"டாலர் வேண்டாமே.." ஓடும் வளரும் நாடுகள்.. புது முயற்சி பலன் தருமா? இந்தியாவுக்கு ஏற்பட போகும் நன்மை!
வாஷிங்டன்: இப்போது பெரும்பாலும் உலக நாடுகளுக்கு இடையே வர்த்தகம் டாலரிலேயே நடக்கிறது. இதனிடையே அந்த நிலையை மாற்ற வளரும் நாடுகள் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.
உலகில் சர்வதேச நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தகம் எப்போதும் அமெரிக்காவின் டாலரில் தான் நடக்கும். ஆனால், இப்போது வளரும் நாடுகள் டாலரை நம்பி இருக்கும் போக்கைக் குறைக்க விரும்புகிறார்கள்.
இதனால் De-dollarisation எனப்படும் டாலர் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளை வளரும் நாடுகள் எடுக்கிறது. கடந்த மாதம் டாலர்களுக்கு பதிலாக யுவானில் சீன இறக்குமதிகளுக்குப் பணம் செலுத்தப் பிரேசில் ஒப்புக் கொண்டது.
புது முயற்சி: அர்ஜெண்டினாவும் சீனாவுடன் இதே போல யுவானில் வர்த்தகம் செய்ய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. எதற்காக இதைச் செய்கிறார்கள். இதனால் யாருக்கு என்ன நன்மை என்பதைப் பார்க்கலாம்.

De-dollarisation என்ற பெயர் வேண்டுமானால் புதியதாக இருக்கலாம். ஆனால், டாலரை நம்பி இருக்கும் போக்கைக் குறைக்கப் பல ஆண்டுகளாகவே பல்வேறு நாடுகளும் கடுமையாக முயன்றே வருகிறது. குறிப்பாகச் சீனாவும் ரஷ்யாவும் நீண்ட காலமாகவே இதற்கு முயன்றே வருகிறது. இந்த ஜன. மாதம் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்ட க்ரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் செய்ய ஈரானும் ரஷ்யாவும் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
டாலர் எப்படி வந்தது? டாலர் இந்த நிலைக்கு எப்படி வந்தது என்பதை பார்க்கலாம். முதலில் பிரிட்டனின் பவுண்டு ஸ்டெர்லிங்கை தான் சர்வதேச நாணயமாக இருந்தது. ஆனால், 1920களில் முதல் உலகப் போருக்குப் பின், அமெரிக்கா ஆதிக்கம் அதிகரித்த நிலையில், பவுண்டு மறைந்து டாலர் சர்வதேச நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்திற்கான நாணயமானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவும் டாலர் முதன்மை கரன்சியாக மாறியது.
இதனால் டாலரை அதிகம் நம்பி இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இந்த நிலையை மாற்றவே பல வளரும் நாடுகள் முயன்று வருகிறது. சமீபத்தில் கூட இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய இந்தியாவும் ரஷ்யாவும் ஒப்புக் கொண்டது. அதேபோல சவுதியும் பிரிட்டனும் கூட டாலரை தவிர்த்துப் பிற நாணயங்களில் வர்த்தகம் செய்வது குறித்து ஆலோசித்து வருகின்றனர். இப்படிப் பல நாடுகளும் டாலரை தவிர்க்க ஆலோசித்து வருகின்றனர்.
சாத்தியம் எப்படி? ஆனாலும், இப்போதும் உலகின் பெரும்பாலான மத்திய வங்கிகள் தங்களுடைய அந்நியச் செலாவணி கையிருப்பில் 60 சதவீதத்தை டாலரில் வைத்துள்ளன. மேலும், சர்வதேச வர்த்தகம் பெரும்பாலும் டாலரில்தான் நடக்கிறது. அந்தளவுக்கு மிகவும் வலிமையான ஒரு கரன்சியாகவே டாலர் இருக்கிறது. அதேநேரம் ஒரு கரன்சியை வைத்திருப்பதில் சில சிக்கல்களும் இருக்கவே செய்கிறது.

2008 நிதி நெருக்கடியின் போது, டாலரின் மதிப்பு கணிக்க முடியாத ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தன. இப்போது கொரோனாவுக்கு பின் ஏற்படும் டாலரில் ஏற்படும் மாற்றமும் பொருளாதார உறுதியற்ற தன்மையை உருவாக்குகிறது. இதுபோன்ற ஆபத்துகளைத் தவிர்க்க உள்ளிட்ட சில காரணங்களுக்காக டாலர் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கையில் வளரும் நாடுகள் இறங்கியுள்ளன. இது வெற்றிகரமாக இருந்தால் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் பெரிய நன்மை கிடைக்கவே செய்யும்.
இருப்பினும், டாலரைப் போலப் பெரியளவில் மாற்றத்தை எதிர்கொள்ளாத நிலையான ஒரு கரன்சி வேறு எதுவும் இல்லை என்பதால் டாலரை விரைவில் முழுமையாகக் கைவிட வாய்ப்புகள் மிகக் குறைவு ஆகும்.












Click it and Unblock the Notifications