பாலியல் குற்றவாளி ராம் ரகீமுக்கு பரோல்.. நடனமாடி வரவேற்ற பெண்கள்! கலாய்த்த நெட்டிசன்கள்
சண்டிகர்: அரியானாவில் ஆதம்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாலியல் குற்றவாளியான தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த இடைத்தேர்தலைத் தொடர்ந்து பஞ்சாயத்து தேர்தல் வர உள்ள நிலையில் ஆளும் பாஜக இதில் தனது பலத்தை நிரூபிக்க முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் சாமியார் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி பரோலில் வந்த அவரை பெண்கள் ஆரவாரமாக வரவேற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளி
கடந்த 1999ம் ஆண்டு தனது ஆசிரமத்தில் இருந்த இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த 2017ம் ஆண்டு ராம் ரகீம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் அத்துடன் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் பரோலில் அவரை அரியானா அரசு விடுதலை செய்திருக்கிறது.

பரோல்
அரியானாவில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. தற்போது அடுத்த மாதம் 3ம் தேதி மாநிலத்தின் ஆதம்பூர் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலும் இதனையடுத்து பஞ்சாயத்து தேர்தலும் நடைபெற உள்ளன. இவ்வாறு இருக்கும் நிலையில் ராம் ரகீம் விடுதலை செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராம் ரகீமுக்கு ஆதரவாளர்கள் அதிக அளவில் இருப்பதால் அதன் மூலம் வாக்கு வங்கியை உயர்த்த பாஜக அரசு முற்படுகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

வாக்குமூலம்
இதெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் நேற்று சிறையிலிருந்து வெளிவந்த ராம் ரகிமுக்கு பெண்கள் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பளித்துள்ளனர். இவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறை சென்றிருக்கிறார் என்று தெரிந்திருந்தும் இவ்வாறு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து ஆசிரமத்தில் பணி செய்த பெண்கள் கூறுகையில், "ஆசிரமத்தில் குஃபா எனும் இடத்தில்தான் இந்த பாலியல் பலாத்கார சம்பவம் நடைபெறும்" என்று கூறியுள்ளனர்.

வீடியோ
மேலும், "இந்த பகுதிக்கு பெண்கள்தான் காவலர்களாக இருப்பார்கள். பெண்களை தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். நாங்கள் ஆசிரமத்திற்கு சென்றபோது பாபாஜி உங்களுக்கு மன்னிப்பு (மாஃபி) வழங்கி விட்டாரா? என்று கேட்பார்கள். எங்களுக்கு தொடக்கத்தில் எதுவும் புரியவில்லை. பின்னர் நாங்கள் அந்த கொடுமையை எதிர்கொண்டபோதுதான் எங்களுக்கு அது புரிந்தது." என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். இவ்வாறு பல பெண்களை வன்கொடுமைக்கு ராம் ரகீம் உள்ளாக்கியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சிறையிலிருந்து வெளிவந்த ராம் ரகிமுக்கு பெண்கள் அளித்த உற்சாக வரவேற்பு வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications