திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 5: பிள்ளைகள் பெற்றோருக்கு பெருமை தேடி தர வேண்டும்!
சென்னை: மார்கழி மாதம் 5-ஆம் நாள் இன்று! வளர்த்த தாய் யசோதைக்கும், பெற்ற தாய் தேவகிக்கும் கண்ணனால் பெருமை! பிள்ளைகள் எப்போதும் நற்பெயரை பெற்றோருக்கு வாங்கித் தர வேண்டும் என்பதை இந்த பாடல் உணர்த்துகிறது.

திருப்பாவை பாடல் 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பாடல் விளக்கம்: கண்ணன் என்றாலே மாயச் செயல்களுக்கு பெயர் பெற்றவன். மதுராவில் பிறந்து யமுனை நதியில் விளையாடியவன்! ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கை போன்றவனே, உன் விஷமத்தனத்தை பொறுக்காத வளர்ப்பு தாய் யசோதை உன் இடுப்பில் கயிற்றை கட்டியதால் அந்த கயிறின் தடம் இடுப்பில் பட்டு தழும்பு ஏற்பட்டது என கண்ணனின் புகழை பாடுகிறார்கள். நாங்கள் நீராடி விட்டு செல்கிறோம். உன் புகழ் பாடினாலே அத்தனை பாவங்களும் தீயில் நுழைந்த தூசு போல் எரிந்து கண்களுக்கு தெரியாமல் போய்விடும். அதாவது கண்ணனை பெற்றதால் தேவகிக்கும் அவனை வளர்த்ததால் யசோதைக்கும் பெருமையை தேடி தந்துவிட்டான் கண்ணன். இப்படி குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கு நல்ல பெயரை வாங்கித் தரவேண்டும்.
திருவெம்பாவை பாடல் 5
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

பாடல் விளக்கம்: பெருமாளும், அந்த 4 முகன், அதாவது பிரம்மனும் இருவரில் யார் பெரியவர் என சண்டையிட்டனர். அப்போது இருவருமே ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் தாங்கள்தான் பெரியவர் என கூறிக் கொண்டனர். இதையடுத்து சிவனிடம் கேட்டால் அவர் நல்ல பதிலை அளிப்பார் என நினைத்து இருவரும் அங்கு போய் கேட்டனர். அதற்கு அவரோ அடிமுடியை கண்டுபிடிக்க இயலாதபடி ஜோதி வடிவமாகிவிட்டார். அப்போது அவர் எனது அடியையும் முடியையும் கண்டுபிடித்து வருமாறு சொன்னார். அதன்படி பிரம்மனோ, சிவனின் தலையை கண்டுபிடித்தார். திருமாலோ ஈசனின் திருவடியை தேடிச் சென்று கண்டுபிடிக்க முடியாமல் போனதை அடுத்து சோகத்துடன் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். இவ்வாறு பாதத்தை கண்டறிய முடியாதவராக அண்ணாமலையார் விளங்கினார். ஆனால் நாம் அவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தும் தூங்கி கொண்டிருக்கிறாய், முதலில் கதவைத் திற என தோழியை எழுப்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications