உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகிடுச்சா! கெட்டியாக சூப்பர் டிப்ஸ்!
சென்னை: உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது தவறுதலாக நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டீர்களா? அதை எப்படி சரி செய்வது? தண்ணீர் நிறைய இருந்தால் மாவு எண்ணெய்யை குடிக்குமே! இனி அந்த கவலை வேண்டாம்.
வடை என்றால் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். அதிலும் மசால் வடையை விட உளுந்து வடையை ரசிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். உளுந்து வடை நன்றாக புசுபுசு என உப்பி சாப்பிடவே சுவையாக இருக்கும்.

உளுந்து மாவில் வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து செய்வது ஒரு விதம். அதே உளுந்து மாவில் வெங்காயம், பச்சை மிளகாயிற்கு பதில் வெறும் மிளகை முழுசாகவோ இல்லை நுணுக்கியோ போட்டு வடை சுடுவது இன்னொரு விதம்.
இரண்டுமே சுவைதான். கடலை பருப்பு வடைக்கு மாவு அரைக்கும் போது பருப்பை கொரகொரப்பாக அரைக்க வேண்டும். அதில் இஞ்சி, பூண்டு, சோம்பு, ஒரு துண்டு பட்டை, இரு கிராம்பு சேர்த்து அரைத்து, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, பெருங்காயம் சேர்த்து வடை செய்யலாம்.
ஆனால் உளுந்து வடைக்கு மாவு அரைப்பது என்பது பக்குவமிருக்கிறது. உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வடிகட்டி கிரைண்டரிலோ அல்லது மிக்ஸியிலோ போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மாவை வெண்ணெய் போல் உருண்டு வரும்.
அப்போது அதற்கு நிறைய தண்ணீரையும் ஊற்றிவிடக் கூடாது. தண்ணீர் நிறைய இருந்தால் வடை வராது, போண்டாதான் வரும். அதிலும் எண்ணெய் அதிகமாக இழுக்கும். இதனால்தான் உளுந்து வடை போடும் போது கவனமாக அரைக்க வேண்டும்.
சிலர் ஐஸ் தண்ணீரை தெளித்து தெளித்து அரைப்பார்கள். ஒரு வேளை தண்ணீர் தெளிக்கும் போது தவறுதலாக நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டால் என்ன செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஒரு வேளை தண்ணீர் அதிகமாகிவிட்டால் அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் மாவு கெட்டியாகிவிடும். இல்லாவிட்டால் ஒரு கப் அரிசி மாவையும் சேர்க்கலாம். சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்தால் மாவு சிறிதளவு கெட்டியாகும். எனவே இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி வடைக்கு மாவு அரையுங்கள்.












Click it and Unblock the Notifications