வெனிசுலா அதிபரை போல புதினை பிடிக்க அமெரிக்கா உத்தரவிட சான்ஸ் உள்ளதா? டிரம்ப் சொல்வதை பாருங்க
வாஷிங்டன்: வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை, அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்தது. வெனிசுலாவிற்குள் அதிரடியாக புகுந்த அமெரிக்க ராணுவம், நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை பிடித்து சென்ற நிலையில், ரஷ்ய அதிபர் புதினுக்கும் இந்த நிலை ஏற்படலாம் என்பது போல உக்ரைன் அதிபர் பேசியிருந்தார். இது தொடர்பாக டிரம்ப்பின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார். இந்த நிலையில் தான் கடந்த 3 ஆம் தேதி வெனிசுலா தலைநகர் கராகசின் பல பகுதிகளில் அதிகாலையில் அமெரிக்கா தாக்குதலை நடத்தியது.

வெனிசுலா அதிபர் சிறைபிடிப்பு
இதையடுத்து வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. வெனிசுலாவைச் சுற்றி கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்தது. வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் எச்சரித்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க ராணுவம் கைது செய்தது.
அந்த நாட்டிற்குள் சென்று மதுரோவை கைவிலங்கு கட்டி, கண்ணில் கருப்பு துணியை கட்டி அழைத்து வந்தது. இது உலக அளவில் கவனம் பெற்றது. தற்போது நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து நியூயார்க் சிறைச்சாலையில் அடைத்துள்ளது அமெரிக்கா.
டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. வடகொரியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது.
புதினும் சிறை பிடிக்கப்படுவாரா?
அமெரிக்க ஆதரவு நாடுகள், டிரம்பின் நடவடிக்கையை பாராட்டியும் வருகின்றன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "புதினும் இதே பாணியில் பிடிக்கப்படுவாரா?" என்ற ரீதியில் பேசியிருந்தார். அதாவது, ரஷ்யாவின் விளாடிமிர் புதினுக்கும் இதேபோன்ற விதியை டிரம்ப் திட்டமிட்டிருக்கலாம் என்று கூறியிருந்தார்.
ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜெலன்ஸ்கியின் இந்த கருத்தில் இருந்து மாறுபட்டுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், "புதின் மீது எனக்கு கடுமையான அதிருப்தி இருந்தாலும் அதுபோன்ற ஒரு நடவடிக்கை அவசியமில்லாத ஒன்று" என்றார். ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் மூண்டது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீதான படையெடுப்பை புதின் மேற்கொண்டார். 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில், இருநாடுகளிலும் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தனித்தனியே அழைத்து பேசி
உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிய போதிலும், உக்ரைனை வீழ்த்த முடியாமல் திணறி வருகிறது. உக்ரைனுக்கும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்து வருவதால் ரஷ்யாவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக டிரம்ப், இருநாட்டு தலைவர்களையும் தனித்தனியே அழைத்து பேசி போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எனினும், போர் இன்னும் நின்றபாடில்லை.












Click it and Unblock the Notifications