வேட்டி எனது அடையாளம்.. மகாத்மா மேலாடை துறந்த 100 ஆண்டு நினைவை கொண்டாடும்.. ராம்ராஜ் காட்டன்!
சென்னை: காந்தியடிகளின் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள், காலத்தை உறையச் செய்து காந்தியின் உருவத்தை நமக்கு அறிமுகம் செய்கின்றன. பெரும்பாலான புகைப்படங்களில் வேட்டி மட்டுமே உடுத்தி மேல்சட்டை அணியாத ஒல்லியான தேகம், நடந்து கொண்டே இருக்கிற சித்திரம் நம் கண்முன்னே வந்துபோவதை உணர முடியும்.
வெளிநாட்டில் சென்று படித்து வழக்கறிஞர் பட்டம் பெறுகிற வசதியையும் வாய்ப்பையும் பெற்ற ஒரு மனிதர், "இனி வேட்டியை மட்டுமே உடுத்துவேன். மேலாடை அணிய மாட்டேன்" என்கிற முடிவை எடுத்தது இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தருணம். எளிய மக்களின் பிரதிநிதியாக ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்துப் போராடிய மகாத்மா, தன் வாழ்நாளின் இறுதி நொடி வரை ஒற்றை வேட்டி அணிந்த எளிய மனிதராகவே வாழ்ந்தார்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை நகருக்கு 22.09.1921 அன்று வருகை தந்த காந்தி, மேலாடை அணிய வசதி வாய்ப்பற்ற எளிய மனிதர்களைக் கண்டார். மனிதனின் அடிப்படைத் தேவையான உடைகளையே முழுமையாக உடுத்த இயலாத மக்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தார்.
" அனைவருக்கும் போதுமான சுதேசி ஆடை இல்லாதபோது, நானும் வேட்டியை மட்டும் உடுத்தி அரை ஆடை மனிதனாக வாழ்கிறேன்" என்று முடிவெடுத்து, அன்று மதுரையில் கலந்து கொண்ட கூட்டத்தில் சட்டை இல்லாமல் வேட்டி மட்டுமே அணிந்து வந்து பேசினார் காந்தி.

காந்தியடிகள் தான் கொண்ட கொள்கைக்கும், வாழும் வாழ்க்கைக்கும் நூல் அளவுகூட இடைவெளி இல்லாமல் வாழ்ந்த மகத்தான தலைவர். "இப்படி உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்தால் வெற்றியடைய முடியாது" என்று உலகம் நம்பிக்கொண்டிருந்தபோது, "உண்மையும் நேர்மையும் இருந்தால் நமது லட்சியங்களை உறுதியாக வென்றெடுக்க முடியும்" என்பதை நம் கண் முன்னே வார்த்தையாக சொல்லாமல், வாழ்க்கையாக வாழ்ந்து காட்டிய காரணத்தால் மக்கள் மனதில் மகாத்மாவாக நிலைத்து நிற்கிறார்.
அகிம்சை, நேர்மை என்ற இரு ஆயுதங்களோடு கத்தியின்றி ரத்தமின்றி போராட்டம் நடத்தினார் காந்தியடிகள். சாதாரண இந்தியனுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அரையாடையில் சுதந்திரப் போராட்டக் களத்தில் பவனி வந்தார். வேட்டி என்பது ஒரு எளிய உடை என்பதாக மட்டுமல்லாமல் நெசவாளர்களின் வாழ்வாதாரமாகவும் இருக்கிறது என்பதை அறிந்து அதை அணிவதன் மூலமாக சுதேசி பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தினார்.

காந்தியடிகளின் கருத்துகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதை வாழ்வின் நோக்கமாகக் கொண்டவரும், தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் பொறுப்பாளருமான அண்ணாமலை அவர்கள் காந்தியைப் பற்றி குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. "நமது நண்பர்கள், உறவினர்கள், நம்மை ஆளும் தலைவர்கள் நமக்கு உண்மையானவர்களாக, நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஒருவரை வேலைக்கு எடுக்கும்போது "இவர் நமது நிறுவனத்துக்கு உண்மையுடன் இருப்பாரா" என்று பரிசோதிக்கிறோம். ஆனால், உண்மையின் பக்கம் நிற்க வேண்டிய தருணம் வரும்போது மட்டும் "இந்தக் காலத்தில் உண்மையாக வாழ்ந்தால் பிழைக்க முடியாது" என்று பலரும் சொல்கிறார்கள். காந்தியும் அவரைப் பின்தொடர்ந்த பல லட்சம் தொண்டர்களும் உண்மையின் பக்கம் நின்று நிறைவான வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள். "உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்வது வாழ்வில் வெற்றியடைய சிறந்த வழி என்பதை காந்தியம் நிரூபித்திருக்கிறது" என்கிறார் காந்திய தொண்டர் அண்ணாமலை.
வேட்டியை சுதந்திரப் போராட்டத்தின் ஆயுதமாக உருவாக்கி "அரை ஆடை மனிதராக" காந்தியடிகள் மாறிய நெகிழ வைக்கும் வரலாற்றுத் தருணத்தின் நூற்றாண்டு இது. உலகத் தலைவர்களைச் சந்திக்கும்போதும் வேட்டி மட்டுமே உடுத்திய காந்தியடிகளையும், அவரின் உண்மையான வாழ்வையும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் போற்றி வணங்குகிறது.

"என் வாழ்க்கைப் போக்கில் நான் செய்த அனைத்து மாற்றங்களும் முக்கியமான நிகழ்வுகளால் ஏற்பட்டன; இந்த முடிவுகள் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டவை. அதனால் நான் வருத்தப்பட வேண்டியதில்லை. என்னால் அவர்களுக்கு செய்ய முடிந்த ஒரே உதவி நான் எடுத்த முடிவுதான். மதுரையில் என் உடையில் நான் எடுத்த தீவிர மாற்றம். வேட்டி என் அடையாளமானது." - காந்தி
நமது பாரம்பரிய உடையான வேட்டியை, காலத்திற்கேற்ற புதுமைகளோடு நாடு முழுவதும் கொண்டு சேர்த்த ராம்ராஜ் காட்டன், "வேட்டி எனது அடையாளம்" என்ற மகாத்மா காந்தியின் வார்த்தைகளை வேதமாகப் பின்பற்றி கடந்த 40 வருடங்களாக வேட்டியை இந்தியாவின் அடையாளமாக்கியது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. இந்தப் பெருமையை "ராம்ராஜ்" உங்கள் பொற்பாதங்களில் அர்ப்பணிக்கிறது!












Click it and Unblock the Notifications