Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டீக்கடை டூ முதல்வர் நாற்காலி... ஓபிஎஸ் அரசியல் பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய வரலாற்றில் இரண்டு டீக்கடைக்காரர்களுக்கு முக்கிய இடமுண்டு. ஓருவர் இந்திய பிரதமர் மோடி, மற்றவர் தமிழக முதல்வராக இரண்டு முறை பதவி வகித்த ஓ.பன்னீர் செல்வம். எம்ஜிஆர், என்டிஆர் வரிசையில் ஓபிஎஸ் என்ற மூன்றெழுத்தும் அதிகம் உச்சரிக்கப்பட்ட எழுத்துக்கள். இந்த ஓபிஎஸ் அரசியலில் யுபிஎஸ் என்றும் எதிர்கட்சியினரால் விமர்சனம் செய்யப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் 1951ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார். இவரது அப்பா ஓட்டக்காரத்தேவர். அம்மா பழனியம்மாள். ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஐந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகள்.

ஓட்டக்காரத்தேவருக்கு வட்டிக்கு பணம் கொடுப்பது தான் தொழில். பன்னீர்செல்வத்திற்கு அவரது அப்பா தனது குல தெய்வமான பேச்சியம்மன் பெயரை நினைவில் கொண்டு ‘பேச்சிமுத்து' என பெயரிட்டார். பின்னர் பன்னீர்செல்வம் என பெயர் மாற்றப்பட்டது.

Tea shop to CM O.Pannerselvam biodata

பள்ளிப்படிப்பை

பெரியகுளத்தில் படித்த பன்னீர், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்தார். பன்னீர்செல்வத்திற்கு தற்போது வயது 63. இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர்களுக்கு கவிதாபானு என்ற மகளும் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்ற மகன்களும் உள்ளனர்.

வட்டித்தொழில்

பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டியில் சிறிதளவில் வயல், தோட்டம் தவிர சொல்லிக்கொள்ளும் வகையில் வசதிகள் இல்லை. கல்லூரியில் படிக்கும்போதே அவரது அப்பாவுக்கு துணையாக ஃபைனாஸ் கொடுத்து வாங்கும் வேளையிலும் ஈடுபட்டார். முதலில் பெரியகுளம் மார்க்கெட்டில் வட்டிக்கு கொடுத்து வாங்கிய அவரது குடும்பம், அடுத்து லாரிகளுக்கு ஃபைனான்ஸ் கொடுக்கும் தொழிலிலும் கால் பதித்தது.

டீக்கடை

பி.ஏ.வரை படித்துள்ள ஓ.பன்னீர் செல்வம் பிழைப்பிற்காக பால் பண்ணை நடத்தினார். பின்னர், தனது நண்பருடன் சேர்ந்து பெரியகுளத்தில் டீக்கடை ஆரம்பித்தார். இந்தக்கடையே இவருக்கு வாழ்வாதாரமாக இருந்தது. அதிமுகவில் இருந்தபடி, அவ்வப்போது கட்சிக்கூட்டங்களுக்குப் போய் வந்து கொண்டிருந்தார்.

Tea shop to CM O.Pannerselvam biodata

ஜானகி அணியில்

1987ல் எம்ஜிஆர் இறந்தபிறகு, ஜெயலலிதா, ஜானகி என அதிமுக இரண்டானது. ஜானகி அணியில் புகழோடு இருந்த கம்பம் செல்வேந்திரன் புண்ணியத்தில் பெரியகுளம் ஜானகி அணிக்கு ஓபிஎஸ் நகர செயலாளரானார். கம்பம் செல்வேந்திரனிடமும் இப்போது ஜெயலலிதாவிடம் நிற்பது மாதிரி கேள்விக்குறி போஸில் தான் நிற்பாராம் ஓபிஎஸ்.

கூட்டுறவு வங்கி இயக்குநர்

1989ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவாஜி கட்சியான தமிழக முன்னேற்ற முன்னணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக பணிபுரிந்தார். 1991ல் அதிமுக ஒருங்கிணைந்தது. இதையடுத்து முதன்முதலில் பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநரானார். அங்கு தான் முதன்முதலில் அதிகாரத்தை சுவைத்தார் ஓபிஎஸ்.

தேர்தலில் வெற்றி

1996ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்காலகட்டத்தில் பெரியகுளம் அதிமுக நகர செயலாளராக இருந்த ஓபிஎஸ்சுக்கு பெரியகுளம் நகர்மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட சீட் கிடைக்கவே தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

பெரியகுளத்தில் போராட்டம்

இவர் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக இருந்தபோது, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தை பிரித்து தேனியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கினார். தேனிக்குப் பதில் பெரியகுளத்தை தலைநகராக அறிவிக்கும்படி ஓபிஎஸ் போராட்டங்கள் நடத்தினார்.

Tea shop to CM O.Pannerselvam biodata

டிடிவி தினகரனால் அடையாளம்

1999ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக அறிவித்துக்கொண்ட டிடிவி தினகரன் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டார். தேனியில் தேர்தல் அலுவலகம் வைத்திருந்த டிடிவி தினகரன், எம்.பியான பிறகு ஆண்டுக்கு ஒரு தொகுதியில் குடியிருப்பது என முடிவெடுத்தார்.

சட்டசபைத் தேர்தலில் போட்டி

இதன்படி, 2000ம் ஆண்டில் பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ்சின் தம்பி ஓ.ராஜாவுக்கு சொந்தமான வீட்டிற்கு குடியேறினார். இதுவே ஓபிஎஸ்சின் வளர்ச்சிக்கு துணையாக அமைந்தது. இந்த நெருக்கமே, 2001ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது. தினகரனுக்கு முன் ஓபிஎஸ் அப்போதும் இப்போதும் உட்காரக் கூட மாட்டாராம். அதே குனிவு, பணிவு தான்.

அமைச்சரான ஓபிஎஸ்

சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் தினகரன்- சசிகலாவின் ஆசியால் வருவாய்த்துறை அமைச்சராக 2001ம் ஆண்டு மே 19 முதல் 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி வரை பதவி வகித்தார். அமைச்சராக இருந்து கொண்டு தங்களுக்குக் காட்டிய பணிவால் சசிகலா குடும்பத்தினரை கவர்ந்தார்.

தேடி வந்த முதல்வர் நாற்காலி

2001ம் ஆண்டு டான்சி வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்த போது சசிகலாவால் முதல்வர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். ஜெயலலிதா விடுதலை ஆன பின் 2002ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சராக 2002 மார்ச் 2 முதல் 2006 மே வரை பதவி வகித்தார்.

தோல்வியடைந்த டிடிவி

2004ல் நடந்த எம்.பி தேர்தலில் டிடிவி தினகரனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஜே.எம்.ஆரூண் போட்டியிட்டார். தேர்தலில் டிடிவி.தினகரன் தோல்வியடைந்து கட்டிய வேட்டியோடு பெரியகுளத்தைவிட்டு மன்னார்குடிக்கு திரும்பினார். பெரியகுளத்தில் அமைதியாக இருந்த ஓபிஎஸ்சின் ரத்த சொந்தங்கள், வாரிசுகள் டிடிவி தினகரன் சென்ற பிறகு, அரசியல், கான்ட்ராக்ட்களில் தனி ஆவர்த்தனம் செய்யத் துவங்கினர்.

அதிமுக பொருளாளர்

இதற்கிடையே ஜெயலலிதாவின் குட் புக்கில் நிரந்தர இடம் பிடித்த ஓபிஎஸ்சுக்கு அரசியலில் அடுத்தடுத்து லாபம். எந்த டிடிவி தினகரனால் அதிமுக தலைமையிடம் அடையாளம் காட்டப்பட்டாரோ அதே டிடிவி தினகரன் வகித்த அதிமுக பொருளாளர் பதவியை இப்போது ஓ.பன்னீர் செல்வம் வகித்து வருகிறார்.

ஒபிஎஸ் வகித்த பதவிகள்

1996ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர் மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு 2001ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார். 2001 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார். முதன்முறையிலேயே அமைச்சரானார்.

2006ம் ஆண்டு எதிர்கட்சி துணைத்தலைவர்

2006ம் ஆண்டு தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு 2 ஆவது முறையாக எம்.எல்.ஏ ஆனார். தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் எதிர்கட்சி துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.

அவை முன்னவர்

2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதி அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், அவை முன்னவர் என்று மே 16ம் தேதி 2011 முதல் 28, செப்டம்பர் 2014 வரை பணியாற்றினார்.

2வது முறை முதல்வர்

கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி வருமானத்தை மீறி சொத்துக் குவித்த ஊழல் வழக்கில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தவுடன் அவர் முதல்வர் பதவி பறிபோனது. 28ம் தேதி சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஒரு மனதாக சட்டமன்ற கட்சி தலைவராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வானார்.

31 வயதில் தொடங்கி

ஓபிஎஸ் தனது 31வது வயதில் அரசியலில் அடியெடுத்து வைத்தார், 1982ல் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் ஆனார். இப்போது அதிமுகவின் பொருளாளராக பதவி வகித்து வருகிறார். இரண்டு முறை தமிழக முதல்வராக இருந்தாலும் டீக்கடை வைத்திருந்த போது கட்சிக்காரர்களிடம் பேசிய பணிவுடன் பேசுவதால்தான் இன்றைக்கும் பெரியகுளம்வாசிகளிடம் பணிவு செல்வமாகவே இருக்கிறார்.

சரிவு ஆரம்பம்..

இந் நிலையில் 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும், மகன்கள் மூலம் உள்நாடு, வெளிநாடுகளில் ஏராளமான சொத்துக்கள், முதலீடுகளை செய்துள்ளதாகவும் புகார்கள் கிளம்பியதால் ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா வீட்டுச் சிறையில் வைத்ததாகவும், சொத்துக்களை கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் புகார் கூறி வருகின்றன. சமீபகாலமாக வெளியில் தலைகாட்டுவதையும் ஓபிஎஸ் குறைத்துக் கொண்டுள்ளார். கட்சியிலும் ஓரம் கட்டப்பட்டுள்ளார். வரும் தேர்தலில் அவருக்கே சீட் கிடைக்குமா என்பதே சந்தேகம் என்கின்றனர். டீக்கடையில் ஆரம்பித்த ஓபிஎஸ்சின் பயணம் மீண்டும் டீக்கடைக்கே செல்லுமா இல்லை, ஜெயலலிதாவிடம் மீண்டும் நல்ல பெயர் வாங்கி அரசியலில் பிழைப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+