சாதாரண உடையில் வந்த ஜெலன்ஸ்கி! பார்த்ததுமே கோபம் ஆனாரா டிரம்ப்.. வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன?
வாஷிங்டன்: உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் டிரம்ப் - ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடந்தது. சுமூகத்தில் முடியும் என்று நினைத்த இந்த பேச்சுவார்த்தை கடைசியில் அமெரிக்கா - உக்ரைன் இடையே கலகம் ஏற்படும் வகையில் அமைந்துவிட்டது. இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோட் அணியாமல் வந்ததும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. கோட் அணியாமல் வந்த ஜெலன்ஸ்கியை பார்த்ததுமே எரிச்சல் அடைந்த டிரம்ப் அவரது ஆடை குறித்து வஞ்சப்புகழ்ச்சியோடு பேசியிருந்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் ரஷ்யா இடையே போர் தொடங்கியது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா அந்த நாடு மீது போரை தொடங்கியது. உக்ரைன் நாடு குட்டி நாடு தானே என்று நினைத்து போரை தொடுத்த ரஷ்யாவுக்கு இதுவரை இந்த போரில் முடிவு கிடைக்கவில்லை.

உக்ரைன் ரஷ்யா போர்
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முழுவதும் நிறைவடைந்த நிலையிலும், உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வரவில்லை. ஆரம்பத்தில் ரஷ்யாவை போரில் வெற்றி பெற விடாமல், உக்ரனைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் உதவி செய்தன. இதனால் ரஷ்யாவால் உக்ரைனை தோற்கடிக்க முடியவில்லை. இப்படி போர் தொடர்ந்து நீடித்து வருவதால் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து வருகிறார்கள். இருநாட்டு பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தான் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்றார். தான் பதவியேற்றதில் இருந்தே அமெரிக்காவில் பல்வேறு நடவடிக்கைகள், மாற்றங்களை ஏற்படுத்தி வரும் டிரம்ப் உக்ரைன் - ரஷ்யா போரையும் முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், சுமுகத்தில் முடியும் என்று நினைத்த இந்த பேச்சுவார்த்தை கடைசியில் அமெரிக்கா - உக்ரைன் இடையேயே கலகம் ஏற்படும் வகையில் அமைந்துவிட்டது. அதே நேரத்தில் அமெரிக்கா - உக்ரைன் இடையேயான இந்த பேச்சுவார்த்தையால் ரஷ்யாவுக்கு சாதகமாண சூழல் உண்டாகியுள்ளது. அமெரிக்காவுக்காக நேட்டோ கூட்டமைப்பில் இணைய நினைத்த உக்ரைனை இப்போது அமெரிக்காவே அவமதித்துவிட்டதாக ஐரோப்ப நாடுகள் கூறியுள்ளன.
ஏன் கோட் அணியவில்லை
இந்த நிலையில் தான் உக்ரைன் அதிபர் கோட் சூட் அணியாமல் வந்ததும் இந்த பிரச்சினைக்கு ஒரு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப் - ஜெலன்ஸ்கி பேசிக்கொண்டு இருக்கும் போதே குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பார்த்து நீங்கள் ஏன் கோட் சூட் அணிந்து வரவில்லை. உங்களிடம் இல்லையா? அலுவலகத்தின் கண்ணியத்தை மதிக்கும் வகையில் நீங்கள் நடந்து கொள்ளவில்லை. இது பல அமெரிக்கர்களுக்கும் பிடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு உடனே பதிலளித்த ஜெலன்ஸ்கி, "இந்த போர் முடிந்த பிறகே அத்தகைய உடைகளை அணிவேன். உங்களை போன்ற ஒரு உடையோ அல்லது அதை விட சிறந்ததோ என எனக்கு தெரியாது. கொஞ்சம் மலிவானதாக அது இருக்கும்" என்றார்.
வஞ்சப்புகழ்ச்சியோடு பேசிய டிரம்ப்
முன்னதாக, டொனால்டு டிரம்பே ஜெலன்ஸ்கியின் ஆடை குறித்து வஞ்சப்புகழ்ச்சியுடன் பேசினார். உங்களை பார்த்தால் நன்றாக உடை அணிந்து வந்துள்ளீர்கள் என்பது தெரிகிறது என வெள்ளை மாளிகைக்குள் நுழைந்ததும் டிரம்ப் கூறினார். ஜெலன்ஸ்கியை சர்வாதிகாரி என்றெல்லாம் காட்டமாக விமர்சித்து இருந்த டிரம்ப், வெள்ளை மாளிகையில் நேருக்கு நேராக அவருடன் வார்த்தை போரில் ஈடுபட்டார்.
ஜெலன்ஸ்கியும் தன்னை அவமதிக்கும் விதமாகவே இப்படி சாதாரண உடையுடன் வந்து இருக்கலாம் என டிரம்ப் கருதியிருக்கலாம் எனவும் இதன் தொடர்ச்சியாக சந்திப்பிலும் தனது அதிருப்தியை கடுமையான முறையில் டிரம்ப் எடுத்து வைத்து இருக்கலாம் என்றும் சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?
அதாவது ஜெலன்ஸ்கி - டிரம்ப் பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் பேசியதை ஞாபகப்படுத்தினார். அமெரிக்க ராஜாங்க நடவடிக்கைகளை செய்து வருகிறது. போரை நிறுத்துவதற்காக ரஷ்யாவுடன் ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. உங்களது செயல்பாடு, உங்களின் நாட்டிற்கே அழிவை ஏற்படுத்தி விடும் என்று பேசியிருந்தார். இதற்கு ஜெலன்ஸ்கி கூறுகையில், "ரஷ்யா செய்வதை நீங்கள் தடுக்கவே இல்லை. 2019 ஆம் ஆண்டில் இருந்து ரஷ்யா போரை செய்து வருகிறது. இதில் எதை நீங்கள் ராஜதந்திர செயல்பாடு என்று சொல்கிறீர்கள்" என்று கேட்டார்.
இதற்கு பதில் தெரிவித்து கூறிய டிரம்ப், "உக்ரைன் இப்போது நல்ல நிலமையில் இல்லை. மோசமான சூழலில் இருக்கிறீர்கள். உங்களுக்கு சாதகமாக எதுவுமே இல்லை. இதற்கெல்லாம் காரணம் நீங்கள் தான். இந்த மாதிரியான சூழலை நீங்கள் அனுமதித்து இருக்க கூடாது. பல கோடி மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்" என்றார். இதற்கு பதில் கூறிய ஜெலன்ஸ்கி, இப்படி சத்தமாக போரை பற்றி மீடியா முன்பு பேசுவது சரியா.. இந்த போரை நாங்கள் தனியாக எதிர்கொண்டு வருகிறோம். நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம்" என்றார்.
விளையாடாதீர்கள்
இதற்கு பதில் கூறிய டிரம்ப், "நீங்கள் தனியாக இல்லை.. அமெரிக்கா உங்களுக்கு உதவியிருக்கிறது. தனியாக இருந்தால் இங்கு கதையே வேறுமாதிரியாக இருக்கும். உங்களுக்கு 350 பில்லியன் டாலர் எங்கள் முன்னாள் பிரதமர் தந்திருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிட வேண்டாம். நாங்கள் இருப்பதால் தான் உங்கள் நாடு இருக்கிறது. 3ஆம் உலகப்போரை வைத்து விளையாட வேண்டாம். சமரசம் பேச நினைத்தால் மட்டும் அடுத்த முறை இங்கு வாருங்கள்" என்று கூறிவிட்டார்.












Click it and Unblock the Notifications