"5 vs 20.." விட்டு கொடுக்காத ஈரான்.. விடாப்பிடியாக இழுக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்?
வாஷிங்டன்: வளைகுடா பிராந்தியத்தில் அமைதி நிலவுமா அல்லது மீண்டும் போர் மேகங்கள் சூழுமா என்கிற திக் திக் நிமிடங்கள் நீடிக்கின்றன. பாகிஸ்தானில் நடந்த மெகா முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், அந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எந்த விவகாரத்தில் உடன்பாடு ஏற்படவில்லை என்பது தொடர்பான தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையே நடந்து வந்த வளைகுடா போர் இப்போது தான் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. தற்காலிகமாகத் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்ட இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் இறங்கின. இருப்பினும், பாகிஸ்தானில் நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை. இதற்கிடையே பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரச்சனை என்ன
அணு ஆயுதத் தயாரிப்பிற்கான யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவது தான் இந்தப் பேச்சுவார்த்தையின் மைய பொருள். ஆனால், இரு நாடுகளும் முன்வைத்த நிபந்தனைகள் முழுமையாக வேறானது. இதில் அமெரிக்காவின் திட்டவட்டமான டிமாண்ட் ஒன்று தான்.. "யுரேனியம் செறிவூட்டலுக்குக் குறைந்தது 20 ஆண்டுகள் நிறுத்த வேண்டும்" என அமெரிக்கா கறாராகச் சொல்லிவிட்டதாக 'Axios' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், "5 வருஷத்துக்கு மேல் முடியாது" என ஈரான் ஒற்றைக் காலில் நிற்கிறது. இந்த '15 வருட இடைவெளி' தான் பேச்சுவார்த்தை தோல்வியடைய முக்கியக் காரணம் எனச் சொல்லப்படுகிறது..
செறிவூட்டப்பட்ட யுரேனியம்
மேலும், ஈரானில் உள்ள அனைத்து உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தையும் அகற்ற வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. அதை ஏற்காத ஈரான், அதற்கு மாற்றாக, கண்காணிப்புடன் கூடிய 'டவுன்-பிளெண்டிங்' முறையை அமல்படுத்த ஈரான் முன்மொழிந்தது. இந்த யுரெனியம் செறிவூட்டலே பிரச்சினைக்குப் பிரதான காரணமாக இருந்துள்ளது.
12.5 ஆண்டுகள்
அமெரிக்காவும் ஈரானும் பிடிவாதம் பிடித்தாலும், திரைமறைவில் வேறொரு டீல் நடப்பதாக அரசியல் ஆய்வாளர் இயன் பிரம்மர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், "அமெரிக்காவும் ஈரானும் 12.5 ஆண்டுத் தடை என்கிற ஒரு பொதுவான முடிவை நோக்கி நகர்கின்றன" எனத் தனது ட்விட்டர் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இது நடந்தால், அது ஒரு பெரிய ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படும்.
பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வரும் என ஈரான் எதிர்பார்த்திருந்த நேரத்தில், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் பாதியிலேயே கிளம்பியதுடன், ஈரானைத் தான் இதற்கு முழுப் பொறுப்பு என்றும் குற்றம் சாட்டினார். ஆனால், இதை மறுத்த ஈரான், "நாங்க ஒரு ஒப்பந்தத்துக்குத் தயாராக இருந்தோம், ஆனால் அமெரிக்கா தான் பிரச்சினைக்குக் காரணம்" என ஈரான் அதிகாரிகள் பதிலுக்கு குற்றம்சாட்டினர்.
டிரம்ப் திட்டவட்டம்
இதற்கிடையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் வழக்கம் போலத் தனது ஸ்டைலில் ஒரு ட்விஸ்ட் கொடுத்துள்ளார். அதாவது அவர் இது தொடர்பாக, "ஈரானில் உள்ள சரியான மனிதர்கள் எங்களைத் தொடர்பு கொண்டுள்ளார்கள், அவர்களுக்கு ஒரு டீல் செய்ய ஆசை இருக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில், ஈரான் கப்பல்களுக்குப் பொருளாதாரத் தடை மற்றும் முற்றுகை என இன்னொரு பக்கம் அழுத்தத்தையும் கொடுத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications