ஐப்பசி மாத பூஜை..சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு - புதிய மேல் சாந்தி தேர்வு
சபரிமலை : ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். புதிய மேல்சாந்தி தேர்வு நாளை காலை நடைபெற உள்ளது.
கேரளத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் பிரம்மச்சாரி கோலத்தில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜையை தவிர, ஓணம், பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா, விஷூ பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜையையொட்டி கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 17ஆம் தேதி முதல் வழக்கமான பூஜை, வழிபாடுகள் 5 நாட்கள் நடைபெற்றது.

ஐப்பசி மாத பூஜை
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும். மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றிய பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். வேறு பூஜைகள் இல்லை. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் செய்த பின்னர் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார்.

மேல் சாந்தி தேர்வு
7.30 மணிக்கு உஷபூஜைக்கு பின்னர் புதிய மேல்சாந்தி தேர்வுக்கான குலுக்கல் தேர்வு நடைபெறும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்திய நேர்முகத்தேர்வில் சபரிமலை மேல்சாந்திக்கு தகுதி பெற்றுள்ள பத்து பேரில் ஒருவரும், மாளிகைப்புறம் மேல்சாந்திக்கு தகுதி பெற்றுள்ள எட்டு பேரில் ஒருவரும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

சித்திரை ஆட்ட திருநாள்
இந்நிலையில் வரும் 22ஆம் தேதி இரவு வரை பூஜைகள் நடைபெற்று 10 மணிக்கு நடை அடைக்கப்படும். திருவாங்கூர் மகாராஜாவின் பிறந்த நாளைக்காக ஐப்பசியில் ஒருநாள் நடைதிறக்கப்படுவது வழக்கம். இதுவே சித்திரை ஆட்ட திருநாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை ஆட்ட திருநாள் பூஜைக்காக அக்டோபர் 24 மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 25 ஆம் தேதி பூஜைகள் முடிந்து அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சபரிமலை மண்டல பூஜை
மண்டலகால பூஜைகளுக்காக நவம்பர் 16ஆம் தேதி மாலை5 மணிக்கு நடை திறக்கப்படும். இந்த ஆண்டு மண்டல பூஜை கார்த்திகை 1ஆம் தேதி தொடங்க உள்ளது. புதிய மேல் சாந்தி கார்த்திகை 1 முதல் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜை செய்வார்கள்.

மண்டல, மகர விளக்கு பூஜை
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் நடக்கும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு பக்தர்கள் யாத்திரை செல்வார்கள். இந்த ஆண்டு, மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16ஆம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 17ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். டிசம்பர் 27ம் தேதியோடு மண்டல பூஜை முடிந்து சபரிமலை நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகர விளக்கு பூஜைக்காக, டிசம்பர் 30ம் தேதி சபரிமலை நடை மீண்டும் திறக்கப்பட்டு, 2023ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடை சாத்தப்படும். ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும்.

முன்பதிவு
முன்பதிவு செய்வதற்கு, சபரிமலையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.sabarimalaonline.org என்ற முகவரியை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. முன்பதிவு செய்யப்படுவதினால் மண்டல பூஜை தரிசனத்திற்காக தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபரிமலைக்கு வருகை தருபவர்கள் தங்களது வாகனங்களை நிலக்கல் வரை கொண்டுவரலாம். அங்கிருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications