பக்தர்களுடன் பேசும் சிவன்மலை முருகன்! உலக மாற்றங்களை கணிக்கும் உத்தரவு பெட்டியின் ரகசியம்
சென்னை: சிவன்மலை முருகன், கனவில் வந்து உலகை கணிக்கும் பேசும் தெய்வம் என அழைக்கப்படுகிறார். இந்த கோயிலின் சிறப்பு குறித்து சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ஆத்ம ஞான மையம் எனும் யூடியூப் சேனலில் கூறியிருப்பதாவது: தெய்வம் என்பது வெறும் சிலையல்ல, அது பக்தர்களுடன் உரையாடும் ஒரு சக்தி என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருக்கிறது சிவன்மலை முருகப்பெருமான் ஆலயம்.

ஒரு பக்தரின் கனவில் தோன்றி, "இந்தப் பொருளை என் சன்னதியில் கொண்டு வந்து வை" என்று முருகன் உத்தரவிடுவதும், அந்தப் பொருள் உலக மாற்றங்களைக் கணிப்பதும் கேட்பதற்கே சிலிர்ப்பூட்டும் ஒரு ஆன்மீக அதிசயமாக இருக்கிறது.
ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகே அமைந்துள்ள இந்த சிவன்மலை, பெயரால் சிவனை நினைவூட்டினாலும், உண்மையில் இது முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் திருத்தலம். திரிபுர சம்ஹாரத்தின் போது சிவபெருமான் மேருகிரியை வில்லாக வளைத்தபோது, அதிலிருந்து சிதறிய ஒரு சிறு துளியே இந்த மலையாக உருவெடுத்தது என்பது தல வரலாறு.
தந்தையின் பெயரால் அமைந்த மலையில், சுப்பிரமணிய சுவாமி இங்கே ஆனந்தமாக வீற்றிருக்கிறார்.இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பே இங்குள்ள 'உத்தரவு பெட்டி' தான். ஏதோ ஒரு பக்தரின் கனவில் தோன்றும் முருகன், ஒரு குறிப்பிட்ட பொருளைக் கொண்டு வரச் சொல்வார்.

அந்தப் பொருள் பெட்டியில் வைக்கப்படுவதற்கு முன்னால், பூப்போட்டு உத்தரவு கேட்கப்படும். முருகன் அனுமதித்த பின்னரே அது பெட்டியில் வைக்கப்படும். அந்தப் பொருள் சமூகத்தில் நிகழப் போகும் மாற்றங்களை முன்கூட்டியே உணர்த்தும் ஒரு குறியீடாகப் பார்க்கப்படுகிறது.
உதாரணமாக, இந்தப் பெட்டியில் முன்பு மணல் வைக்கப்பட்டபோது ரியல் எஸ்டேட் தொழில் பெரும் வளர்ச்சி கண்டது. தண்ணீர் வைக்கப்பட்ட காலத்தில் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டன. துப்பாக்கி, மஞ்சள், உப்பு எனப் பல பொருட்கள் இங்கு வைக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றும் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது மண் கலையத்தில் தீர்த்தம், ஏர்கலப்பை மற்றும் பிரம்பு ஆகியவை வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றன.இங்குள்ள மற்றொரு அதிசயம், காசிக்குச் செல்ல முடியாதவர்களின் குறையைத் தீர்க்கும் 'காசி தீர்த்தம்'. வறுமையால் காசிக்குச் செல்ல முடியாமல் வருந்திய ஒரு பெண் பக்தைக்காக, முருகப்பெருமான் இங்கேயே ஒரு நீரூற்றை உருவாக்கி அருளினார்.
இதில் நீராடினால் காசியில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், தீராத காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் இங்குள்ள ஜுவர லிங்கேஸ்வரருக்கு ரசம் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் குணமாகும் என்பதும் ஐதீகம்.
பொதுவாக அனைத்துக் கோயில்களிலும் விநாயகரை வழிபட்ட பின்னரே முருகனைத் தரிசிப்பார்கள். ஆனால், சிவன்மலையில் மட்டும் முருகப்பெருமானுக்கே முதல் வழிபாடு நடத்தப்படுகிறது. சித்தர்கள் இன்றும் வாழும் இந்த மலையில், சிவவாக்கியர் போன்ற மகான்கள் முருகனைத் தரிசித்துப் பேறு பெற்றுள்ளனர்.
பழனியைப் போலவே இங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.இயற்கை எழில் சூழ்ந்த இந்த மலைக்கோயிலுக்குப் படியேறியும் செல்லலாம் அல்லது சாலை வழியாகவும் பயணிக்கலாம்.
நினைத்ததை நடத்தி வைக்கும் 'பேசும் தெய்வமாக' விளங்கும் சிவன்மலை முருகனை ஒருமுறையாவது தரிசிப்பது மனதிற்குப் பெரும் அமைதியையும், வாழ்வில் நல்ல மாற்றங்களையும் தரும் என்பதில் ஐயமில்லை. பக்தர்களின் கனவில் வந்து வழிகாட்டும் அந்த முருகனின் கருணை வியப்பிற்குரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications