இதனால் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எந்தவொரு உதவியையும் வழங்கக் கூடாது என்று மார்கோ ரூபியோ தனது மசோதாவில் கூறியிருந்தார்.
மேலும், சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கைச் சமாளிக்க இந்தியாவுடன் நீண்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவை என்றும் ஜப்பான், இஸ்ரேலை ஆகிய நட்பு நாடுகளுக்கு இணையாக இந்தியாவுடன் தொழில்நுட்ப பரிமாற்றத்தைச் செய்ய வேண்டும் என்றும் மார்கோ ரூபியோ மசோதாவில் கூறப்பட்டு இருந்தது. இவரை வெளியுறவுத் துறைக்கு டிரம்ப் தேர்வு செய்துள்ளது பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்: அதேபோல அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸ் என்பவரை டிரம்ப் தேர்வு செய்துள்ளார். இவர் கடந்த காலங்களில் பாகிஸ்தானை மிகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக நேரடியாகக் குற்றஞ்சாட்டிய அவர், "பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை கருவியாக இருக்க முடியாது. லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட எந்தவொரு பிற பயங்கரவாத குழுக்களாக இருந்தாலும் ஏற்க முடியாது. பாகிஸ்தான் அவற்றை ஆதரிக்கக்கூடாது" என்றார்.
பயங்கரவாத அமைப்புகளுக்குப் பாகிஸ்தான் நிதியுதவி தரக்கூடாது என்றும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். அவரை தான் டிரம்ப் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகத் தேர்வு செய்து இருக்கிறார்.
உளவுத் துறை: அதேபோல பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் கருத்துகளை முழுமையாக ஆதரிக்கும் அமெரிக்க எம்பி துளசி கபார்ட் என்பவரை அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக டிரம்ப் தேர்வு செய்துள்ளார். 2011ல்அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்டார். பின்லேடன் அடைக்கலம் கொடுத்ததற்காகத் துளசி கபார்ட் பாகிஸ்தானைப் பலமுறை சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல சிஐஏ அமைப்பின் அடுத்த தலைவராக ஜான் ராட்க்ளிஃப் என்பவரை டிரம்ப் தேர்வு செய்துள்ளார். அவர் சீனா, ஈரான் மட்டுமின்றி பாகிஸ்தானுக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்.
பாகிஸ்தான் தூக்கத்தைக் கெடுக்கும் டிரம்ப்: இதுபோல பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டையும் இந்தியாவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை கொண்ட பலரை டிரம்ப் தனது அமைச்சரவையில் சேர்த்து வருகிறார். இதன் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குப் பாகிஸ்தான் தள்ளப்படும். எனவே, இப்போதே டிரம்ப் அமைச்சரவை தேர்வு பாகிஸ்தான் தூக்கத்தைக் கெடுப்பதாகவே இருப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications