அமெரிக்காவில் பயங்கரம்.. ஜாம்பியான இளைஞர்! திடீரென முதியவர் காதை கடித்து குதறியதால் தெரிந்த மண்டைஓடு
வாஷிங்டன்: அமெரிக்காவில் ரயில்வே நடைமேடையில் நின்றுகொண்டு இருந்த 78 வயது முதியவரின் காதையும், முகத்தின் ஒடு பகுதியையும் 25 வயது இளைஞர் ஒருவர் கடித்து துப்பியதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. புகாரை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர் போதை பொருள் உட்கொண்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அமெரிக்காவின் ஓரேகான் மாகாணம் போர்ட்லாண்டில் உள்ள கிளேவாட் அவென்யூ ரயில் நிலையத்தில் இருக்கும் மேக்ஸ் நடைமேடையில் நள்ளிரவு 2 மணியளவில் 25 வயது இளைஞரும், 78 வயது முதியவரும் ரயிலுக்காக காத்துக்கொண்டு நின்றார்கள். இந்த நிலையில் திடீரென அந்த இளைஞர் அருகில் இருந்த முதியவரை நோக்கி பாய்ந்தார்.
அதிர்ச்சியடைந்த முதியவர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரை தடுக்க முடியவில்லை. வெறிபிடித்த மிருகம் போல் மாறிய இளைஞர் முதியவரின் காதையும், அவரது முகத்தின் ஒரு பகுதியை வலுவாக கடித்தார்.

கடித்து குதறிய இளைஞர்
இதனால் வலி தாங்க முடியாமல் அந்த முதியவர் அலறி துடித்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கடி வாங்கிய முதியவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடப்பதை கண்ட போலீசார், தாங்கள் வந்த பிறகும் அந்த இளைஞர் முதியவர் மேலே அமர்ந்துகொண்டு அவரை தாக்குவதை நிறுத்தவில்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளார்கள்.

போலீசார் விளக்கம்
இதனை அடுத்து அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார், முதியவருக்கு தேவையான முதலுதவியை வழங்கினர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கத்திக்கு பதிலாக பற்களை அந்த இளைஞர் ஆயுதமாக பயன்படுத்தியதாக தெரிவித்து உள்ளனர். "தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர், பாதிக்கப்பட்ட முதியவரின் காதையும் அவரது முகத்தையும் கடித்தும் இருக்கிறார். காயம் மிகவும் மோசமாக இருந்ததாகவும், முதியவரின் மண்டை ஓடு தெரிந்ததாகவும் அங்கிருந்தவர்கள் கூறுகிறார்கள்." என்றார்.

போலீசார் விசாரணை
தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர் பெயர் கிரீமர் என்று தெரியவந்து இருக்கிறது. அவர் மீது தாக்குதலில் ஈடுபட்டதற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள். இளைஞர் கிரீமர் போதை பொருளை உட்கொண்டு இருந்தாரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளார்கள். அதே நேரம் கிரீமர் ஃபெண்டானில் மற்றும் மாரிஜுவானா ஆகிய போதைப்பொருளை உட்கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து இருக்கிறது.

முதியவர் உடல்நிலை
தாக்கப்பட்ட முதியவர் ஹில்ஸ்பாரோ பகுதியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. தாக்குதலில் ஈடுபட்ட கிரீமர் சமீபத்தில்தான் ஜார்ஜியாவில் இருந்து ஓரேகானுக்கு சென்று இருக்கிறார்.

ஏற்கனவே சிறையில் இருந்தவர்
போலீசாரிடம் முதலில் அவர் தனது பெயரை எல் பேகர் என்று மாற்றி கூறி இருக்கிறார். ஆனால், அவரது கைரேகையை வைத்து விசாரித்தபோது மல்ட்நோமா கவுண்டி சிறையில் ஏற்கனவே அவரது கைரேகை பதிவாகி இருந்ததும், அவரது பெயர் கிரீமர் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததும் தெரியவந்து உள்ளது.

அமெரிக்காவில் தொடரும் பிரச்சனை
உலகின் வளர்ந்த நாடுகளில் முதன்மையானதாக கருதப்படும் அமெரிக்காவில் போதைப்பொருள் கலாச்சாரமும், துப்பாக்கி கலாச்சாரமும் வெகுவாக அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஏராளமான இளம் தலைமுறையினருக்கு மனநல பிரச்சனை இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் இளைஞர் ஜாம்பிபோல் மாறி முதியவர் காதை கடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications