வாராரு வாராரு அழகர் வாராரு! மதுரை சித்திரை திருவிழா! வைகை அணையிலிருந்து நீர் திறப்பு
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவிற்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாசன கால்வாய் வழியாக திறக்கப்படும் தண்ணீர், மதுரை செல்லூர் கண்மாயில் தேக்கி வைக்கப்பட்டு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதிக்கு தண்ணீரை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

இந்த ஆண்டு 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 33 அடியாக சரிந்து உள்ளது. போதுமான நீர் இருப்பு இல்லாத காரணத்தால் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தண்ணீர் திறக்க முடியுமா என்ற அச்சம் நிலவி வந்தது.
மே 1ம் தேதி உலகப் பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், இருப்பில் உள்ள தண்ணீரைக் கொண்டு மதுரை சித்திரை திருவிழாவிற்கு தண்ணீர் திறக்க முடியுமா என்று பொதுப்பணித் துறையினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.
அணையிலிருந்து ஆற்றுப் படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டால் கடும் வெயில், வறண்டு போன நிலம் இதன் காரணமாக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்த பொதுப்பணி துறையினர் மாற்று ஏற்பாடுகளை ஆராய்ந்தனர்.
வைகை அணையில் இருந்து பாசன கால்வாய் வழியாக மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. மொத்தமாக 170 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று முதல் வருகிற 29ஆம் தேதி வரையில் தண்ணீர் திறக்க முடிவு செய்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையில் இருந்து பாசன கால்வாய் வழியாக மதுரை கொண்டு செல்லப்படும் தண்ணீர் முதற்கட்டமாக மதுரை செல்லூர் கண்மாயில் தண்ணீரை தேக்கி வைத்து அங்கிருந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர மதுரை கொண்டமாரி ஓடை வழியாகவும் மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளனர்.
மதுரை சித்திரை திருவிழாவை போலவே சோழவந்தான் பகுதியிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெறும்.
அந்த நிகழ்விற்கும் தண்ணீர் வழங்கும் வகையில் ராமராஜபுரம் பகுதியில் இருந்து சோழவந்தான் பகுதிக்கு தண்ணீர் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீர்மட்டம் சரிந்து இருக்கும் நிலையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் 4 முதல் 5 அடிவரை சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications