250 கிலோ எடை.. ஜொலிக்கும் தங்க முருகன்.. இத்தனை லட்சம் ரூபாயா?.. ஆச்சரியப்பட்ட பழனி
திண்டுக்கல்: பழனியில் தனியார் நகைக்கடையில் தங்க முலாம் பூசப்பட்ட முருகன் சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 4 அடி உயரம், 250 கிலோ எடை சிலையில் 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட முருகன் சிலையை ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
பழனி தண்டாயுதபாணி சிலை நவபாஷணங்களால் ஆனது. பழனி முருக திருவுருவத்திற்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை சாப்பிட்டால் தீராத நோய்களும் கூட தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது. தங்கத்தைப் புடம் போடுவது போல் சித்தர்கள் இந்த நவ பாஷாணங்களைப் புடம் போட்டு அதன் மூலமாக எல்லாவற்றையும் செய்தனர்.

தண்டாயுதபாணி சிலையை போகர் செய்த 9 ஆண்டுகள் ஆனதாம். அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று சேகரித்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாம்.
தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம். அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும். பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்துள்ளார்.
ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.
தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.
விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது. தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.
பழனி தண்டாயுதபாணியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களும் பொதுமக்களும் தற்போது நகைக்கடை ஒன்றுக்குள் சென்று ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். அதற்கு காரணம் அங்குள்ள தங்க முருகன்தான். பழனி ரயில் நிலைய சாலையில் உள்ள தனியார் நகைக்கடையில் தங்க மூலம் பூசப்பட்ட 4அடி உயரம் கொண்ட முருகன் சிலை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் தங்க முலாம் பூசப்பட்ட முருகர் சிலையை திறந்து வைத்தார். பழனியில் நகை கடைகிளை தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில் முருகன் சிலை வைக்கப்பட்டதாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 24கேரட் தங்கமுலாம் பூசப்பட்ட 4 அடி உயரமும் 250கிலோ எடையும் கொண்ட சிலையின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தில் மின்னும் முருகன் சிலையை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications