திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 9: மாட மாளிகை, பஞ்சு மெத்தை வேண்டாம்!
சென்னை: மார்கழி மாதம் 9-ஆம் நாள் இன்று! மாடமாளிகை, பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கிடக்கிறார்கள். இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும். அந்த வைகுண்டத்தை அடைய பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.

திருப்பாவை பாடல் 9
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்: நவரத்தினங்களால் கட்டப்பட்ட அரண்மனையில், சுற்றிலும் விளக்குகள் எரிய, நறுமண வாசனை பரவி, மென்மையான பஞ்சு மெத்தையில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கும் எங்கள் மாமன் மகளே!
உன் வீட்டுக் கதவைத் திறப்பாயா?
எங்கள் அன்பு மாமன் மகளே! நீங்களாவது அவளை எழுப்புங்கள். நீங்கள் எவ்வளவு நேரம் எழுப்பினாலும் அவள் ஒரு பதிலும் சொல்லவில்லையே! அவள் பேச முடியாதவளா? கேட்க முடியாதவளா? அல்லது சோம்பல் அவளை பிடித்துக் கொண்டதா? இல்லையெனில் படுக்கையிலிருந்து எழ முடியாதபடி ஏதோ மந்திரத்தில் சிக்கி விட்டாளா?
உடனே எழுந்திரு! எங்களுடன் சேர்ந்து விளையாடும் தோழியே!
வைகுண்டத்தை ஆளும் நாராயணனின் புனிதமான திருநாமங்களைச் சொல்லு!
திருவெம்பாவை பாடல் 9
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: எல்லாவற்றிற்கும் ஆதியான பரம்பொருளே!
இன்னும் பல லட்சம் ஆண்டுகள் கடந்தாலும் இந்த உலகம் இப்படியே இருக்கும் என்று சொல்லப்படும் அளவுக்கு புதுமை கொண்ட ஈசனே!
உன் அடியார்களை நாங்கள் தாழ்மையுடன் வணங்குவோம்.
அவர்களுக்கு மனமார சேவை செய்வோம். உன் மீது உண்மையான பக்தி கொண்டவர்களே எங்களுக்கு வாழ்க்கை துணையாக வர வேண்டும்.
அவர்கள் சொல்வதை நமக்கு கிடைத்த வரமாக எண்ணி மகிழ்ச்சியுடன் செய்கிறோம். எங்கள் வேண்டுகோளை மட்டும் நீ ஏற்றுக் கொண்டால், உன் அருளால் எங்களுக்கு எந்த குறையும் இல்லாத நல்ல வாழ்க்கை கிடைக்கட்டும்.












Click it and Unblock the Notifications