திருப்பதி ஏழுமலையான் கையில் கஜானா சாவி.. கணக்கு ஒப்படைப்பு.. ஸ்ரீரங்கம் பட்டு சமர்பித்த சேகர் பாபு
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு வருடாந்திர கணக்கு வழக்குகள் ஒப்படைக்கப்பட்டு கோவில் கஜானா சாவி பாரம்பரிய முறைப்படி ஏழுமலையான் திருகரங்களில் கொடுக்கப்பட்டது. இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஸ்ரீரங்கம் சார்பில் பட்டு வஸ்திரம், மங்கள பொருட்கள் ஆகியவை ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
ஏழுமலையானை தரிசனம் செய்தால் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் தொலைந்து விடும் என்பது நம்பிக்கை. பல லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்வதோடு பல கோடி ரூபாய் பணத்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த கோவிலில் எத்தனையோ விழாக்கள் நடைபெற்றாலும் யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம் உள்ளிட்ட விழாக்கள் முக்கியமானவை.

இந்த ஆண்டுக்கான ஆனிவார ஆஸ்தான விழா நேற்று திருமலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற்றது. ஆண்டுதோறும் ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பட்டு வஸ்திரத்தையும் மங்கல பொருட்களையும் பரிசளிப்பார். இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஸ்ரீரங்கம் சார்பில் பட்டு வஸ்திரம், மங்கள பொருட்கள் ஆகியவை ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருமலை கோவில் வளாகத்தில் உள்ள கருடன் சன்னதி முன், உற்சவரான மலையப்பர் முன்னிலையில் வருடாந்திர கணக்கு வழக்குகள் ஒப்படைக்கப்பட்டு கோவில் கஜானா சாவி பாரம்பரிய முறைப்படி ஏழுமலையான் திருகரங்களில் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்களிடம் காணிக்கை பெற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புதிய வரவு-செலவு கணக்கு தொடங்கப்பட்டது. மேலும் ஆனி ஆஸ்தான விழாவை முன்னிட்டு புஷ்ப பல்லக்கில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாட வீதிகளில் உலா வந்த மலையப்பசாமியை பக்தர்கள் தரிசனம் செய்தினர்.
இதனிடையே 300 ரூபாய் கட்டணம் செலுத்தி விரைவு தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஏ.வி.தர்ம ரெட்டி டயல் யுவர் EO நிகழ்ச்சிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், UPI மூலம் பணம் செலுத்தும் பக்தர்கள் அறையை காலி செய்த பிறகு 3 முதல் 7 நாட்களுக்குள் அவர்களின் வைப்புத்தொகை ரீஃபண்ட் செய்யப்படும் என்றார். மேலும் கோடைக்காலம் காரணமாக நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் தரிசன டோக்கன்களின் எண்ணிக்கை 20,000 லிருந்து 11,000 ஆக குறைக்கப்பட்டது என்றும் இந்த தரிசன டோக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் தொரிவித்தார்.
அதன்படி 300 ரூபாய் விரைவு தரிசனம் ஆகஸ்ட் முதல் 11 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் பழங்கால கோவில்களை புதுப்பிக்கவும், புதிய கோவில்களை கட்டவும் நிதியுதவி வழங்கப்படும் என்றார். மேலும் மலைக்கோயிலில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் ஆர்டிசி பேருந்துகளில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை போடுமாறு பக்தர்களை தர்ம ரெட்டி வலியுறுத்தினார். சமீபத்தில் அலிபிரி நடைபாதையில் 3 வயது குழந்தைய சிறுத்தை தாக்கிய சம்பவத்திற்குப் பிறகு, திருப்பதி தேவஸ்தான பாத யாத்திரை பக்தர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழுக்களாக செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
இதனிடையே ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதத்திற்கான கல்யாணம், ஊஞ்சல் சேவை, சஹஸ்ர தீபாலங்காரண சேவை போன்ற சேவைகளுக்கான ஆர்ஜித சேவா டிக்கெட் ஒதுக்கீட்டை ஜூலை 21 ஆம் தேதி வெளியிடுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்திற்கான அங்கப்பிரதட்சன டோக்கன் ஜூலை 24 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட டிக்கெட்டுகள் அடங்கும். இந்த சேவா டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் லக்கி டிப் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க இம்மாதம் 20ம் தேதி வரை வாய்ப்பு உள்ளது. பக்தர்கள் இந்த டிக்கெட்டுகள் மற்றும் டோக்கன்களை ' Tirupathibalaji.ap.govov.in ' என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications