திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல் 24: பள்ளியறை என்றால் தூங்கும் இடம் இல்லைனு தெரியுமா?
சென்னை: மார்கழி மாதம் 24-ஆம் நாள் இன்று! பள்ளியறை என்ற வார்த்தை மிகவும் சிறந்தது. இறைவன் கண்களை மூடினால் என்னவாகும்? எனினும் அவருக்கும் ஓய்வு வேண்டும் என்பதால் பள்ளியறையில் உறங்க வைக்கிறோம். ஆனால் உண்மையில் பள்ளியறை என்றால் விழிப்புடன் இருக்கும் இடம். அதனால்தான் பள்ளிக் கூடம் என்கிறோம், மாணவர்கள் கல்வியில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

திருப்பாவை பாடல் 24
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: மகாபலி சக்கரவர்த்தி ஆண்ட உலகை, மூன்றடிகளால் அளந்து தன் ஆளுகைக்குட்படுத்தியதாகப் பழங்கால நூல்கள் குறிப்பிடுகின்றன. ராமாவதாரத்தில், தன் துணைவி சீதையை மீட்க தெற்கே இலங்கை சென்று, கொடிய அரக்கனான ராவணனைப் போரில் வென்றார்.
சக்கர வடிவில் வந்து இடையூறு செய்த சகடாசுரனை ஒரே உதையில் வீழ்த்தி அழித்தார். கன்று உருவம் கொண்ட வத்சாசுரனை, விளாமர உருவில் இருந்த கபித்தாசுரன் மீது எறிந்து, இரு அரக்கர்களையும் சம்ஹாரம் செய்த சம்பவங்கள் அவரது வீரத்தை வெளிப்படுத்துகின்றன.
இந்திரன் பொழிந்த பலத்த மழையிலிருந்து ஆயர்குலப் மக்களைக் காக்க, கோவர்த்தன கிரியை ஒரு குடையைப்போல் தூக்கிப் பிடித்தார். பகைவர்கள் எவ்வளவு பலசாலிகளாக இருப்பினும், அவர்களைத் தன்னுடைய கரத்திலுள்ள சக்திவாய்ந்த ஆயுதங்கள் கொண்டு அழிக்கும் வல்லமை கொண்டவர்.
திருப்பள்ளியெழுச்சி பாடல் 24
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பாடல் விளக்கம்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் அதிகாலை வழிபாட்டை மாணிக்கவாசகர் விவரிக்கிறார். வீணை, யாழ் இசைக்கலைஞர்கள் பக்திப்பரவசத்துடன் இசைக்க, ரிக் வேதம் ஓதுவோரும், தமிழ் தோத்திரங்கள் பாடுவோரும் இறைவனின் சிறப்பை அங்கு போற்றுகின்றனர்.
'நமசிவாய' என ஜபித்து மலர்மாலைகளுடன் நிற்போர்; கண்கலங்கி, நெகிழ்ந்து மயங்குவோர்; தலையில் கைகூப்பிச் சரணம் புகுவோர் எனப் பலதரப்பட்ட அடியவர்கள் குழுமியுள்ளனர். இத்தகைய ஆழ்ந்த பக்திக்கு முன் தன் பக்தி சாதாரணமானது என மாணிக்கவாசகர் உணர்த்துகிறார்.
"என் இறைவனே! பள்ளியில் இருந்து எழுந்தருளி, என்னையும் ஆட்கொள்ள வேண்டும்!" என்று அவர் சிவபெருமானிடம் மனமுருகிப் பிரார்த்திக்கிறார்.












Click it and Unblock the Notifications