"144 எண் கொண்ட அம்பாசிடர் கார்" - ஜெ., சிறை தண்டனை! யார் இந்த நல்லம நாயுடு?
யார் இந்த நல்லம்ம நாயுடு
நல்லம்ம நாயுடு யார்
நேர்மைக்கு இலக்கணமாக இருந்தவர், நேர்மையானவர்கள் சில நேரம் உள்ள உறுதியில்லாதவர்களாக இருப்பார்கள், ஆனால் அதிகாரபலத்தை கண்டு அஞ்சாமல் தனது பணியை செவ்வனே செய்தவர் நல்லம்ம நாயுடு. காமராஜரிடம் துணிச்சலாக கருத்தைக் கூறியவர்.கக்கனின் கோபத்திற்கு ஆளானவர், கருணாநிதியால் சரியான அதிகாரி என நியமிக்கப்பட்டவர், ஜெயலலிதாவிடம் நிலைமையை விளக்கி விசாரணை நடத்தியவர் என பன்முக அரசியல் தலைவர்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருந்தவர் நல்லம்ம நாயுடு.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் முக்கிய அதிகாரி நல்லம்ம நாயுடு (83) வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். நேர்மையான அதிகாரி எனப் பெயரெடுத்தவர், ஆட்சியாளர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் பணியாற்றியதால் ஏகப்பட்ட இன்னல்களை அனுபவித்தவர், ஓய்வுக்குப்பின் சென்னையில் வசித்து வந்த நிலையில் வயோதிகம் காரணமாக காலமானார். ஜெயலலிதா மறைந்த நிலையில் பின்னர் சசிகலா, சுதாகரன் இந்த வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனைப் பெற்றனர்.
ஜெயலலிதாவிடம் விசாரணை
ஜெயலலிதாவிடம் நிலைமையை விளக்கிய அதிகாரி
தமிழகத்தில் புகழ்ப்பெற்ற வழக்குகளில் ஒன்று சொத்துக்குவிப்பு வழக்கு . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு விசாரணை அதிகாரியான நல்லம்ம நாயுடு தனது தனித்துவமான விசாரணையால் அவர்களுக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்தார். இவரது அயராத பணியின் காரணமாக ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்தது.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுவித்தார். மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் போது அவர் உயிரிழந்துவிட்டதால் அவருக்கு எதிரான வழக்கு அறுபட்டுப்போனது.
2001 ஆம் ஆண்டுக்குப்பின் ஓய்வுப்பெற்ற நல்லம்ம நாயுடு சென்னை பெரவள்ளூரில் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். நள்ளிரவு இரவு சுமார் 02.00 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்படும் வழியில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

யார் இந்த நல்லம்ம நாயுடு
ஆரம்ப காலம்
1965 ஆம் ஆண்டு காவல்துறையில் நேரடி எஸ்.ஐ ஆக பணியில் இணைந்தார். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ரயில்வே, வங்கி, காவல்துறை என மூன்று துறையிலும் பணிகள் தேடி வர பெற்றோர் ஆலோசனைப்படி காவல்துறை எஸ்.ஐ ஆக பணியில் இணைந்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறையில் அதிக ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம்
நேர்மையான அதிகாரி எனப்பெயரெடுத்தவர் நல்லம்ம நாயுடு, படிப்படியாக பதவி உயர்வுப்பெற்று எஸ்.பியாக ஓய்வுப்பெற்றார். பல பணிகளில் நல்லம்ம நாயுடு பணியாற்றினாலும், அவர் அதிகமாக பணியாற்றியது லஞ்ச ஒழிப்புத்துறையில்தான் ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறையில் அவர் பணியாற்றியுள்ளார். ஆய்வாளராக லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியமர்த்தப்பட்ட அவர் எஸ்.பியாக ஓய்வுப்பெறும் வரை லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றினார்.
144 எண் கொண்ட அம்பாசிடர் கார்
அஞ்சாமல் விசாரணை 144 எண் அம்பாசிடர் காரைக் கண்டு அலறிய அதிகாரிகள்
லஞ்ச ஒழிப்புத்துறையில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் நல்லம்ம நாயுடு, எதற்கும் வளைந்துக்கொடுக்காதவர் எனப்பெயர் எடுத்தவர். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் பட்ட இன்னல்கள், மன உளைச்சல்கள் அதிகம், ஆனால் அவரது உறுதி குறையவில்லை. ஜெயலலிதாவிடம் ஐபிஎஸ் அதிகாரிகளே நின்று பேச அஞ்சும் சூழலில் நேர்மையாக உறுதி குன்றாமல் தன் நிலையை விளக்கி விசாரணை நடத்தி வெற்றிப்பெற்ற ஒரே அதிகாரி நல்லம்ம நாயுடு மட்டுமே.
144 எண் அம்பாசிடர் கார் அலறிய அரசு அதிகாரிகள்

நல்லம்ம நாயுடு 144 எண் கொண்ட அம்பாசிடர் காரை பயன்படுத்தி வந்தார். அந்த எண் கொண்ட கார் அரசு அதிகாரிகள், ஏன் காவல்துறை அதிகாரிகளுக்கே சிம்ம சொப்பனமான கார். அந்தக்கார் ஒரு அலுவலகத்திற்குள் நுழைகிறது என்றாலே அதிகாரிகள் கால்கள் வெடவெடவெடுக்கும். லஞ்ச ஒழிப்பு அதிகாரி என்கிற முறையில் ஆய்வுக்காக அவர் செல்லும்போது 144 எண் அம்பாசிடர் கார் வருகிறது அலுவலகத்துக்குள் நுழைகிறது என்றால் அனைவரும் இன்று என்ன நடக்கப்போகிறதோ என அஞ்சுவார்கள்.

கூப்பிடு நல்லம்ம நாயுடுவை கட்டளையிட்ட முதல்வர் கருணாநிதி
நல்லம்ம நாயுடுவை டிக் செய்த முதல்வர் கருணாநிதி
1996-ம் ஆண்டு 5 ஆண்டுகள் மக்கள் வெறுக்கும் வண்ணம் ஆட்சி நடத்தியதால் படுதோல்வியைச் சந்தித்திருந்தார் ஜெயலலிதா. திமுக மிகப்பெரும் வரலாறு காணாத வெற்றிப்பெற்று கருணாநிதி மீண்டும் முதல்வராக அமர்ந்தார். ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்தது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளை நியமிக்க கருணாநிதியிடம் பர்மிஷன் கேட்டார் லத்திகா சரண்.
எவ்வளவோ ஐபிஎஸ் அதிகாரிகள், சிங்கம் புலி என பெயரெடுத்த அதிகாரிகள் பலர் இருந்தாலும் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி பின்னர் 95 ஆம் ஆண்டு மதுவிலக்கு அமல் பிரிவில் பணியாற்றிய நல்லம்ம நாயுடுவை முதல்வர் கருணாநிதி தேர்வு செய்தார். காரணம் அடிமட்ட அளவிலிருந்து லஞ்ச ஒழிப்புத்துறையில் ஊறி அனுபவம் பெற்ற ஒரு அதிகாரி வேண்டும், அவர் நேர்மையானவராகவும் இருக்கவேண்டும் என்கிற அடிப்படையில் நல்லம்ம நாயுடுவை கூப்பிடுங்கள் என அவரை அழைத்து விசாரணை அதிகாரியாக நியமித்தார் முதல்வர் கருணாநிதி. அவரது கணிப்பு எவ்வளவு சரியானது என பின்நாளில் அவர் நிரூபித்தார்.
அதிகாரிகளுக்கே ஆலோசனைக்கூறியவர்
லஞ்ச ஒழிப்புத்துறையில் அனுபவம், அதிகாரிகளுக்கு ஆலோசனை

லஞ்ச ஒழிப்புத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற நல்லம்ம நாயுடு அவரது அனுபவத்தை அவருடன் மறைய விடவில்லை, புத்தகமாக எழுதியுள்ளார். என் கடமை என்கிற அந்த நூலில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தான் பட்ட இன்னல்களை, விசாரணை அதிகாரியாக தான் எதிர்க்கொண்ட சவால்களை எழுதியுள்ளார். இதுதவிர அவரது பழுத்த அனுபவம் காரணமாக தீர்க்க முடியாத வழக்குகளில் அவரை தேடி வந்து ஆலோசனைப்பெற்றுச் சென்ற அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உண்டு என்பதிலிருந்தே அவரது புலனாய்வு அறிவு விளங்கும்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அஞ்சாமல் புலன் விசாரணை
அஞ்சாமை இவரது பாணி
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விசாரிக்க வேண்டும். ஜெயலலிதாவின் ஆளுமை அவர் எதிரில் ஐபிஎஸ் அதிகாரிகளே நிற்க பயப்படுவார்கள். ஆனால் காமராஜர் காலத்திலிருந்து பல மூத்த அரசியல்வாதிகளை சந்தித்த நல்லம்ம நாயுடு ஜெயலலிதாவிடம் அவர் கோபப்படாமல் இருக்க நிலைமையை விளக்கிச் சொல்லி தனது கடமையையும் சொல்லி விசாரணை நடத்தி ஆவணங்களை திரட்டினார். இத்தனைக்கும் அதற்கு ஒராண்டு முன்பு தான் 1995-ல் முதல்வர் ஜெயலலிதா கையால் பதக்கம் பெற்றிருந்தார்.
கக்கன் மாற்றினார் காமராஜர் காப்பாற்றினார்
கக்கன் கோபம் காப்பாற்றிய காமராஜர்

1965 ஆம் ஆண்டு எஸ்.ஐ ஆக பணியில் இணைந்த நல்லம்ம நாயுடு, 1967 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் காமராஜரின் பாதுகாப்பு அதிகாரியாக விருதுநகரில் பணியாற்றினார். அப்போது காமராஜர் என்ன காவல் துறை அதிகாரியே காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு எப்படி என கேட்க நல்லம்ம நாயுடு தயங்கி தயங்கி ஐயா இந்த முறை திமுக வெல்லும்னு சொல்றாங்க எனச் சொல்ல அதைக்கேட்டு போலீஸ் அமைச்சர் கக்கன் ஆத்திரப்பட்டு ஐயாவிடமே இப்படி சொல்ல என்ன தைரியம் எனக் கடிந்துக்கொள்ள விடுண்ணேன் அவர் அதிகாரி நாம கேட்டோம் அஞ்சாமல் சொல்கிறார் இதில் கோபப்பட என்ன இருக்கு என்று சமாதானப்படுத்திவிட்டாராம்.
ஆனால் மறுநாள் அவருக்கு மாற்றல் ஆர்டரை கொடுத்த மேலதிகாரி, வேறு உதவி ஆய்வாளரை காமராஜர் பாதுகாப்புக்கு அனுப்ப விஷயத்தை கேள்விப்பட்ட காமராஜர் பதறிப்போய் இது கக்கன் வேலையா, முதலில் அந்தப்பையன் மாற்றல் ஆர்டரை கேன்சல் பண்ணு எனச் சொல்லி அவரை அழைத்து தன்னுடன் வைத்துக்கொண்டதாக அவர் நூலில் பதிவு செய்துள்ளார்.
நேர்மையான, உறுதியான பணியால் மக்கள் மனதில் நின்றவர்
மக்கள் மனதில் நின்ற அதிகாரி

காமராஜர் எனும் நேர்மையான அரசியல்வாதியிடம் பயிற்சி பெற்றதாலோ என்னவோ அனைத்தையும் நேரடியாக உள்ளது உள்ளபடி பதிவு செய்யவேண்டும் என உறுதிக்கொண்டிருந்தார் நல்லம்ம நாயுடு. அதை தனது பணிக்காலத்தில் செவ்வனே செய்து நேர்மையான அதிகாரி என பணி ஓய்வும் பெற்றார். தனது ஓய்வுக்குப்பின்னும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சாட்சியாக தனது பணியினை அஞ்சாமல் செய்தார் நல்லம்ம நாயுடு. பல அதிகாரிகள் வருவார்கள் போவார்கள், தமது பணியால் சிலர் மட்டுமே மக்கள் மனதில் நிற்பார்கள் அவர்களில் நல்லம்ம நாயுடுவும் ஒருவர்.












Click it and Unblock the Notifications