திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 7: அதிகாலையில் தூங்காதீர்! மார்கழின்னா குளிரத்தான் செய்யும்!
சென்னை: மார்கழி மாதம் 7-ஆம் நாள் இன்று! அதிகாலையில் நீண்ட நேரம் தூங்கக் கூடாது என்பதையும் மார்கழி பனி குளிராக இருக்கிறது என்றும் சொல்லக் கூடாது.
அது போல் பெருமாளுக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் கேசவன் என அழைத்தால் ஓடோடி வருவார். அப்படி என்றால் தடையை நீக்குபவன் என அர்த்தம்.

திருப்பாவை பாடல் 7
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: அறிவில்லாத பெண்ணே! ஆனைச்சாத்தன் என அழைக்கப்படும் வலியன் குருவிகள் கீச்சு கீச்சு என கத்தும் சப்தம் உனக்கு கேட்கவில்லையா, வாசனை மிகுந்த கூந்தலை உடைய ஆயர்குல பெண்கள் தயிர் கடையும் சப்தமும் , அவ்வாறு கடையும் போது அவர்களது அணிகலன்கள் ஒன்றோடு ஒன்று உரசும் ஓசையுமா உனக்கு கேட்கவில்லை? எங்களை எல்லாம் அழைத்துச் செல்வதாக கூறினாயே, தற்போது நீயே தூங்கி கொண்டிருக்கிறாய், நாங்கள் நாராயண மூர்த்தியை வாயார பாடுவது கூடவா உன் காதில் கேட்கவில்லை? இப்படி தூக்கம் வர என்ன காரணம், உன் வீட்டு கதவை முதலில் திற! என தோழிகள் எழுப்புகிறார்கள்.
திருவெம்பாவை பாடல் 7
அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: தாயை விட சிறந்தவளே! உனது சிறப்புகளில் இந்த தூக்கமும் உண்டோ? சிவனுக்குரிய திருநீரையும் ருத்ராட்சத்தையும் யாராவது அணிந்திருந்தாலே அவர்களை பார்த்து சிவசிவ என பயபக்தியுடன் கும்பிடுவாயே, இப்போது நாங்கள் எல்லாம் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்வது உன் காதில் விழவில்லை போலும்! சிவனின் நாமத்தை சொன்னாலே உருகுவாயே, இப்போது நாங்கள் சிவநாமம் பாடியும் கண் விழிக்காதது ஏன், நாங்கள் பாடுவது, கத்துவது கூட உனக்கு கேட்காமல் தூங்கும் அளவுக்கு கல் நெஞ்சம் படைத்தவளே, தூக்கம்தான் உனக்கு முக்கியம் என நினைக்கிறாயா? என தோழிகள், மற்றொரு தோழியை கேட்கிறார்கள்.












Click it and Unblock the Notifications